புதன், 23 டிசம்பர், 2020

வைதிக_சடங்குகள்_ஏமாற்று_வேலை

#வைதிக_சடங்குகள்_ஏமாற்று_வேலை

திருமணத்தின் போது புரோகிதர்களால் ஓதப்படும் மந்திரங்களில் பல ரிக் வேத த்திலிருப்பவை. குறிப்பாக ரிக் வேதம் 10 ஆவது மண்டலம் 85 ஆவது அநுவாகத்தில் உள்ள மந்திரங்களே அவை. 
ச்ரார்த்த மந்திரங்களில்,
“யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம்” என்றும்
“ருக் வேதம் ஆஷ்வலாயன சூத்திரம்” எனவும் 96 வகைகளுக்கு மேல் உள்ளன. 

வேத மந்திரங்களை ஓதுவதும் பாராயணம் செய்வதும், அத்யயனம் செய்வதும் பிரம்ம வித்தை அல்லது பிரம்ம வித்யா எனப்படுகிறது. இந்த பிரம்ம வித்தையை கற்றுக் கொள்ளும் அதிகாரம் முதல் மூன்று வர்ணத்தவருக்கு மட்டுமே உரியது என ஸ்மிருதிகள் வழியாக கட்டளை பிறப்பிக்கப்படுகிறது.வேத மந்திரங்களின் மேல் உள்ள அதிகாரத்தை நிலைநாட்டும் முகமாகவே முதல் மூன்று வர்ணத்தவர்கள் பூணூலை அணியும் காயத்ரி தீட்சை சடங்கு நிகழ்கிறது. நான்காம் வர்ணத்தவரான 
சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும், அவர்ணர்களுக்கும் வேதங்களின் மேல் ஒரு அதிகாரமும் இல்லை.அதனால்தான், வேத மந்திரங்களை காதாலும் அவர்கள் கேட்கக் கூடாது என பிரம்ம சூத்திரம் மற்றும் ஸ்மிருதிகளில் எழுதப்பட்டுள்ளது. 

வேத மந்திரங்களுக்கு அதிகாரம் இல்லையே தவிர அவர்கள் புராணத்தில்,உபநிடத,தர்ம சாஸ்திரங்களில் உள்ள மந்திரங்களை வாசிப்பதோ பாராயணம் செய்வதோ தடை ஏதும் இல்லை என்கிறார்கள்.காரணம் இந்த நூல்களில் சூத்திரனும் பெண்களும் முதல் மூன்று வர்ணத்தவருக்கு அடிமைச் சேவகர்களாக எப்படி இருக்க வேண்டும் என்பதும், தவறினால் என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்பது விளாவாரியாக எழுதப்பட்டுள்ளது. அதனால்தான் புராண மந்திரங்களை படியுங்கள் என்கிறார்கள். 

சாஹூ மகராஜ் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைக் கூறுவது பொருத்தம் எனக் கருதுகிறேன். 
ஆற்றில் சாஹூ மகராஜ் குளிக்கையில் புரோகிதர் ஒருவர் மந்திரங்களை ஓதுவது வழக்கம். ஒரு நாள் அவர் ஆற்றில் நீராடுகையில் அவரைக் காண வந்தார் அமைச்சர் ஒருவர். அவர் சாஹூ மகராஜிடம் கூறுகிறார், புரோகிதர் ஓதுவது எதுவுமே வேத மந்திரங்கள் இல்லை, அவை அனைத்தும் புராணங்களில் உள்ள மந்திரங்கள் என்று.இதை புரோகிதரிடம் கேட்க, அவர் சொல்கிறார் வேத மந்திரங்களை இன்னொரு வேதியருக்கோ இரு பிறப்பாளருக்கோ மட்டுமே ஓத முடியும். மற்றவர்களுக்கு சாதாரண புராண மந்திரங்களை மட்டுமே ஓத முடியும் என்கிறார். இதை அறிந்த சாஹூ மகராஜ் முதன் முதலில் பிராம்மணர்கள் அல்லாதோருக்கு கல்வி வேலை வாய்ப்பில் முதலிடம் அளித்தார்.அவர்களுக்கு இட ஒதுக்கீட்டையும் அவர்தான் முதன் முதலில் அறிவித்தார்.

வேத மந்திரங்களை ஏன் சூத்திரனுக்கு உபதேசிக்கக் கூடாது என்பதை விளக்கும் விதமாக ஒரு கதையினை மகாபாரதத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். இது,
அநுசாஸன பர்வம் 31 ஆவது அத்தியாயத்தில் “தாழ்ந்தவருக்கு உபதேசிக்கலாகாதென்பதற்கு உதாரணமாக ஒரு ரிஷி சூத்திரன் இவர்களின் கதை”யில் சொல்லப்படுகிறது.

