திங்கள், 31 டிசம்பர், 2018

ஜெகத்குரு என்றால் புளுகுவதில் ஜெகதலப்பிரதாபர் என்று பொருளோ!



கடவுள் அரூபி என்று சொல்பவர்களும் இவர்கள் தான். அய்ம்புலன்களுக்கும் புலப்படாதவர் என்று புளுகுவதும் இவர்கள்தான்.

இவ்வளவையும் சொல்லிவிட்டு கடவுளுக்குப் பெண்டாட்டி, வைப்பாட்டி ஜோடி சேர்ப்பவர்களும் பிள்ளைக்குட்டிகளைக் கற்பிப்பவர்களும் இவர்கள்தான்.

கடவுளுக்கு உருவப் பொம்மைகள் செய்து கோயில் கருவறையில் வைத்துப் பூஜை செய்பவர்களும் இவர்கள்தான். அதற்குப் புரோக்கர்களாக புரோகிதர்களை நியமித்து சுரண்டல் தொழிலை ஓகோ என்று நடத்துபவர்களும் இவர்கள்தான்.

ஆறுகால பூஜை போட்டு தாட்டிலையில் படையல் போடுபவர்களும் இவர்கள்தான்.

கடவுளுக்குப் பள்ளியறை ஏற்பாடு செய்பவர்களும் இவர்கள்தான்.

கேட்கிறவன் ஏமாளியாக இருந்தால், எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டியது என்பானாம்.

அதைப் போன்றதுதான் இதுவும். ஜெகத்குரு என்றால்  அதன் பொருள் புளுகுவதில் ஜெகதலப் பிரதாபர் என்று பொருளோ!

அய்யப்பன் மூக்கின் மீது விரல் வைத்திருந்தானாம். தீட்சதர் எதையோ சொல்லப்போய் மூக்கின் மீது விரலை வைத்த அய்யப்பன் அதை எடுத்து விட்டானாம்.

சிவனும், விஷ்ணுவும் (மோகினி) உறவாடி அய்யப்பன் பிறந்தானாம். சிவனை அப்பா என்பதும், பார்வதியை அம்மா என்பதும் சரி, ஒரு வகையில் சிவன் புணர்ந்ததால், விஷ்ணு அம்மாவாகி விடுகிறான். விஷ்ணுவின் மனைவியை என்ன என்று அழைப்பது என்று மூக்கின் மீது விரலை வைத்த அய்யப்பன் யோசித்தானாம்.

கடவுள் குடும்பமே எப்படிப்பட்ட களவாணி குடும்பம் என்பதற்கு இது ஒன்றே போதும். மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவைக் கண்டு காமவெறி கொண்டான் சிவன் என்பதுதான் கடவுளுக்கான யோக்கியதையா? ஒருக்கால் அய்யப்பன் இப்படி யோசித்திருப்பானோ! விஷ்ணுவாகிய நான்தான் மோகினி அவதாரம் என்பதைக்கூட ஞான திருஷ்டியால் அறிய முடியாத ஹரன் (சிவன்) எப்படி கடவுளாவான் என்று அய்யப்பன் மூக்கின் மீது விரலை வைத்து யோசித்திருப்பானோ!

இக்காட்சியை ஜெகத் குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியும் (வேலிக்கு ஓணான் சாட்சி) வேறு கண்டாராம். கலகலவென சிரித்தாராம். புளுகினாலும் பொருத்தமாகப் புளுகுங்கடா -  அட போக்கத்தவன்களா என்று பாடினார் உடுமலை நாராயணகவி. அதுதான் இங்கு நினைவுக்கு வந்து தொலைகிறது.

-  விடுதலை ஞாயிறு மலர், 24.11.18

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

வருணங்களின் அமைப்பு முறை


தந்தை பெரியார்
பஞ்சமர் - பெயர்ச்சொல்!
அருகிவரும் வழக்கு: நான்கு வகையாகப் பிரிக்கப்பட்ட (இந்துக்களில்) பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோர் அல்லாத அய்ந்தாவது ஜாதியினர்.
சூத்திரர்கள் தாழ்ந்தவர்களா? பஞ்சமர்கள் தாழ்ந்த வர்களா?
தீண்டாமை என்பது என்ன? தீண்டாமை காங்கிரஸில் ஒரு திட்டமாய் வருவானேன்? என இவ்விரண்டு விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.
தேசத்தில் நமது இந்து மதத்தில் மாத்திரம்தான் தீண்டாமை அனுஷ்டிப்பதாக நாம் காண்கிறோம். மனிதனுக்கு மனிதன் பார்ப்பது, பேசுவது, பக்கத்தில் வருவது, தொடுவது முதலானவைகள் தீண்டாமையின் தத்துவங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு ஆதாரம் என்னவென்றால் வேதமென்று சொல்லுவதும், சிலர் சாஸ்திரம் என்று சொல்லுவதும், சிலர் ஸ்மிருதி என்று சொல்லுவதும், சிலர் புராணங்கள் என்று சொல்லுவதும், சிலர் பழக்க வழக்கங்கள் என்று சொல்லுவதும் இப்படிப் பலவிதமாக ஆதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன.
பழக்கத்தில் தீண்டாமையானது வருணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும், வரிசைக்கிரமத்தில் ஒருவருக் கொருவர் தாழ்ந்தவரென்றும், வருணாசிரமமானது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என அய்ந்து வகை ஜாதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றன வென்றும், இவற்றிற்கு ஆதாரம் மனு ஸ்மிருதி என்றும் சொல்லப்படுகின்றது. தமிழர்களாகிய நமக்கு இவை எதுவும் சார்ந்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில் வருணாச்சிரமம் என்பதும், ஜாதி என்பதும், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும் மனுதர்ம சாஸ்திரமே, மனுஸ்மிருதியே என்பதும் ஆகிய வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளல்ல. தமிழ் நாட்டி னருக்கோ, தமிழருக்கோ இவ்வன்னியபாஷைப் பெயர்கள் பொருந்துவதற்கே நியாயமில்லை. தவிர இந்த ஜாதிகளுக்கே ஏற்பட்டிருக்கிற குணமும் தமிழர்க்குப் பொருந்தியது என்று சொல்லுவதற்கும் இடமில்லை. உதாரணமாக, நம்மில் பெரும்பான்மையோர் சூத்திரர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். நாமும் நம்மை அனேகமாய் சூத்திரர்கள் என்றே சொல்லிக் கொள்ளுகிறோமென்பதை பற்றி இப்பெழுது ஆராயத் தேவையில்லை.
சூத்திரர் என்பது என்ன ? நாம் சூத்திரர்களா என்பதைக் கவனிப்போம். சூத்திரன் என்றால் மனுஸ்மிருதியில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமை, யுத்தத்தில் ஜெயித்து அடிமையாக்கப்பட்டவன், அடிமைத் தொழிலுக்காக ஒருவனால் மற்றொருவனுக்குக் கொடுக்கப்பட்டவன், வைப்பாட்டியின் மகன் முதலிய ஏழுவித மக்களுக்கு சூத்திரர்கள் என மனுதர்ம சாஸ்திரத்தில் பெயரிடப்பட்டி ருக்கிறது. அப்பெயரை நாம் ஏற்றுக்கொண்டு நம்மை நாமே சூத்திரர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறோம்.
அடுத்தாற்போல் பஞ்சமர்கள் எனச் சொல்லப்படுவது யாரை என்பதே நமக்குச் சரியாய் ஆதாரத்தின் மூலமாய் தெரிந்து கொள்ளக்கூட முடியவில்லை. வழக்கில் சக்கிலி, பறையன், வண்ணான், நாவிதன், பள்ளன், குடும்பன், சாம்பன், வள்ளுவன் சிற்சில இடங்களில் தீயர், ஈழவர், நாடாரையுமே சேர்த்து மேலே சொல்லப்பட்ட பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர ஆகிய நான்கு வருணத்தாரும் மேற்கண்ட முறைப்படி கொடுமையாக நடத்தப்படுவதைப் பார்க்கிறோம். இவர்களையே பஞ்சமர்கள் என்று சொல்லுவதையும் கேட்கிறோம். அனேகமாய், நாம் கூட அவர்களை அதே மாதிரியாக நடத்துகிறோம். அப்படி நடத்தினபோதிலும் சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம் தாழ்ந்தவர்களா ? பஞ்சமர் என்று சொல்லப்படுகின்ற அவர்கள் தாழ்ந்தவர்களா? என்பதை யோசித்துப் பார்த்தால் பஞ்சமர்களைவிட சூத்திரர்களே தாழ்ந்தவர்கள் என்பது தெரியவரும். மேலே கூறப்பட்டபடி சூத்திரர் என்பதற்கு ஆதாரப்படி தாசிமகன் என்பதுதான் பொருள். தத்துவமாய்ப் பார்த்தால் பறையன், சக்கிலியை விட தாசிமகன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது தாத்பரியம். என்னை ஒருவன் சூத்திரன் என்று அழைப்பதைப் பார்க்கிலும் பஞ்சமன் என்று அழைப்பதில்தான் நான் சந்தோஷப்படுவேன்.
இவ்விதக் கெடுதியான பெயர் நமக்கு இருப்பதைப் பற்றி நாம் கொஞ்சமும் கவனியாமல் நிரபராதிகளாய் இருக்கும் நமது சகோதரர்களைக் காண, அருகில் வர, தொட, பேச, பார்க்கமுடியாதபடி கொடுமையாய் நடத்தி ஊருக்கு வெளியில் குடியிருக்கும்படியும், ஸ்நானம் செய்வதற்கே, வேஷ்டி துவைத்துக் கொள்ளுவதற்கே, வீதியில் நடப்பதற்கே, சில இடங்களில் தாகத்திற்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படும்படி நடத்துகிறோம். மேற்கண்ட கொடுமையான குணங்கள் அவர்களோடு மாத்திரம் நில்லாமல் அனேக சமயங்களில் நாமும் நமக்கு மேல் வருணத்தார் என்று சொல்லுகின்றவர்களும்கூட அனுபவிப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக, சூத்திரர்களை அதற்கு மேல்பட்ட மூன்று வருணத்தார்களும் தொடுவதில்லை என்பதையும், இவர்கள் முன்னிலையில் அவர்கள் ஆகாரம் எடுத்துக்கொள்வதில்லை என்பதையும், சிற்சில சமயங்களில் இவர்களேடு பேசுவதும் பாவம் என்பதையும் அனுபவிக்கிறோம். அதே மாதிரி வைசியர் களிடத்திலும் சத்திரியர்கள், பிராமணர்கள் நடந்து கொள்ளுவதையும், சத்திரியர்களிடத்திலும் பிராமணர் நடந்து கொள்ளுவதையும், பிராமணர்களுக்குள்ளேயும் ஒருவருக்கொருவர் தாழ்மையாக நடத்தப்படுவதையும் பார்க்கிறோம். உதாரணமாக, திருச்செந்தூர், மலையாளம் முதலிய இடங்களில் உள்ள பிராமணர்கள் தாங்கள் உயர்ந்தவர்களென்றும், மற்ற பிராமணர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கருதி, தங்களுக்கு அனுமதியுள்ள இடத்தில் மற்றொருவர் பிரவேசிப்பது தோஷமெனக் கருதுகிறார்கள்.
நம் நாட்டிலேயும் முறைப்படி நடக்கிற பிராமணர்கள் என்று சொல்லுவோர்கள் சத்திரியனிடத்திலேயோ, வைசியனிடத்திலேயோ, சூத்திரனிடத்திலேயோ பேசுகின்ற காலத்தில், ஜலமலபாதிக்குப் பேகும்போது எப்படி பூணுலைக் காதில் சுற்றிக்கெண்டு போகிறார்களோ அதுபோல பெரிய தீட்டென நினைத்துப் பூணூலைக் காதில் சுற்றிக்கொண்டு பேசுகிறார்கள். இப்படி நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை அல்ல. ஒருவர் தனக்குக்கீழ் இருப்பவரைத் தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்லுவதும், அதே நபர் தனக்குமேல் உள்ளவருக்கு தான் தீண்டாதவராகவும், பார்க்கக்கூடாதவராகவும் இருப்பது வழக்கமாயிருப்பது மாத்திரம் அல்லாமல், இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற ஜாதியாயிருக்கிற அய்ரோப்பியருக்குத் தீண்டாதவராகவும், இன்னும் தாழ்மையாகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம். இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது கேவலம். பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்ற வேண்டுமென்பதல்லாமல், அவர் களுக்கு இருக்கும் கொடுமைகளை மாத்திரம் விலக்க வேண்டுமென்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் இழிவையும், கொடுமையையும் நீக்கவேண்டும் என்பதுதான் தீண்டாமையின் தத்துவம்.
இதைச் சொல்லுகிறபோது ஆ! தீண்டாமை விலக்கா? பஞ்சமரையா தெருவில் விடுவது? அவர்களையா தொடுவது? அவர்களையா பார்ப்பதென்று ஆச்சரியப்பட்டு விடுகிறார்கள். நம்மில் ஒரு கூட்டத்தாராகிய சூத்திரர் என்று சொல்லிக்கொள்ளும் நாம், நம்மில் ஒருவன் சூத்திரன் என்று அழைக்கும் போது ஆ ! நம்மையா, சர் பட்டம் பெற்ற நம்மையா, ஜாமீன்தாராகிய நம்மையா, லட்சாதிகாரியாகிய நம்மையா, சத்திரம் சாவடி கட்டிய நம்மையா, தூய வேளாள னாகிய நம்மையா, பரிசுத்தனாகிய நம்மையா, உத்தமனான நம்மையா, மடாதிபதியான நம்மையா இன்னும் எத் தனையோ உயர்குணங்களும், எவ்வித இழிவுமற்ற நம்மையா தேவடியாள் மகன், வைப்பாட்டி மகன், அடிமையென்று அர்த்தம் கொண்ட சூத்திரன் என்று சொல்லுவதென ஒருவரும் வெட்கப்படுவதேயில்லை. மலையாளம் போன்ற சிற்சில இடங்களில் நாயர்கள் என்று சொல்லுவோர் தங்களைச் சூத்திரர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றனர்.
இந்த இழிவு, சூத்திரர்கள் என்பவரை எப்படிக் கட்டிக் கொண்டது என்பதைப் பார்ப்போமாகில் தங்களுக்குக் கீழ் ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் தாழ்மைப்படுத்திய பாவமானது இவர்களைத் தேவடியாள் மகன் என்று இன்னொருவர் கூப்பிடும்படியாகக் கடவுள் வைத்துவிட்டார். நமக்கும் அதன் பலனாய் நமக்குக் கீழ் ஒருவர் இருந்தால் போதுமென்று நினைத்து மகிழ்ந்து கொண்டு நம்மை ஒருவன் வைப்பாட்டி மகனெனக் கூப்பிடுகிறானே, கூப்பிடுவது மாத்திரம் நில்லாது கல்லும் காவேரியும் உள்ளவரை அழியாமல் எழுதி வைத்து விட் டானே, அஃதோடு நில்லாமல் நம்மை நாமே வைப்பாட்டி மகனென்று சொல்லிக் கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டதே என்றுகூட கவலைப்படுவதேயில்லை. இது எதைப் போலிருக்கிற தென்றால் அரசியல் வாழ்வில் இந்துக்களுக்கு இந்துக்கள் என்று சொல்லுவதற்கில்லாமல் நம்முடைய அரசாங்கத்தார் முகமதியரல்லாதார் என்று அழைப்பது போலவும், நாமும் இந்துக்களாகவும், இந்தியாவின் புராதனக்காரராகவும் இருக்கிற நம்மை அல்லாதார் என்கிற அணியைக் கூட்டி மகமதியர் அல்லாதார் என்று ஏன் அழைக்க வேண்டும் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எப்படியானாலும் உத்தியோகமோ, பதவியோ கிடைத்தால் போதுமென்கிற இழிவான ஆசையில் பட்டு மகமதியரல்லாதார் பிரிவுக்கு யான் சட்டசபை அங்கத்தினனாய் நிற்கிறேன் என்று கவுரவமாய் நம்முடைய படித்தவர்கள், பெரியோர்கள், பணக்காரர்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியார்கள் என்று சொல்லக்கூடிய கூட்டத்தார் நடந்து கொள்வதுபோல் இருக்கிறது.
ஆகவே, நம்மில் யாரும் நமக்கு இவ்வித இழிவுப் பெயர்கள் இருப்பதை லட்சியம் செய்யாமல் சுயநலமே பிரதானமாகக் கருதி அலட்சியமாயிருக்கிறோம். யாராவது இவற்றைக் கவனித்து இவ்விதக் கொடுமையும், இழிவும் நமக்கு ஒழிய வேண்டுமென்று முயற்சித்தால் அது சுயநலக்காரரால் துவேஷமென்று சொல்லப்பட்டுவிடுகிறது.
பறையன், சக்கிலி முதலியோரை நாம் ஏன் தொடக்கூடாது, பார்க்கக்கூடாது என்கிறோம் என்பதைச் சற்று கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமாயிருக் கிறான்; அழுக்குடை தரிக்கிறான்; அவன்மீது துர்நாற்றம் வீசுகிறது; அவன் ஆகாரத்திற்கு மாட்டு மாமிசம் சாப் பிடுகிறான்; மாடு அறுக்கிறான்; மற்றும் சிலர் கள் உற்பத்தி செய்கிறார்கள் என்கிறதான குற்றங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இவர்கள் பார்வைக்கு அசிங்க மாகவும், அழுக்கான துணிகளுடனும், துர்வாடையுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும், இதற்கு யார் பொறுப்பாளி என்றும் யோசியுங்கள். அவர்களை நாம் தாகத்திற்கோ, தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது குளிக்கவோ, வேஷ்டி துவைக்கவோ வழியெங்கே? நாம் உபயோகிக்கும் குளமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ, கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய் கிறோம். அதனால் அவர்கள் அப்படியிருக்கிறார் களேயல்லாமல் அது அவர்கள் பிறவிக்குணமாகுமா ? நம்மை யாராவது குளிக்க விடாமலும், வேஷ்டி துவைக்க விடாமலும் செய்துவிட்டால் நம்மீது துர்நாற்றம் வீசாதா? நம் துணி அழுக்காகாதா? நாம் பார்வைக்கு அசிங்கமாய் காணப்பட மாட்டோமா? அவர்களுக்குக் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நாம் சவுகரியம் செய்து கொடுத்து விட்டால் பின்னும் இவ்விதக் குற்றமிருக்குமா? ஆதலால் நாம்தான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாயிருக் கிறோம்.
மாடு தின்பது முதலியவைகளால் எப்படித் தீண்டாத வனாய் விடுவான்? அய்ரோப்பியர், மகமதியர் முதலானோர் தின்பதில்லையா? அவர்களை நாம் தீண்டாதார், பார்க் காதார் என்று சொல்லக்கூடுமா? அப்படியே சொல்வ தானாலும் மாடு தின்பது என்ன ஆடு, கோழி தின்பதை விட அவ்வளவு பாவம்? ஆடு, கோழி, பன்றி தின்பவர்களை நாம் பஞ்சமரைப்போல் நினைப்பதில்லை. கோழியும், பன்றியும் தின்னாத வஸ்துவையா மாடு தின்கிறது? செத்த மாட்டைத் தின்பது உயிருள்ள ஜெந்துவை உயிருடன் வதைத்து கொலை செய்து சாப்பிடுவதை விட உயிரற்ற செத்துப்போன பிராணியின் மாமிசத்தை  - மண்ணில் புதைப்பதை வயிற்றுக்கில்லாத கொடுமையால் சாப்பிடுவது எப்படி அதிக பாவமாகும்? மாடு அறுப்பது பாவமென்றால் ஆடு, கோழி அறுப்பதும் பாவம்தான். மனித பிணத்தையும் கூட வைத்திய சாலைகளில் அறுக்கிறார்கள். அவரை நாம் பஞ்சமரென்று சொல்லுகிறோமா?
கள் இறக்குவது குற்றமென்றும், அது பாவமென்றும் அதனால் அவர்களைத் தொடக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்றும் சொல்வது எவ்வளவு முட்டாள்தனமாகும். அந்தக் கள்ளைக் குடிப்பவனும், அதற்காக மரம் விடுபவனும், அந்த வியாபாரம் செய்பவனும், அதைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவனும் தொடக்கூடியவன், தெருவில் நடமாடக்கூடியவன் என்றால் அதை ஜீவனத்தின் காரணமாய் இறக்குவது மாத்திரம் எப்படிக் குற்றமாகும்? உற்பத்தி செய்வது குற்றமென்றால் சாராயம், கஞ்சா, அபின், பிராந்தி இவைகள் உற்பத்தி செய்கிறவர்கள் எப்படித் தொடக் கூடியவர்களாவார்கள் ? இதில் பணம் சம்பாதிக்கும் நமது அரசாங்கத்தை இன்னும் சம்பாதிக்க விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உத்தியோகத்திற்கு நாம் தொங்குகிறேம். இந்தப் பணத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கல்வியை நாம் கற்கிறோம்; இவ்வளவு செய்பவர்கள் யோக் கியர்கள்; தீண்டக் கூடியவர்கள்; பார்க்கக் கூடியவர்கள். ஆனால் மேல் சொன்னவர்கள் மாத்திரம் தீண்டவும், பார்க்கவும் கூடாதவர்கள் என்றால் இது என்ன கொடுமை? இந்த ஜனங்களுக்கு சுயராஜ்யம் எப்படி வரும்? கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால் இப்படி கொடுமைப் படுத்தும் சமூகத்தை ஆதரிப்பாரா? இவர்களுக்கு விடு தலையை அளிப்பாரா? அல்லது இவர்களை அடியுடன் தொலைத்து அடிமைப்படுத்துவாரா? என்பதை நினையுங்கள்.
இந்தக் கொடுமையை நம்மிடம் வைத்துக்கெண்டு வெள்ளையர் கொடுமை என்றும், கென்யா, தென்னாப் பிரிக்காவில் வெள்ளையர் ஜாதி இறுமாப்பென்றும் நாம் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமும், பார்ப்பவர்க்குக் கேலியுமாகும் என்பதைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டில் பிறந்த நம் சகோதரரை நாம் பார்த்தால் பாவம், கிட்டவந்தால் பாவம், தொட்டால் பாவம் என்று சொல்லிக்கொண்டு அதற்கு ஆதாரம் காட்டவும், எழுதி வைத்துக் கொண்டி ருக்கும் அக்கிரமத்தை விடவா 1818 - வது வருஷத்து ஆக்ட்டும், ரௌலட் ஆக்ட்டும், ஆள்தூக்கிச் சட்டமும் 144, 107, 108 பிரிவுப் பிரயோகமும் அக்கிரமமானது என்பதைச் சற்று யோசியுங்கள். நம்மவரை நாமே செய்யும் கொடுமையைவிடவா அன்னியர் கொடுமை பெரிது? மதுரைக் கோவிலில் குடிகாரன், மாமிசம் சாப்பிடுகிறவன், குஷ்டரோகி முதலிய தொத்து வியாதியஸ்தர் முதலியவர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். அன்னிய மதஸ்தர்கள் சுற்றுப்பிரகாரம் கடந்து செல்லலாம். ஆனால் நமது சகோ தரர்களான நாடார்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களும், தர்மிஷ்டர்களும், ஜீவகாருண்யமுடையவர்களும், படித்த வர்களுமாயிருந்தாலும் வாசப்படி மிதிக்கக்கூடாது, மிதித்தால் தெய்வத்தின் சக்தி குறைந்துபோகுமாம். இதற்கு ஆதாரமும் இருக்கிறதென்றால், ரவுலட் சட்டத்திற்கும், ஆள்தூக்கிச் சட்டத்திற்கும் உள்ள ஆதாரங்களை நாம் குற்றம் சொல்வானேன்? இவ்விதம் கொடுமைகள் செய்யும் ஜனசமூகத்திற்கு சத்தியம், தர்மம் என்று பேசிக்கொள்ள யோக்கியதை ஏது? உண்மையில் ஆதாரம் என்று சொல்லக்கூடிய மாதிரியாவது நாம் நடக்கிறோமா? தந்தை பெரியார் அவர்கள் காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து...
- குடிஅரசு - 7.6.1925, 21.6.1925, 28.6.1925 நூல்:- பெரியார் களஞ்சியம், குடிஅரசு தொகுதி -1
- விடுதலை நாளேடு, 9.12.18

வெள்ளி, 7 டிசம்பர், 2018

இந்து மத ஆராய்ச்சி - பெரியார்

( #95வயது_கிழவர்_சாவதற்கு_ஒருவாரம் #முன்பு_இப்படி_தீப்பொறி_பறக்க_பேச #முடியுமெனில்_அவர்தாம்பெரியார்! )

இந்த ஆகமம்ணா என்ன?
இதுக்கு ஆரு தலைவன்?
எப்ப எழுதினது?
எவன் சொன்னவன்?

நாதியே இல்லே..? நம்பவேண்டியது, அவன் சொல்றத!
என்னடாண்ணா ஆகமம்?
- பூந்துப் பாத்தா,  
இந்துக்களுடைய ஆகமம்ணான்.
இந்துண்ணா என்னடான்னா...
ஒன்னுமில்லே!

இந்து..! இந்துண்ணா என்னா?
யாரக் குறிப்பிடுது அது?
என்ன ஆதாரம் அதுக்கு?
அதுக்கு தலைவன் ஆரு?
அதுக்கு காலம் என்ன?
எவனாவது சொல்ல முடியுமா?

எப்படா ஆச்சு?
அந்த யுகம், இந்த யுகம்? அதிலே!
எவன்டா எழுதினான்?
நாரதன், வசிட்டன், அந்த யக்ஞவல்கியன்
வெங்காயம் இந்தப் பயல்களுக்கு
ஆயுசு என்னடா?
பத்து லட்சம் வருஷம், எட்டு லட்சம் வருஷம், பதினஞ்சி லட்சம் வருஷம்...

அதிலே- இன்னிக்கு சட்டத்திலே...
நமக்கு தீர்ப்பு! இது அரசாங்கத்தோட யோக்கித...இப்ப நமக்கு சட்டப்படி தீர்ப்புண்ணா - அந்த சட்டத்துல உபயோகப்படுத்தற வார்த்தைகள், உபயோகப்படுத்தற ஆள்கள் யாருண்ணா ஒருத்தனுக்கும் தெரியாது.

போன யுகம், அதுக்கு முந்தின யுகம், அவன் ஆரு?
அவன்- நாரதன், அவன்- வசிட்டன், அவன்- யக்ஞன்!
அவன் இவன்கள்லாம் இருந்திருப்பானா?
எங்கே இருந்தான்?
இவன்க இருக்கிறது பத்துயுகம், எட்டுயுகம், பதினஞ்சியுகம் இருக்கான்க....
எங்கே இருக்கறான்?
மேல்லோகத்தில இருக்கறான்!
இங்க வந்து இந்த வேலையெல்லாம்
பண்ணினான்ணா...
எந்த வழியில் வந்தான்?
எந்த வழியில் போனான்?
எந்த ஊருல இருந்தான்?

ஏன் சொல்றேன்னா...நாதியில்ல!
பார்ப்பான் எதச் சொல்றானோ,
அதுதான் கடவுள்.
அதுதான் சட்டம்.
அதன் படிக்குத்தான் நடக்கணும்.
நடக்க வச்சிட்டான்.
அந்த அளவுள வந்துட்டது, இப்போ?
அதத்தான் நாம இப்போ சுயராச்சியம்கறோம்.
இந்த சுதந்திரம்கறதுக்கு
யோக்கியதை என்ன?

( 17/12/1973 அன்று குடந்தையில்
தந்தை பெரியார் பேசியது )
நன்றி; Viduthalaiarasu Viduthalaiarasu

செவ்வாய், 4 டிசம்பர், 2018

மனுநீதியின் லட்சணம்

"பிர்மா இந்த சாத்திரத்தை எனக்கு (மனுவுக்கு) ஓது வித்தார். நான் மரிசி, பிருகு இவர்களுக்கு ஓதுவித்தேன்"

- மனுஸ்மிருதி-அத்-1: சுலோகம்: 58

- பிராமணர் இந்த மனுஸ்மிருதியைப் படிக்கலாம். மற்றவருணத்தார்க்கு ஓதுவிக்கக் கூடாது.

- மனு.அத் : 1, சு: 103

- வேதம், சுருதி, மனுசாத்திரம் -ஸ்மிருதி இவை களைத் தர்க்க புத்தியால் மறுப்பவன் நாத்திகன் - அத்: 2, சு: 11

- பிர்மாவின் உயர்ந்த இடமாகிய முகத்தில் பிறந்த பிராமணன் முதல் வருணத்தான் ஆகையால் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தார்களுடைய பொருள்களையும், தானம் வாங்கக் கூடிய பிரபுவாயிருக்கின்றான். ஆதலால் அவன் பிறரிடம் தானம் வாங்கினாலும் தன்பொருளையே உண்டவனாவான்.

- அத்: 1, சு: 100-101

குறிப்பு: பிச்சை ஏற்பவனைப் பிரபு என்று கூறுவதை இந்நூலில்தான் காணலாம்

- பலகாரம், பாயாசம், கிழங்குகள், சுவையுள்ள இறைச்சி, நல்ல நீர் இவையாவும் பிராமணர்களுக்குரியவை.

- அத்: 3, சு: 227

- வாசனைப் பொருள்கள், தருப்பை, பூ, பொன், பால், தயிர், அவல், அரிசி, மீன், மாமிசம் இவை வலுவில் வந்தால் பிராமணன் நீக்கக்கூடாது.

- அத்: 4, சு: 250

- சோறு, பால், சோமபானம் (மது) இறைச்சி இவைகள் யாகத்திற்குரிய அவிசுகள்.

- அத்: 3, சு: 257

- யாகம் செய்து மாமிசம் புசித்தல் தேவ காரியம். தனக்கெனக் கொன்று தின்னல் இராட்சத காரியம்.

- அத்: 5, சு: 31

- உயிர்க்கு ஆபத்து நேருங்கால் நாள்தோறும் பிராணிகளை ஏராளமாகக் கொன்று தின்றாலும் பிராமணன் தோஷத்தையடைய மாட்டான். மாமிசம் கிரையத்திற்கு வாங்கினாலும், தாமே கொன்று கொண் டாலும், பிறர் கொடுத்தாலும் அதைத் தேவர்களுக்கும், பிதிரர்களுக்கும் நிவேதித்துப் புசிக்கும் பிராமணன் துரஷிக்கப்படமாட்டான்.

- அத்: 5, சு: 30-32

- பசுக்கள், மிருகங்கள், பறவைகள் இவைகளை யாகத்திலும் சிரார்த்த தினத்திலும் கொன்றால் அவை பின்பு உயர்ந்த கதியை அடைகின்றன - ஆதலால் யாகம், சிரார்த்தம் இவைகளில் உயிர்க்கொலை செய்யலாம், அக்கொலை பாவமாகாது.

- அத்: 5, சு: 40-41

- யாகத்திற்காகவே பசுக்கள், மிருகங்கள், பறவைகள் பிர்மமனால் படைக்கப்பட்டுள்ளன. அந்த யாகத்தால் உலகமெலாம் நன்மையடைகிறது. ஆகையால் யாகத்தில் செய்யும் உயிர்க்கொலை கொலையாக மாட்டா.

- அத்: 5, சு: 39

- இங்ஙனம் யாகத்திற் கொல்லப்பட்ட கொலையைக் கொலையென்று நினைக்கலாகாது; வேதத்தினாலேயே தருமம் விளங்குவதால் வேதம் கொலை செய்யக் கூறினாலும் அது புண்ணியமாகவே இருக்கும்.

- அத்: 5, சு: 44

- எள்ளு, அரிசி, உளுந்து, கிழங்கு, பழம் இவைகளால் சிரார்த்தம் செய்தால் பிதிரர்கள் ஒருமாதம் வரையில் திருப்தி அடைவார்கள்.

- அத்: 3, சு: 267

- முள்ளுள்ள வாளை மீன், கட்க மிருகம், சிவந்த ஆடு இவற்றின் இறைச்சியால் சிரார்த்தம் செய்தால் பிதிரர்கள் அளவற்ற காலம் திருப்தியடைவார்கள்.

- அத்: 3, சு: 271

- சிரார்த்தத்தில் விதிப்படி அழைக்கப்பட்ட பிரா மணன் இதில் கூறப்பட்ட மாமிசங்களைப் புசிக்கா விட்டால் அவன்21 பிறப்பு பசுவாகப் பிறப்பான்.

- அத்: 5, சு: 35

- அக்கினி எப்படி மேலான தெய்வமாகின்றதோ அப்படியே பிராமணன் ஞானியாயினும், மூடனாயினும் அவனே மேலான தெய்வம். - அத்: 9, சு: 317

பிணத்தை எரிக்கும் தீ, யாகத்திற்கும் பயன்படுதல் போல தீமையான காரியங்களைச் செய்யும் பிராமணர் களும் பூஜிக்கப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் உயர்குலத்தார் அல்லவா?

- அத்: 9, சு: 318

- சூத்திரன் இம்மையினும் மறுமையினும் பிராமணனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். சூத்திரன், மனம் வாக்குக் காயங்களால் பிராமணனுக்குத் தொண்டு செய்ய வேண்டும். பிராமணரில்லாதவிடத்தில் சத்திரியனுக்கும், அவனுமில்லாத விடத்தில் வைசி யனுக்கும் தொண்டு செய்ய வேண்டும்.

- அத்: 9, சு: 334-335

- பிராமணன் கூலி கொடுத்தோ - கொடாமலோ சூத்திரனிடம் வேலை வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரன் பிர்ம னால் படைக்கப்பட்டிருக்கிறான்.

- அத்: 8, சு: 413

- மற்ற மூன்று வருணத்தார்க்கும் தொண்டு செய்யும்படி சூத்திரனுக்கு அரசன் உத்தரவிட வேண்டும். அப்படிச் செய்யாவிடில் உலகம் அழிந்துவிடுமாகையால் சூத்திரனைத் தண்டித்துப் பணிவிடை செய்விக்க வேண்டும்.

- அத்: 8, சு: 410

- சூத்திரன் தேடிய பொருள்களைப் பிராமணன் தடையின்றிக் கைப்பற்றிக் கொள்ளலாம், ஏனெனில் அடிமையாகிய சூத்திரன் எவ்வித பொருள்களுக்கும் உரியவனாக மாட்டான்.

- அத்: 8, சு: 417

- பிராமணன் பொருளை எடுத்த சூத்திரனுடைய அங்கங்களை வெட்டிக் கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருள்களைப் பிராமணன் தான் விரும்பியபடி கொள்ளையிடலாம்.

- அத்: 9, சு: 248

- பிராமணனுடைய தொழிலைச் சூத்திரன் செய் தாலும் பிராமணனாக மாட்டான். அவனுக்குப் பிராமணத் தொழில் செய்ய அதிகாரமில்லை. பிராமணன் சூத்திர னுடைய தொழிலைச் செய்தாலும் அவன் உயர்குலத்த வனேயாவான். இப்படியே பிர்மா நிச்சயித்துள்ளார்.

- அத்: 10, சு: 75

- சூத்திரன் பொருளாசையால் உயர்குலத்தோர்க்குரிய தொழில்களைச் செய்தால் அவன் பொருள்களை எல் லாம் பறித்துக் கொண்டு அவனைத் துரத்திவிட வேண்டும்.

- அத்: 10, சு: 96

- பிராமணன், சத்திரியன், வைசியன் இவர்கள் தம் வருணத்திலும், தம் கீழ் உள்ள மற்ற வருணங்களிலும், சூத்திரன் தன் வருணத்தில் மட்டும் மணம் செய்து கொள்ளலாம்.

- அத்: 3, சு: 13

- சூத்திரப் பெண்ணோடு சமமாய்ப் படுக்கும் பிரா மணன் நரகத்தையடைவான், அவளிடம் பிள்ளை உண்டு பண்ணுகிறவன் பிராமணத்தன்மையை இழந்து விடுகிறான்.

- அத்: 3, சு: 17

பிராமணனுக்குச் சூத்திரப் பெண்ணிடம் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு அப்பிராமணன் சொத்தில் உரிமையில்லை. அப்பிள்ளை சிரார்த்தம் செய்யலாகாது. அவன் உயிரோடிருப்பினும் பிணத்துக்குச் சமமானவன்

- அத்: 9, சு: 155-178

- பிராமண குலத்திற் பிறந்தவன் கர்மானுட்டான மில்லாதவனாயினும், ஒழுக்கங்கெட்டவனாயினும் அரசனைப்போலவே தீர்மானம் செய்யலாம். (ஆட்சி செய்யலாம், பிறரைத் தண்டிக்கலாம்) சூத்திரன் ஒரு பொழுதும் செய்யலாகாது.

- அத்: 8, சு: 20

- பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டுப் பொய் சொல்லலாம் குற்றமில்லை. பிராமணரல்லாதவரைக் கொன்றாலும் பரவாயில்லை.

- அத்: 8, சு: 112-143

- வைசியனும், சூத்திரனும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டால் வைசியனுக்கு 250 பணங்களும், சூத்தி ரனுக்கு 500 பணங்களும் பொருள் தண்டனை விதிக்க வேண்டும்.

- அத்: 8, சு: 277

- பிராமணனைச் சூத்திரன் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். பிராமணனுடைய ஜாதிப் பெயர்களை சொல்லித்திட்டும் சூத்திரன் வாயில் காய்ச் சிய இரும்புக்கம்பியை எரிய எரியச் சொருக வேண்டும்.

- அத்: 8, சு: 270-271

- சூத்திரன் மேல் ஜாதியாரை அடித்தால் கையையும், உதைத்தால் காலையும் வெட்டிவிட வேண்டும்.

- அத்: 8, சு: 280

- சூத்திரன் (பிராமணரல்லாதவன்) மற்ற மூன்று வரு ணத்தாருடைய மனைவியைப் புணர்ந்தால் அவனை உயிர்போகும் வரை தண்டிக்க வேண்டும்.

- அத்: 8, சு: 359

குறிப்பு: பிராமணன் மற்றவர்களின் மனைவிமார் களைக் கற்பழித்தால் தண்டனை இல்லை போலும்

- தாழ்ந்த சாதிப்பெண் உயர்சாதியாரைக் கூடினால் அவளைக் கண்டிக்கக் கூடாது, உயர்ந்த குலப்பெண் ஒரு தாழ்ந்த சாதியாரைக் கூடினால் அவளைக் கண்டித்து வீட்டிலேயே அடக்க வேண்டும்

- அத்: 8, சு: 365

- உயர்குலப்பெண்ணைப் புணர்ந்த இழிகுலத் தோனை இறக்கும் வரையில் அடிக்க வேண்டும். கட்டுக் கடங்காமல் இட்டப்படி திரியும் பிராமணப் பெண்களை சூத்திரன் புணர்ந்தால் ஆண்குறியை அறுக்க வேண்டும். ஒருவர் கட்டுக்குட்பட்ட பெண்களைப் புணர்ந்தால் அவனைத் துண்டு துண்டாய் வெட்டி அவன் பொருளை யெல்லாம் கொள்ளையிட வேண்டும்.

- அத்: 8, சு: 374

- பிராமணனுடன் சூத்திரன் சமமாக உட்கார்ந்தால் இடுப்பில் சூடுபோட்டாவது, பிட்டத்தை அறுத்தாவது ஊரைவிட்டுத் துரத்திட வேண்டும்.

- அத்: 8, சு: 283

- பிராமணன் எத்தகைய கொடிய குற்றங்களைச் செய்தாலும் அவனுக்குத் தூக்குத் தண்டனை ஏற்பட்டால் தூக்கில் இடக்கூடாது. அவன் தலையை மொட்டை அடித்தல் வேண்டும். அதுவே அவனுக்குத்  தூக்குத் தண்டனைக்கு ஒப்பாம். மற்ற வருணத்தார்க்குக் கொலையே தண்டனை.

- அத்: 8, சு: 379

- கொடிய குற்றம் செய்தவனாயினும் பிராமணனைக் கொல்லாமலும், வேறு எத்தகைய துன்பமும் செய்யாம லும் பொருளைக் கொடுத்து அவனை அயலூருக்கு அனுப்பிவிட வேண்டும். எத்தகைய குற்றஞ்செய்தாலும் பிராமணனைக் கொல்ல அரசன் நினைக்கலாகாது.

- அத்: 8, சு: 80, 381

- பிராமாணம் கேட்கும்போது, பிராமணனைச் சத்தியமாகச் சொல் என்று கேட்க வேண்டும். சூத்திரனை நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய மழுவைக் கையில் பிடித்துக் கொண்டு பிரமாணம் செய்யச் சொல்ல வேண்டும் அல்லது அவனைத் தண்ணீரில் அழுத்த வேண்டும். அவன் மனைவி, பிள்ளை இவர்கள் தலைகளில் ஓங்கி அடித்தும், பிரமாணம் சொல்லும் படிச் செய்ய வேண்டும். மழுவெடுத்த சூத்திரன் கை வேகாமலும், தண்ணீரில் அழுத்திய சூத்திரன் சாகாமலும், அடித்ததால் மனைவி மக்கள் தலையில் வலி தோன்றாமலும் இருந்தால்தான் அவன் சொல்லும் பிரமாணம் சத்தியம் என்று கொள்ள வேண்டும்.

- அத்: 8, சு: 113-115

- சூத்திரன் இம்மையில் உயிர்வாழ்க்கைக்கும், மறுமையில் மோட்சமடையவும் பிராமணனையே தொழ வேண்டும். அதுவே அவனுக்குப் பாக்கியம்.

- அத்: 10, சு: 122

- சூத்திரன் எவ்வளவு திறமையுள்ளவனாயினும், தனக்கெனத் தனியாக பொருள் சேர்த்து வைக்கலாகாது. சூத்திரனிடம் பொருள் இருந்தால் பிராமணனுக்குத் துன்பம் வரும்.

- அத்: 10, சு: 129

குறிப்பு: பொருள் சேர்த்துப் பிராமணனுக்குக் கொடுத்துவிட வேண்டும்.

- பிராமணன் உண்டு மிகுந்த உணவும், கட்டிக்கிழிந்த உடையும், சுவையும் ஔதமுமற்ற தானியங்களையும் பிராமணன் பார்த்து சூத்திரனுக்குக் கொடுக்க வேண்டும்.

- அத்: 10, சு: 125

- பிராமணன் வைசியனிடமுள்ள பொருளைக் கேட்டுக் கொள்ளாவிடில் வலிமையாலாவது களவினா லாவது யாகத்திற்கு வேண்டிய பொருளைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். வைசியனிடமில்லாவிடில் சூத்திரன் வீட்டிலிருந்து ஏராளமாக யோசனையின்றிக் கேளாமல் வலிமையினாற் கொள்ளையிட்டு எடுத்துக் கொள்ளலாம்.

- அத்: 11, சு: 12,13

- யாகம் செய்கிறவன் பொருள் தேவர்கள் பொருள் என்றும், யாகம் செய்யாதவர்களின் பொருள்கள் அசுரர்களின் பொருள்களென்றும் வேதம் ஓதுகின்றது. ஆதலால் அசுரர் பொருள்களைத் தேவர்களுடைய பொருள்களாக்குதல் தருமமேயாகும்.

- அத்: 11, சு: 20

- தரும சிந்தனையுள்ள அரசன் இவ்விதம் கொள் ளையிட்டு யாகம் செய்கின்ற பிராமணர்களைத் தண்டிக் கக் கூடாது. அரசனின் அறியாமையால் பிராமணன் பசித்துன்பத்தை அடைகிறான்,

- அத்: 11, சு: 21

குறிப்பு: இதனால் பிராமணன் எந்த விதத்திலும் பிழைக்கும்படி அரசன் வழிதேடி வைக்க வேண்டும். அவர்கள் சொல்லுவனவெல்லாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

- பிராமணனுக்கு வேதம் ஓதலே தவம்; சத்திரியனுக்கு இந்நூலில் சொன்னபடி ஆட்சி செய்தலே தவம். வைசியனுக்கு வர்த்தகம் செய்தலே தவம். சூத்திரனுக்குப் பிராமணனுக்குப் பணிவிடை செய்தலே தவம் ஆகும்.

- அத்: 11, சு: 235

- இதில் சொல்லும் கருமங்களில் தவறிய அரசன் மலம், பிணம் இவைகளைத் தின்னும் கடபூதம் என்னும் பேயாகப் பிறப்பான். மேற்சொன்ன வேதஸ்மிருதிகளுக்கு அடங்காமல் விரோதமாக நடக்கும் சூத்திரன் சீலைப் பேனைத் தின்னும் பேயாகப் பிறப்பான்.

- அத்: 12, சு: 71,72

குறிப்பு: ஆதலால் இதில் சொன்னபடியே அரசன் பிராமணர்களுக்குச் சாதகமாக ஆட்சி நடத்த வேண்டும்,. சூத்திரன் பிராமணர்களுக்குத் தொண்டு செய்து நடக்க வேண்டும் என்பது தான் மனுநீதி.

மனுநீதியின் அறநெறியைப் பார்த்தீர்களா? பார்ப்பான் எதையும் தின்னலாம். எந்த குற்றங்களையும் செய்யலாம். யார்வீட்டுப் பெண்களையும் கற்பழிக்கலாம். யார் பொருளையும் கொள்ளையிடலாம். கொலையும் செய்யலாம். அவனுக்குக் குற்றத் தண்டனை கிடையாது. நாவிதக் கூலியில்லாமல் மொட்டையடித்துப் பொருள் கொடுத்து வேறு ஊருக்கு அனுப்புவதே தண்டனை. அங்கும் குற்றம் செய்தால் அப்படியே; எப்படியுள்ளது மனு (அ) நீதி?  ஜாதிக்கொரு நீதி! மன்னன் மனுநீதிப்படியே மற்றவர்களை தண்டித்து அவர்களை ஆதரித்து அரசாள வேண்டும். இல்லையேல் அரசனையும் தொலைத்துக் கட்ட மனுவில் இடமுள்ளது.

விடுதலை நாளேடு, 4,5.12.18
- இரா.கண்ணிமையின் 'வடநூலார் மொழிப்படியா வள்ளுவர் நூல் செய்தார்?' என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது.