செவ்வாய், 25 மே, 2021

வேதங்கள் - பேதங்கள்- (5)


 சு.அறிவுக்கரசு

ஹிந்து மத வேதங்களில் மட்டுமே ஆத்மா, மறுபிறவி ஆகியவை உண்டு. உலக மக்கள் தொகையில் ஹிந்து மதத்தினர் 90 கோடிப்பேர். உலகத்தின் மொத்த மக்கள் தொகை 750 கோடி. ஆத்மா, மறுபிறவி நம்பிக்கை உள்ளோர் மிகச் சிறுபான்மையர். 200 கோடிக்கு மேல் கிறித்துவர்கள், பவுத்தர்கள், இஸ்லாமியர் போன்ற பல்வேறு மதத்தவர்களுக்கு இந்த நம்பிக்கை கிடையாது. இல்லாத ஒன்றைப் பொய்யாகச் சொல்லி, அதன் மேல் கட்டப்பட்ட சீட்டுக்கட்டடம் போன்றதே ஹிந்து மதம். நம் கண்களால் காணும் ஸ்தூலமான உலகத்தை மாயை என்பது ஹிந்துமதம். வேறு எந்த மக்களுக்கும் இப்படிப்பட்ட மாயாவாதக் கொள்கை கிடையாது. இல்லாத ஒன்றை (ஆத்மாவை) அறிந்தவன் தான் இறைவனை அடைகிறானாம். ஆகாயத்தில் அஸ்திவாரமே இல்லாமல் கட்டப்பட்ட “கோட்டை” என்றே கூறவேண்டும் ஹிந்து மதத்தை!

18 நிமிஷங்கள் ஒரு காஷ்டை

18 காஷ்டைகள் ஒரு கலை

30 கலைகள் ஒரு க்ஷணம்

12 க்ஷணம் ஒரு முஹூர்த்தம்

30 முஹூர்த்தம் இரவு பகல் கொண்ட ஒரு நாள்

15 நாள் ஒரு பக்ஷம்

2 பக்ஷம் ஒரு மாதம்

2 மாதம ஒரு ருது

6 ருது ஒரு வருஷம்

ஹிந்து மத காலக்கணக்கு இதுவாம்! யார் கடைப்பிடிக்கிறார்கள்?

அது போலவே சிந்துநதியின் உபநதிகளான அய்ந்துக்கும் உபநிஷத்களில் வேறு பெயர்கள்.

சுதுத்ரி - ஸட்லெஜ்

பருஷ்ணி - ராயி

அஸிக்னி - சீறம்

விதஸ்தா - ஜீலம்

ஸீஷோமா - ஸோஹன்

ஆரியர்கள் கங்கை நதியை அறியாதவர்கள். சிந்து நதிக்கரையில் மாடு மேய்த்தவர்கள். சிந்து நதி பாரசீக மொழியில் ஹிந்து என்றே எழுதப்படும். காரணம், அம்மொழியில் ஸ எனும் எழுத்து இல்லை. மாற்றாக, ஹ என்று உச்சரித்தனர். நதியின் கரையில் இருந்தவர்களை அந்தப் பெயரால் அழைத்ததால் மக்களின் பெயராகவும் மண்ணின் (நாடு) பெயராகவும் அமைந்தது. வெள்ளைக்காரர்கள் மதத்திற்கும் அதே பெயரை வைத்துவிட்டனர். எனவே எல்லாமே இரவல். சமஸ்கிருதத்தில் பெயரே இல்லை. பாரசீகப் பெயர்தான். மிகப் பழமையானது என்னும் மதத்திற்கு அவர்களின் மொழியில் பெயரில் வை. விசித்திரம் தான். மக்களும் மதமும் மொழியும்.

வைசம்பாயனர் ஒரு ரிஷி, யாக்ஞவல்கியர் அவரிடம் சீடன். சீடன் செயலால் கோவப்பட்ட குரு, தான் கற்றுக் கொடுத்ததைக் கக்கிவிடும்படி சீடனிடம் கூறினார். முடியுமா? சாப்பிட்ட சோற்றை கக்கிவிடலாம். கல்வியை முடியாதே. என்றாலும் யாக்ஞவல்கியன் கக்கிவிட்டான். அவன் கக்கியதை மற்ற சீடர்கள் சிட்டுக்குருவி போல தின்று விட்டனர். ஆகவே இதன் பெயர் தைத்ரிய சாகை. க்ருஷ்ண யஜூர் வேதம் என்றும் சொல்கிறார்கள். முதல் அத்யாயம் கல்வி (சிக்ஷா)யின் பெருமை பேசும். குருகுலப் படிப்பின்போது, உப வேதங்களும் வேதாங்கங்களும் கற்பிக்கப்படுகின்றன. உபவேதங்கள் நான்கு. 1) ஆயுர் வேதம், 2) தனுர் வேதம், 3) கந்தர்வ வேதம், 4) அர்த்த சாஸ்திரம் என்பவை. மருத்துவம், வில்வித்தை, நுண்கலைகள் (இசை), ஆட்சிக்கலை போன்றவை. வேதாங்கங்கள் ஆறு. 1) சிக்ஷை (உபசரிப்பு), 2) வியாகரணம் (இலக்கணம்), 3) சந்தஸ் (செய்யுள் அமைப்பு), 4) நிருக்தம் (அகராதி அறிதல்), 5) ஜோதிஷம், 6) கல்பம் (சடங்குகள்) என்பவை.

தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் ஒன்றை அர்ப்பணம் செய்யும்போது, ஸ்வாஹா எனச் சொல்ல வேண்டுமாம். இதன் மூலம் நாம் அடைவதைத் திருப்பித் தரவேண்டும் என்பது போதனையாம்.

“லோகா ஸமஸ்தா சகிநோ பவந்து” என்பது வேதமந்த்ரமாம். உலகில் உள்ள அத்தனை பேரும் சுகமாக இருக்கட்டும் என்பது பொருளாம்.

உலகில் நான்கு பெரிய மொழிகளாம். அவை காயத்ரியில் கனிந்த மொழிகளாம். பூ, புவ, சுவ, மக எனும் நான்காம். பூ என்றால் இவ்வுலகமாம். புவ என்றால் அவ்வுலகம். சுவ என்றாலும் அவ்வுலகம் மகத் என்றால், சூரியன், சந்திரன், பிரமன், உணவாகும். பூ, புவ, சுவ மூன்றும் ஜோதியாகி, ஒளியாகி, வேதமாகிய பிரம்மமாம். மொழிகள் என்றால் என்ன? மனிதன் தன் கருத்தைப் பிறர்க்குச் சொல்லப் பயன்படுத்தும் கருவி. பேச்சு ஒலியின் மூலமோ, எழுதிய எழுத்தன் வரிவடிவம் மூலமோ தன் கருத்தை வெளிப்படுத்தப் பயன்படும் சாதனம். அதற்கு இந்த வேதம் தரும் சொற்களும் விளக்கமும் குழப்பத்தைத் தருகின்றன அல்லவா?

கடோபநிஷத் என்பது இரண்டு அத்யாயங்களாக உள்ளது. மூன்று கொடிகளாக ஒவ்வொரு அத்யாயமும் உள்ளது. மொத்தம் ஆறு வல்லிகள் (கொடிகள்) நசிகேதன் என்பவன் யமனிடம் கேட்டவைகளும் மரணத்தை வெல்லும் வழிகளும் அடங்கியவையாம்.

வாஜசிரவஸ் எனும் மன்னன் உலகத்தையே ஆளவேண்டும் என்கிற ஆசையால், விஸ்வஜித் என்ற யாகத்தைச் செய்தான். வாழ்க்கையைக் கொடுத்து வாழ்க்கையைப் பெறுவது யாகத்தின் நோக்கம். அன்று மாடுகள் தான் செல்வம். வாஜசிரவஸ்தானம் கொடுத்த மாடுகள் எல்லாம், அடி மாடுகள். பால் வற்றிப்போன கிழட்டுப் பசுக்கள். தானத்தின் நோக்கமே அடிபட்டுப் போனது. இதைக் கவனித்த வாஜசிரவஸின் மகன் நசிகேதன், தந்தையிடம் “என்னை யாருக்குத் தானம் தரப் போகிறீர்கள்?” எனக்கேட்டான். பதில் இல்லை. மறுபடியும் கேட்டான். இம்முறையும் பதில் இல்லை. மூன்றாம் முறையாகவும் மகன் கேட்டான்.

“உன்னை யமனுக்குத் தானமாகத் தரப்போகிறேன்” என்று தந்தை பதில் சொன்னார். நசிகேதனும் யமனிடம் போனான். யமன் தனது மாளிகையில் இல்லை. மூன்று நாள்கள் காத்திருந்தான். மூன்று நாள்களுக்கும் அவனுக்கு யாரும் உணவு தரவில்லை. பட்டினியாகவே கிடந்தான். அதனால் அவனைப் பார்த்து யமன், மூன்று நாள் பட்டினிக்காக மூன்று வரம் கேள் என்று சொன்னான். நசிகேதன் வரம் கேட்டானாம். திரும்பிச் சென்றால் தன் தந்தை அவனிடம் கோவமடையாமல் பாசமாக இருக்க வேண்டும் என்று கேட்டானாம். யமனும் முதல் வரத்தைக் கொடுத்தானாம்.

சொர்க்கத்திற்குப் போனால் சுகமாக இருக்கலாமாம், சொர்க்கம் போவது எப்படி என்று இரண்டாவது வரத்தைக் கேட்டான். சொர்க்கத்திற்கு போகும் வழி, இதயக் குகையில் இருக்கிறது என்றானாம் யமன். “நிஹிதம் குஹாயம்“ என்பது அவன் சொன்னதாம். அத்தகைய யாகத்தை எப்படிச் செய்வது எனும் விளக்கத்தை யமன் நசிகேதனுக்குச் சொன்னானாம். இஷ்டகா கற்கள் 360 வைத்து யாக குண்டம் அமைக்கப்பட வேண்டுமாம். யாகத்தில் விஷ்ணுவே “ப்ரதீகமாக”ப் போற்றப்பட வேண்டுமாம். யமன் சொன்னதைக் கவனமுடன் கேட்டு உள்வாங்கிக் கொண்ட நசிகேதனைப் பாராட்டிய யமன், இரத்தின மாலையைப் பரிசாக அளிக்கிறான். அத்துடன் அந்த யாகத்திற்கு அவன் பெயரைச் சூட்டி, நசிதேகயாகம் என்கிறான். ஒரு முறை சொன்னாலே கவனமுடன் கிரஹித்துக் கொண்ட “ஏகசந்த கிராஹி”யான நசிகேதன் பெற்ற சிறப்புகள் இவை. நசிகேத யாகத்தை மூன்று தடவைச் செய்தவன், பிறப்பு, இறப்பு எல்லாம் கடந்து அளவு கடந்த சாந்தியை அடைகிறான்.

 தொடரும்....

திங்கள், 17 மே, 2021

வேதங்கள் - பேதங்கள் (4)


சு.அறிவுக்கரசு

சுக்ல யஜூர் வேதம்

இது வாஜசனேய ஸம்ஹிதை என்றும் கூறப்படும். முதல் இரண்டு அத்யாயங்களில் கடவுள் பெருமை, துதிப்பாடல், அரச நிர்வாகம் போன்றவை உள்ளனவாம். அக்னிஹோத்ர ரகஸ்யம், பெற்றோர், பிள்ளைகளின் கடமைகள் முதலியன 3, 4, 5 அத்யாயங்களில் உள்ளனவாம். அத்யாயம் 6இல் மீண்டும் ராஜ்யபரிபாலனம், சபா, சமிதி உறவு, கடமை போன்றவை. ஏழாம் அத்யாயத்தில் ஆத்மா, மனம், யுத்தலட்சணம் போன்றவை கூறப்படுகின்றன.

8 மதல் 39 வரையுள்ள அத்யாயங்களில் கிருஹ் தர்மம், ராஜதர்மம், மனித தர்மம், ஸ்த்ரீபுருஷ பரஸ்பர உறவு, பார்ப்பனர், சத்திரியர் கடமைகள், மறுஜென்மம், நித்ய கடமை போன்றவை சொல்லப்படுகின்றன. அத்யாயம் 40இல் ஈசோபநிஷத் உள்ளது. இதில் வழக்கமான வேத உளறல்கள் உள்ளன. பூமியில் இரண்டு கடல்களாம். ஒன்று கல்விக்கடல் மற்றது தண்ணீர்க்கடல். திரவியம் தேடுவதற்காக அதனைக் கடக்கலாமாம். நம் விரோதிகளைப் பூண்டுடன் அழிக்க வேண்டுமாம்.

இந்த வேதத்திற்கான உபநிஷத் ‘பிருஹ தாரணீய மஹா உபநிஷத்’ என்பது. கொஞ்சம் பெரிய உபநிஷத். யஜூர் வேதச் சாரம் என்கிறார்கள். “அஸதோ மா ஸத் கமய, தமஸோ மா ஜ்யோதிர் சமய, ம்ருத்யோ மா அமிர்தம் கமய” என்பது முதல் பாடல். இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல். மரணத்திலிருந்து சாகாமைக்கு இட்டுச்செல் என்பது இதன் பொருள்.

இரண்டு மனைவிகளுடன் இல்லறத்தில் வாழ்ந்து, அடுத்த கட்டமான வானப்ரஸ்த நிலைக்கு போக விரும்பியே யாக்ஞவல்கியர் எனும் முனிவன் பெருமை பேசும் கதைகள் உள்ளன. தன் மனைவி கேட்டதற்குப் பதில் கூறிய ரிஷி “குலத்தில் பற்றும் ஜாதியில் வெறியும் பரமாத்மிகப் பக்திப் பயிற்சியே ஆகும்“ என்கிறான். கணவனும் மனைவியும் காதலிப்பதே பரமாத்மாவைக் காதலிப்பதற்கானப் பயிற்சிதான் என்கிறான். நெருப்பினால் வெளிவரும் புகை, அக்னியாகாது. அதுபோல ஸ்ருதி, ஸ்ருதிகளைப் படித்ததால் பரமாத்மாவை அறிவதல்ல. உஷ்ணம் ஏறிப் பிறகு பற்றி எரியும் அக்னியைக் காண்பதுபோல வைராக்கியம் முதிர்ந்து ஞானம் உதிக்கும்போது பரமாத்மாவைக் காணலாம் என்கிறான்.

கடவுளை (பரமாத்மாவை)ப் பார்க்கும் வழியைக் கூறுகிறான். பலரும் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் கூறும் யாக்ஞவல்கியன் கார்க்கி எனும் பெண் ஒருத்தியின் கேள்வியைச் சந்திக்கிறான். “எது வானத்திற்கு மேலும் பூமிக்குக் கீழும், வானத்திற்கும் பூமிக்கும் இடையிலும் உள்ளதெனவும், எது இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உள்ளது எனவும் கூறப்படுகிறதோ, எது அதில் குறுக்கும் நெடுக்குமாகக் கோக்கப்பட்டுள்ளதோ, அது எது?” என்று அவள் கேட்டாளாம்.

“அது உருவம் உடையதல்ல. நுட்பமாகவும் இல்லை. குட்டையுமல்ல, நெட்டையுமல்ல. நெருப்பு போலச்சிவப்பல்ல. நீரைப்போல ஈரமாக இல்லை. அதற்கு நிழல் இல்லை. அளவும் இல்லை. அதற்கு உள்ளும் இல்லை. புறமும் இல்லை. அது எதையும் உண்பதும் இல்லை. எது வொன்றாலும் உண்ணப்படுவதுமில்லை”.

எந்தப் பிரம்மம் தனக்குத்தானே நேரில் காணக்கூடியதாயும் வேறு எதையும் வேண்டாததாகவும் உள்ளதோ அது பராகதி. அதுவே பரப்பிரம்மம்“ என்று பதில் கூறினானாம் யாக்ஞவல்கியன். அவனை யாரும் வெல்ல முடியாது எனத் தீர்ப்பு கூறிவிட்டானாம் கார்க்கி.

கேள்வியைப் போலவே பதிலும் குழப்பமே. விளங்காததே. அதுதான் வேதம். வேதாந்தம்.

பல பத்தகங்களைப் படிப்பதால் ஒருவன் பகவானிடம் பிரியம் உள்ளவனாக ஆக முடியாது. ஆழம் இல்லாத குளத்தில் நீர் குடிக்க வேண்டுமானால் அதை கலக்காமல், மெதுவாகக் குடிக்க வேண்டும். கலக்கி விட்டால் அடியில் இருக்கும் சேறு நீரில் கலந்துவிடும். ‘சாஸ்திரங்களைப் பற்றிய விவதாங்களினால் மூளைதான் மேலும் கலங்கும். தெளிவு ஏற்படாது’ என்கிறது உபநிஷத். அப்படியே நம்பு, ஏற்றுக் கொள் எனக் கற்பிக்கிறது.

செய்யலாமா?

தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் ஆகிய மூவரும் கடவுளிடம் உபதேசம் கோரினார்களாம். அது “த” எனும் ஓர் எழுத்தை மட்டுமே கூறியதாம். இந்திரிய அடக்கம் அற்ற தேவர்கள், “தாம்யத” என்று உபதேசித்ததாகக் கருதிக் கொண்டனர். அடக்கமாக இருங்கள் என்று சொன்னதாக நினைத்துக் கொண்டனர். “தத்த” என்று சொல்லி, தானம் செய்யுமாறு சொன்னதாக மனிதர் எண்ணிக் கொண்டனராம்.

அசுரர்களோ “தயத்வம்“ என்று கூறியதாக நினைத்துக் கொண்டு தயை உடையவர்களாக எனக்கருதிக் கொண்டனராம். ஆகவே “த” என்ற ஒரு சொல்லின் மூலம் அடக்கம், தானம், தயை ஆகிய மூன்றையும் உபதேசித்ததாம் என்கிறது. ஸூக்ல யஜூர் வேதத்தை யாக்ஞவல்கியன் இன்றும் வாழுமாறு செய்தார் என்கிறது உபநிஷத்.

“ஈஸாவஸ்யம் இதம் ஸர்வம்“ எனத் தொடங்கும் இந்த உபநிஷத் 18 மந்த்ரங்களை மட்டுமே கொண்ட சிறிய உபநிஷத். ஈஸாவாஸ்ய உபநிஷத் எனப்படுவது. தத்யங் அதர்வணன் என்பவன் தன் மகனுக்குச் சொன்னதாம். இதன் மய்யக்கருத்து “ஈசவித்யை” என்பதாம் “கடவுள் முழுமையானது.

இந்த உலகமும் முழுமையானது. முழுமையான கடவுள் தோற்றுவித்ததே உலகம். ஒரு முழுமையிலிருந்து முழுமையை (உலகம்) எடுத்த பிறகும் எஞ்சி நிற்பதும் முழுமையே”. என்பதுதான் இதன் பொருள். ஒரு விளக்கிலிருந்து கணக்கில் அடங்காத விளக்குகள் ஏற்றப்பட்ட பின்பும் முதல் விளக்கு இருக்கிறதல்லவா? அது போல...

இந்த உலகம் மாறிக்கொண்டேயிருக்கும். மாறுகின்ற உலகத்தை இறைவன்தான் நிரப்ப வேண்டும். இருக்கும் செல்வம் உன்னுடையது அல்ல. அதற்காக ஆசைப்படாதே. எப்போதும் தியாக சிந்தையுடன் இரு. எல்லாவற்றிலும் கடவுளைக்காண். மனைவியிடமும் பிள்ளைகளிடமும் கடவுளைக் காண வேண்டும். வாழ்விலும் சாவிலும், இன்பத்திலும், துன்பத்திலும் இறைவன் சமமாக இருக்கிறான்.

உலகம் பற்றிய நம் கற்பனை பொய். மாயை. உறவுகளும் மாயை. எதுவும் நம்முடையது அல்ல. எல்லாவற்றிலும் பற்றுடனும் பற்றில்லாமலும் வாழ்ந்தால் அக வளர்ச்சிக்கான அடித்தளம் அமைகிறதாம். உடம்பு, மனம், பிராணன், புத்தி, ஆத்மா என்ற அய்ந்தும் கலந்ததே “நாம்”. ஆத்மாவை அறிவதுதான் முதல்படி. மனம் அகம் நோக்கி, ஆத்மாவுடன் ஒன்றாக்கிக் கொண்டு அதனை அறிபவர்களுக்கு மட்டுமே மறுபிறவி இல்லை உன்கிறது உபநிஷத்..

தொடரும்....

செவ்வாய், 11 மே, 2021

வேதங்கள் - பேதங்கள் (3)


சு.அறிவுக்கரசு

சூரியைக்கும் ஸோமனுக்கும் விவாஹம் நடந்ததும் முடிகிறது. சூரியை, சூரியனின் (ஸவிதாவின்) மகள். ஸோமன் நட்சத்திரங்களின் நடுவே இருக்கிறான். ஸோமன் என்பது பிராந்தியோ, விஸ்கியோ? திருமண நாளில் யாரும் ஸோமனைக் குடிப்பது இல்லையாம். அஸ்வினிகள் மாப்பிள்ளைத் தோழர்களாம். தெய்வத் திருமணத்திற்கு எல்லாத்தேவர்களும் வாழ்த்திக் கொண்டே வருகிறார்கள். “தஸாஸ்யம் புத்ரா நாதேஹி பதிம் ஏகாதசம் க்ருதி” என்று வாழ்த்துகிறார்கள். இந்திரனே, மணமகளுக்கும் பத்துப் பிள்ளைகளை அளித்திடு. அவளின் கணவனை அவள் பதினொன்றாம் மகனாக ஆக்கிக் கொள்வான் என வாழ்த்துகிறார்கள். பத்தும் புதல்வர்களாம். புதல்வியே வேண்டாமாம். என்ன புத்தி! ஆண் ஆதிக்க ஆரியச் சமுதாயப் புத்தி!

10552 பாடல்களிலும் ஒரே விதமான செய்திகள்தான். சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டு... பாடியவனுக்குச் சலிப்பு தட்டவில்லை. படிக்கும் நமக்குத்தான்...

ரிக் வேதத்திற்கான உபநிஷத், அய்தரேய உபநிஷத் என்பதாம். உலகப் படைப்பு பற்றி இந்த உபநிஷத் பேசுகிறதாம். உலகம் படைக்கப்பட்டதா? உருவானதா? மதவாதிகளும், மதநூல்களும் மட்டுமே படைப்பு என்கின்றன. அறிவியலோ, பரிணாமம் என்கிறது. எண்பித்திருக்கிறது. இந்த உபநிஷத் ஒரேயடியாக நான்கு லோகங்கள் படைக்கப்பட்டதாகப் புளுகுகிறது. 1) அம்பலோகம் - சொர்க்கத்திற்கு மேலே உள்ளதாம். 2) மரீசிலோகம் - ஒளி நிறைந்த இடைவெளியாம். மரீசிகா என்றால் கானல் நீர். 3) மர அல்லது மர்த்ய லோகம் - பூமியைக் குறிப்பது 4) ஆபலோகம் - பூமிக்குக் கீழே உள்ளதாம்.

கடவுள் பிரம்மதேவனைப் பற்றி நினைத்ததாம். பிரம்மதேவனின் வாய் முட்டை பிளப்பது போலப் பிளந்ததாம். வாயிலிருந்து பேச்சு வந்ததாம். அதிலிருந்து நெருப்பு வந்ததாம். மூக்கு தோன்றியதாம் மூக்குத் துவாரங்களிலிருந்து மூச்சு வந்ததாம். மூச்சிலிருந்து காற்று தோன்றியதாம். கண்கள் தோன்றின. பார்வையிலிருந்து சூரியன் தோன்றினானாம். காதுகள் தோன்றின. திசைகள் தோன்றின. தோல் உண்டாகியது. தோல் பிளந்து, மயிர்கள் தோன்றின. மயிரிலிருந்து செடி, கொடிகளும் மரங்களும் இதயத்தில் துவாரங்களும் உண்டாயின. இதயத்திலிருந்து மனம் என்ற தனியான பகுதி உருவாகியதாம். (மனம் என்பதற்கும் இதயத்திற்கும் தொடர்பில்லை. மூளையின் செயல்பாடுகளே மனம் என்கிறது அறிவியல்) மனத்திலிருந்து சந்திரன் தோன்றியதாம். தொப்புள் தோன்றியதாம். அதிலிருந்து அபானன், அபானனிலிருந்து மரணம் தோன்றியதாம். குறி தோன்றியதாம். பிளந்த குறியிலிருந்து விந்துவும் விந்துவிலிருந்து தண்ணீரும் உண்டாயிற்றாம். உபநிஷத்தின் உடற்கூறு வினோதமாக உள்ளதே! மருத்துவ அறிவியலுக்கும் விரோதமாக உள்ளதே!

மனித உடம்பு 11 வாசல்களை உடையதாம். கண்கள் 2, காதுகள் 2, நாசித்துளைகள் 2, வாய், தொப்புள், குறி, குதம, பிரம்மரந்திரம் என்பவையாம். இதயத்தின் நாடிகள் 101. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறதாம். அதன் வழியே ஆவியை விடுபவன், மரணமற்ற நிலையை அடைகிறானாம். வேறு வழிகளில் இறப்பவன் மறுபிறவியை அடைகிறானாம். ஆசையற்ற யோகியால் மட்டுமே பிரம்மரந்திரம் வழியே உயிரை வெளியேற்ற முடியுமாம்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு இறையுணர்வு அதிகமாம். கருப்பையிலிருந்து வெளியே வந்து க்வ, க்வ, க்வ என்று அழுகிறது. சமஸ்கிருதத்தில் க்வ என்றால் எங்கே என்று பொருளாம். பூமிக்கு வந்ததும் குழந்தை கடவுளை எங்கே என்று தேடுகிறதாம். முட்டாள் தனமான உளறல், அல்லவா?

இதுதான் ரிக் வேதம்.

யஜூர் வேதம்

ஒன்றாக இருந்தாதாம். பின் இரண்டாகப் பிரிக்கப்பட்டதாம். க்ருஷ்ண யஜூர், சுக்ல யஜூர் என இரண்டாக உள்ளது. யஜூர் வேதம் 101 கிளைகளை உடையதாம். இப்போது 56 மட்டுமே உள்ளன. மீதி அழிந்து விட்டனவாம். அழிவது எப்படி வேதம் ஆகும்? 56 சாகை (கிளை)கள் அக்னிவேசம் தொடங்கி வைதேயம் முடிய 15 சாகைகள் சுக்ல (வெள்ளை) யஜூரிலும் உள்ளன. க்ருஷ்ண யஜூருக்கு 32 உபநிஷத்களாம். சக்ல யஜூருக்கு 17 மட்டுமே. கிருஷ்ண யஜூர் தென்னாட்டில் பிரபலம் - வட நாட்டில் சுக்ல யஜூர் வேதத்திற்கே மவுசு.

க்ருஷ்ண யஜூர் மந்த்ரங்களுக்கு தைத்திரீய சம்ஹிதை எனவும் பெயராம். ஸம்ஹிதை என்றால் மந்திரங்களின் கூட்டங்களாம். யஜூர் வேதத்தில் அக்னி, இந்திரன், சூரியன், விஷ்ணு, சோமன், மருத்துக்கள், புவி, ஜலம், உஷை, வருணன், சந்திரன், சூத்திரன், ஸரஸ்வதி முதலியவை முதன்மை தேவர்களாம்.

யாகம் போலவே மானுட வாழ்க்கையாம். முதல் வருஷம் காலை யாகமாம். அடுத்த 44 யாகங்கள் பகல் யாகங்களாம். மீதி 48 வருஷங்கள் மாலை யாகங்களாம். 93 வருஷங்கள் மட்டுமே மனித ஆயுள் எனப் பொருளா? விளக்கம் இல்லை வேதத்தில் சோமயாகம் என்றால் சோம அமுதத்தை நாடுவதாம். சோமபானம் தயாரித்துக் குடித்தலா? செல்வத்தை நாடிச் செய்யப்படுவது வாஜபேயம் என்பதாம். இதைச் செய்பவன் வாஜபேயி எனப்படுவான். 

ஆட்சி அதிகாரம் பெற்றிடச் செய்வது ராஜசூயம். படைப்பின் அற்புதங்களை அறிய விரும்பிச் செய்யப்படுவது புருஷமேதம். அனைத்தையும் அறிய விரும்புவது சர்வமேதம். தோற்றவன் மீண்டும் வெற்றி பெற்றிடச் செய்வது சவுத்திரமணி.

பலவாறாக ஆவதற்குச் செய்பவை பிரவர்க்கியம் எனப்படுமாம். அஸ்வமேதம் என்பது அகண்ட ஞானத்தைச் சுட்டும். வேத வாழ்க்கையின் ரகஸ்யத்தைச் சொல்லும். காயத்ரி மந்த்ரம் என்பது ஒளிக்கடவுளாம். இதனால் சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லையாம். இதனை அய்ந்து பகுதிகளாக, இடையில் நான்கு முறை நிறுத்தி ஜெபிக்க வேண்டுமாம்.

ஓம் பூர் புவஸ்ஸூவ

தத் ஸவிதுர் வரேணியம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோ ந பிரசோதயாத்

என்று ஜெபிக்க வேண்டுமாம். சூரிய உதயத்திற்கு முன்பும், உச்சி சூரியன் உள்ள நடுப்பகலிலும், சூரியன் மறையும் மாலையிலும் ஜெபிப்பது நல்லது. தினமும் 108 முறையாவது ஜெபிக்க வேண்டுமாம்.

புருஷன் என்றால் கடவுள். புருஷசூக்தம் என்றால், கடவுளின் மகிமையைப் பாடுதலாம். கோயில், வீட்டில், தினசரி வழிபாட்டில், தினசரி பாராயணத்தில், வைதீகச் சடங்குகளில், தினசரி கர்மங்களில் எல்லாம் புருஷ சூக்தம் சொல்லப்படுகிறது. பொருள் இதுதான். கடவுளுக்கு ஆயிரக்கணக்கான தலைகள். ஆயிரக்கணக்கான கண்கள். ஆயிரக்கணக்கான பாதங்கள். அது பூமியெங்கும் வியாபித்துப் பத்து அங்குல அளவில் நிற்கிறதாம். அதன் முக்கால் பங்கு மேலே விளங்குகிறதாம். கால் பங்கு மட்டுமே இப்பிரபஞ்சமாம். யாகத்தில் பலியிடப்பட்ட பிரம்மாவின் முகம் பார்ப்பனனாக ஆயிற்றாம். கைகள் சத்திரியனாகவும் தொடைகள் வைசியர்களாகவும் ஆயினவாம். பாதங்களிலிருந்து மற்றவர்கள் தோன்றினராம். ரிக்வேத புருஷ சூக்தம் போலவே மஜூர் வேத சூக்தமும் உள்ளது.

வேதங்களிலும் புராணங்களிலும் காணப்படும் மகாலட்சுமியின் துதிகளின் தொகுப்பையே சிறீஸக்தம் என்கிறார்கள். வடநாட்டில் இதற்கு மரியாதை கிடையாது. தெற்கே மட்டும் தானாம். ஏன் இந்தப் பாகுபாடு? விளக்கம் இல்லை.

தொடரும்....