இந்தக் கதையில் பிராம்மண ரிஷிகளுக்கு பணிவிடை செய்ய வந்த சூத்திரன் சுசுரூஷை யில்(அடிமை வேலை) மனமில்லாது ரிஷிகளைப் போல தவம் செய்ய விரும்புகிறான். அவனுக்கு பிராம்மண ரிஷி ஒருவர் உதவி செய்து பித்ரு ச்ரார்த்தம் போன்ற கர்ம காரியங்களையும் செய்து பிரம்ம வித்யாவை கற்பிக்கிறார். அடுத்த பிறவியில் சூத்திரன் ஒரு மன்னனாகவும், ரிஷி ஒரு புரோகிதராகவும் பிறக்கிறார். ஹோம காரியங்களை அந்தப் புரோகிதர் நடத்தும் போதெல்லாம் அந்த மன்னன் சிரிக்கிறான், அதனால் எரிச்சலான புரோகிதர் சிரிப்பிற்கான காரணத்தைக் கேட்கிறார். அந்த மன்னன், முன் ஜென்மத்தில் சூத்திரனாயிருந்து தவமிருந்ததையும் ச்ரார்த்த காரியங்களில் தர்ப்பங்களிலும் ஹவ்யகவ்யங்களில் ரிஷியாய் இருந்து  உதவி செய்ததைக் கூறுகிறான்.தனக்கு உபதேசித்ததால் ரிஷியாய் இருந்தவர் புரோகிதராய் தாழ்ந்த பிறவி எடுக்க காரணமாயிற்று என்றான்.அதை எண்ணி சிரித்தேன் என்கிறான்.

பிராம்மணன், இருபிறப்பாளர்களைத் தவிர தாழ்ந்த வர்ணத்தவர்களுக்கு உபதேசம் செய்வதினால் அந்த பிராம்மணன் தாழ்ந்த வர்ணத்தவர்களின் பாவத்தை அடைவான் என்பதை விளக்குகிறது இந்தக் கதை. 

மன்னர்கள் ராஜாக்கள் ஜமீந்தார்கள் காலங்களில் கடவுள் பெயரில் பயமுறுத்தி மந்திரங்களைச் சொல்லி,யாகம் வேள்விகள் நடத்தி பெருமளவில் தானங்களைப் பெற்று உடல் உழைப்பே இல்லாமற் வசதியாய் வாழ்ந்தவர்கள் வேதியர்கள். சமீபத்திய நூற்றாண்டுகளில் நடந்த ஐனநாயகம் மற்றும்  அரசு மாற்றங்களால் மன்னர்களைப் போல இவர்களை பொன், நிலம், பொருள் கொடுத்து ஆதரிப்பார் இல்லை. இதனால்,
அரசனுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் செய்த சடங்குகளை,சூத்திரனுக்கும் வேத மந்திரங்களை ஓதி சடங்குகளை நடத்தும் நிலைக்கு வேதிய புரோகிதர்கள் ஆளாகினர். 
அதாவது சூத்திரர்களை அளிக்கும் காணிக்கை,தானத்தை,பரிசை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
இதற்கு பரிகாரம் செய்யும் விதமாகவே சூத்திரர்களுக்கும்,அவர்ணர்களுக்கும் பூணூல், பவித்திரம் போன்றவற்றை விவாஹம், திதி ச்ரார்த்த சடங்குகள் முடியும் வரை தற்காலிகமாக அணிவிக்கிறார்கள்.அதாவது எதிரில் உள்ளவரை பிராம்மணராக பாவித்து மந்திரங்களை ஓதத் தொடங்குகிறார் புரோகிதர்,அதனால் ஏற்படும் பாவம் அவரை சேராது என்றும் நம்புகிறார்.

இதை அறியாத சூத்திர மற்றும் அவர்ணர்கள் பூணூல் அணிவதை மரியாதையாகவும் கௌரவமாகவும் நினைந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் அவலத்தை காண முடிகிறது.வேதியர்களைக் கொண்டு நடத்தப்படும் சடங்குகளால் புரோகிதர்களைத் தவிர வேறு யாருக்கும் ஒரு பயனும் இல்லை என்பதே உண்மை. 

புரோகிதத் தொழில் ஏமாற்று வேலை என்பதை ஒவ்வொரு வேதியரும் நன்கு அறிவார். நல்ல வேளை வேதியர்களில் படித்தவர்கள் மாற்று உத்யோகம், தொழில்களுக்குப் போனதால் புரோகிதத் தொழிலை நம்பி உள்ளவர்கள் குறைந்து வருகிறார்கள்.படித்து வேலைக்குச் சென்ற வேதியர்களில் சம்ஸ்கார கர்மாநுஷ்டானங்களை செய்கிறவர்களும் குறைந்துள்ளார்கள்.இதைச் செய்து வைக்கும் கணபாடிகள்,வாத்தியார்களும் குறைவே. இது ஒரு நல்ல அறிகுறி! ஆனால் வைதிக சடங்குகளில் மோகம் கொண்டுள்ள சூத்திர அடிமைகளின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது வருந்தத் தக்கது.

கோயில்களில் பூசை செய்யும் பூசாரிகள் தொடாமல் கொடுக்கும் விபூதி கும்குமம் இவற்றைப் பெற்றுக் கொண்டு தங்களது அடிமை சாசனத்தை தினமும் புதிப்பித்து வருகிறார்கள் சூத்திரர்,பெண்கள் மற்றும் அவர்ணர்கள்.

விவாஹங்களில் ஓதப்படும் அபத்தமான ஆபாசமான மந்திரங்கள் பற்றி அறிய விரும்புகிறவர்கள் எனது முந்தைய பதிவினை வாசிக்கவும். அதன் link இதோ:

https://www.facebook.com/100004717540308/posts/1745785462255355/?d=n
- தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 23.12.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக