ஞாயிறு, 23 ஜூன், 2024

மீமாம்சம் - நாத்திகவாதம்

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

 நவம்பர் 16-30, 2023

நூல் குறிப்பு:
நூல் பெயர்: பண்டைய வேதத் தத்துவங்களும்
வேத மறுப்புப் பௌத்தமும்
ஆசிரியர்: நா. வானமாமலை
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்,
எண்.5/1ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம், சென்னை-600 089.
கைபேசி : 9841775112
பக்கங்கள் : 76; விலை: ரு.65/-

மீமாம்சத்தின் ஸ்தாபகர் ஜைமினி எனும் அறிஞர். தமிழ்நாட்டு நக்கீரர், அவ்வையார் என்ற புலவர்கள் பல காலங்களில் பலர் இருந்ததைப்போன்று, பல ஜைமினி முனிவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இது ஒரு கோத்திரப் பெயராக இருக்கலாம். மீமாம்ச சூத்திரம் என்னும் முதல் மீமாம்ச நூலை எழுதியவர் ஜைமினி என்றழைக்கப்படுகிறார். அவர் தமக்கு முன்வாழ்ந்த பல தத்துவஞானிகளை மேற்கோள் காட்டுகிறார். இந்நூலின் முதல் உரை நூல் சபர சூத்திரம் என்பது. இதை எழுதியவர் சபரர். அவருக்குப் பின் குமரிலபட்டர், பிரபாகரர் என்ற இரு பெரும் தத்துவ ஆசிரியர்கள் வாழ்ந்தனர். இவர்களுடைய தத்துவங்களைச் சங்கரர் எதிர்த்து வாதாடினார். சைவ சித்தாந்தத்தில் பரபக்க மறுப்பில் மீமாம்சத்தைப் பற்ற மறுப்புரை கூறும்போது, பிரபாகர மதம் என்றே மீமாம்சம் அழைக்கப்படுகிறது.

மீமாம்சம் அகவய ஆன்மிகவாதத்திற்கு, அதாவது சங்கரருடைய அத்வைதத்திற்கு அடிப்படையில் மாறுபட்டது.

மீமாம்சத்தில் பிற்காலத்தில் வேறுபாடுகள் தோன்றி இரு தனிப்பிரிவுகள் தோன்றின. அதில் ஒன்று பட்டர் மீமாம்சம் என்றும், மற்றொன்று பிரபாகர மீமாம்சம் என்றும் அழைக்கப்படும். இவை இரண்டிற்கும் பொதுவானது கடவுள் மறுப்புக் கொள்கையாகும். அறிஞர் ராதாகிருஷ்ணன் மீமாம்சத்தின் நாத்திகக் கொள்கை பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:

“இந்தத் தத்துவத்தில் கடவுளுக்கு இடமில்லை. பூர்வகால மீமாம்சத்தில் இந்தப் பலவீனமான துளையின் வழியாகப் பிற்காலத்தில் கடவுள் நுழைத்துவிடப்பட்டார். கடவுள் இல்லாத மீமாம்சத் தத்துவம் பூர்வ மீமாம்சம் என அழைக்கப்படும்.”

மீமாம்ச சூத்திரத்திற்கு முதலில் உரை எழுதிய சபரர் நாத்திகர். அவர் கடவுளுண்மையை வன்மையாக மறுத்தார். “புலனுணர்வு மூலமாகக் கடவுளை அறிய முடியவில்லை. மற்றெல்லா அறிவு மூலங்களும் புலனுணர்வை அடிப்படையாய்க் கொண்டவை. எனவே, எந்த அறிவு மூலமாகவும் கடவுளை அறிய முடியவில்லை. எந்த அறிவுச் சாதனத்தாலும் அறிய முடியாத ஒன்று இருக்கிறது என்று எப்படி முடிவு சொல்ல முடியும்?” என்றார் சபரர். குமரிலரும் நாத்திகரே. அவர் கடவுள் உண்டென்று வாதிக்கும் நியாய வைசேடிகச் சித்தாந்தங்களை எதிர்த்து வாதாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நியாய வைசேடிகங்கள் கடவுள் உண்டென்று

கீழ்வருமாறு விவாதித்தார்கள்:

“பாண்டம் இருந்தால் அதைச் செய்த குயவன் இருக்கவேண்டும். குயவன் அறிவுடைய படைப்பாளி. இதுபோலவே பிரபஞ்சம் இருப்பதால் அதற்கு ஒரு படைப்பாளியும் இருக்க வேண்டும். அவன் பரிபூரண ஞானமும் எல்லா இடங்களிலும் நீக்கமற வசிப்பவனுமாக இருத்தல் வேண்டும். இப்பிரஞ்சத்தை அவன் அணுக்களாய்ப் படைத்து யுகாந்தரங்களில் அழிக்கிறான்.”

பிரபஞ்சப் படைப்பு, பிரபஞ்ச அழிப்புப் பற்றிய இக்கொள்கையை மீமாம்சர்கள் எதிர்த்தார்கள். அவர்கள் வாதம் வருமாறு:

“ஒவ்வொரு பொருளுக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு. உதாரணமாக நீ கூறும் பாண்டத்தை எடுத்துக்கொள்வோம். இதனால் பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதோ அல்லது இது அழிக்கப்படும் என்பதோ நிரூபணமாகி விடவில்லை. புதிதாக உருவாவதும், இருப்பதும், அழிவதுமான ஒரு தொடர்ந்த செயல்முறைதான் பிரபஞ்சத்தில் காணப்படுகிறது. தனித்தனிப் பொருள்களைப் பொறுத்தவரை நம்மால் அறியப்படுவதற்கு மேல் அவற்றைப் பற்றிக் கற்பனை செய்துகொள்ள வேண்டியதில்லை. உன்னைப் பெற்றவர்கள் உனது தாயும் தந்தையும். நீ பிறக்க ஒரு கடவுளைக் கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை.”
கடவுள் கொள்கையைத் தவிர நியாய வைசேடிகமும் மீமாம்சமும் கர்மம் பற்றிய கொள்கையிலும் வேறுபட்டன. நியாய வைசேடிகக் கூற்று வருமாறு:

“நற்செயல்கள், தீச்செயல்களால் புண்ணியமும் பாவமும் முறையே உண்டாகின்றன. இவற்றின் தொகுதி அதிர்ஷ்டம் எனப்படும். இது விளைவுகளைத் தோற்றுவிக்கும். ஆனால், அதிர்ஷ்டம் அறிவற்றது. அது தன்னைத்தான் வழிநடத்திக் கொள்ளாதது. எனவே, அதை வழிநடத்த அறிபவன் ஒருவன் வேண்டும். எண்ணற்ற ஆன்மாக்களின் அதிர்ஷ்டத்தை வழிநடத்தி இயக்குபவன் எங்கும் வசிப்பவனாகவும் எல்லாம் அறிந்தவனாகவுமிருக்க வேண்டும். ஆதலால் பிரபஞ்சத்தில் ஈஸ்வரனுக்கு அவசியம் ஏற்படுகிறது.”

கர்மவினைகள் என்ற கொள்கையில் அதிர்ஷ்டம் என்ற கருத்தை உருவாக்கி, அதை இயக்குவதற்கு ஒரு ஈஸ்வரனை நியாய வைசேடிகர்கள் கற்பித்தார்கள். இந்த வாதத்திற்குப் பிரபாகரர் பின்வருமாறு விடையளித்தார்:

1. நீங்கள் சொல்லுகிற அதிர்ஷ்டம் அறிய முடியாதது என்று சொல்லுகிறீர்கள். அப்படியானால் உங்களுடைய கடவுளுக்கு அறிவு இருக்க முடியாது. கடவுளுக்கு அதுபற்றி அறிவு இருக்கும் என்று நீங்கள் கூறினால், அவருக்கு மனம் என்ற ஒன்றும் இருக்கிறது என ஒப்புக் கொள்ளுகிறீர்களா? மனம், உடலோடு சேர்ந்துதான் இருக்கும். கடவுளுக்கு உடல் இருப்பதாக நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

2. அதிர்ஷ்டத்தைக் கடவுள் அறிய முடியும் என்று வைத்துக்கொள்வோம். அறிந்தாலும் அதை மேற்பார்வை செய்ய அவரால் முடியாது. அவ்வாறு செய்ய வேண்டுமானால் கடவுளுக்கும் அதிர்ஷ்டத்திற்கும் ஏதாவதொரு தொடர்பு இருக்க வேண்டும். தொடர்பு என்பது பொருள்களுக்கிடையில்தான் இருக்க முடியும். அதிர்ஷ்டம் ஒரு குணம். இது ஆன்மாவின் குணம். இந்தக் குணம் கடவுளோடு எப்படித் தொடர்பு கொள்ள முடியும்?”
குமரிலர், தெய்வம் உண்டு என்ற கொள்கையைக் கேலி செய்தார். “உடலில் இல்லாத ஆன்மா எதையும் படைக்க முடியாது. பிரபஞ்சத்தைப் படைக்க உடல் வேண்டும். தன்னுடலைத் தானே படைத்துக்கொள்ள முடியாது. அப்படியானால் கடவுளின் உடலைப் படைக்க இன்னொரு படைப்பாளி தேவை.” இப்படியே முடிவின்றிக் கூறலாம்.

ஒரு முட்டாள் கூட நோக்கமில்லாமல் எதையும் செய்ய மாட்டான். துன்பமும் துயரமும் நிறைந்த இந்த உலகில் சர்வ சக்தியும் பெருங்கருணையும் உடைய கடவுள் என்ன நோக்கத்திற்காகப் பிரபஞ்சத்தைப் படைத்திருக்க முடியும்? நோக்கமில்லை, அது அவன் திருவிளையாடல் என்றால் கடவுள் சிறுபிள்ளையா? பைத்தியக்காரனா?”

குமரிலர் உலகப் படைப்புப் பற்றிய வேதாந்தக் கொள்கையையும் மறுத்தார். “வேதாந்தத்தின் கொள்கைப்படி பிரம்மம் என்னும் தூய உணர்வுதான் இறுதி உண்மை
யாகும், படைப்புக்குக் காரணம் மாயை. மாயை, கனவுபோல் உண்மையில்லாதது. அப்படியானால் அது எதனைப் படைக்க முடியும்? பிரம்மம் மாயையைப் படைக்க முடியாது. ஏனெனில் பிரம்மம் தூய்மையானது; தொடர்பற்றது; விளைவற்றது; கிரியையில்லாதது.”

மேற்கூறியவற்றிலிருந்து ஆன்மீகவாதம், கடவுளுண்மைவாதம், அதிஷ்ட வாதம் முதலிய கருத்து முதல்வாதக் கருத்துகளை மீமாம்சர்கள் எதிர்த்தார்கள் என்றும் அதற்காகத் தர்க்க ரீதியான விரிவான விவாதங்களைப் படைத்தார்களெனவும் கண்டோம்.

(அ) மீமாம்ச நாத்திகம் – காரணம்

இவர்கள், தனிப்பெரும் கடவுள் அல்லது முழுமுதற் கடவுள் எனும் கருத்தை ஏன் எதிர்த்தார்கள்? அவர்களுடைய நோக்கம் பழைய வேத காலத்து யக்ஞங்களைப் புதுப்பிப்பதும் யக்ஞங்களின் தெய்வங்களை மீண்டும் வழிபடுவதும் ஆகும். மாறிய சூழலில் யக்ஞங்களையும் தெய்வங்களையும் பற்றி அவர்கள் திருத்தியமைத்த விளக்கத்தைக் கூறினார்கள். யக்ஞங்களுக்கும் தேவர்களுக்கும் என்ன தொடர்பு? இக்கேள்விக்குப் பூர்வ மீமாம்சர்கள் அளித்த பதில் வருமாறு:

“வேதங்கள், சடங்காசாரக் கட்டளைகளே! சடங்காசாரங்கள் நடைபெறும்போது தேவர்கள் வழிபடப்படுவதில்லை. தேவர்களுக்கு வஸ்துவான உருவங்களில்லை. அவர்கள் பலிகளை ஏற்றுக்கொள்ளவோ அவற்றால் மகிழ்ச்சியடையவோ முடியாது. அவர்கள் நமது விருப்பங்களை நமக்கு அளிக்க முடியாது. பின் தேவர்கள் என்பவர்கள் யார்? _அவர்கள் யக்ஞங்களுக்கு அவசியமான பெயர்களும் ஒலிகளும் மாத்திரமே! மந்திரங்களையே தேவர்கள் என்கிறோம்.”

வேத காலத்து மாபெரும் தெய்வங்களான இந்திரனும் அக்கினியும் பூர்வ மீமாம்சரின் கருத்தில் வெறும் ஒலியாகவும் காற்றாகவும் போய்விட்டனர். இவர்களின் கருத்துப்படி சடங்காசாரங்களுக்கே சொந்த சக்தி இருக்கிறது. அவை தமது சுயவிதிகளின்படியே பலன்களைத் தருகின்றன. யக்ஞம் என்ற பொருளுக்குச் சபரர் கூறும் பொருள். இன்றைய மானிடவியல் அறிஞர்கள் கூறும் மந்திரம் (Magic) என்னும் சொல்லுக்குக் கூறும் பொருளாகவே காணப்படுகிறது.

இனக்குழு மந்திரவாதிக்கு (Magician, shaman) தனது மந்திரவாதச் செயல்களையும் அர்த்தங்களையும் விளக்க அவசியமில்லை. அவர்கள் செயலை விளக்க ஒரு கொள்கை (theory) அவசியமில்லை. தத்துவ வளர்ச்சி பெற்ற சூழ்நிலையில் மீமாம்சர்களுக்குத் தங்களது சடங்காசாரச் செயல்களையும் நம்பிக்கைகளையும் கொள்கை மூலம் விளக்க வேண்டியது அவசியமாயிற்று. இதனால்தான் வேதகாலத்தில் இயல்பாக இருந்த நம்பிக்கைகள், பிரம்மம், கடவுளுண்மை, கர்மம், ஒருமை முதலிய கருத்துகள் வளர்ந்துவிட்ட சூழலில்,சமுதாய அடிப்படை அற்ற, அழிந்துபோய்விட்ட பண்டைய சமுதாயத்தின் மேற்கோப்பு நம்பிக்கைகளை நிலைநிறுத்த வேண்டிய முரண்பாட்டில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். ♦


வேதங்களில் மொழியும் இலக்கியமும்


 நவம்பர் 1-15, 2023

நூல் பெயர்: ‘வேதங்கள் ஓர் ஆய்வு’
நூல் ஆசிரியர்: சனல் இடமருகு
தமிழில்: த. அமலா
பக்கங்கள்: 120
விலை: 90/-

வேத மந்திரங்கள் உருவம் பெற்ற காலத்தில், ஆரியர்கள் பயன்படுத்தி வந்த மொழிக்கு பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதுபோன்று இலக்கணத்திலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. வேதங்களோ பார்ப்பனர்களின் இதயத்திலேயே ஒளிந்து நின்றது. அதை மாறிய சூழ்நிலையில் மொழியின் மூலம் அறிந்துகொள்வது சிரமமாக இருந்தது. யாஸ்கரின் நிருத்தமும், ஸாயணாச்சாரியாரின் வேத பாஷ்யமுமே வேதங்களைக் கடந்து செல்ல இன்று நமக்குப் பெரிதும் உதவுகின்றன.
மொழியியலறிஞர்கள் ‘இந்தோ_இரானியன்’ என்று அழைக்கப்படுகின்ற ஒரு மூல மொழியிலிருந்து பிரிந்த இரண்டு மொழிகளே இரானியனும் சமஸ்கிருதமும் என்கின்றனர். ‘இரான்’ என்ற சொல் ‘ஆரியன்’ என்ற சொல்லோடு நெருங்கிய தொடர்புடையது. சவுராஷ்டிரர்களின் மத நூலான ‘அவெஸ்த’யில் இரானியன் மொழியின் பழைய வடிவைக் காணலாம். வேதங்களும் ‘அவெஸ்த’யின் முதல் பகுதியான ‘காத’ய்க்கும் வேதங்களுக்குமிடையே அற்புதமான மொழி ஒற்றுமை காணப்படுகின்றது. சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:1

சமஸ்கிருதம்                             அவெஸ்த
ஹிரண்ய                                        ஸரண்ய
ஸேன                                                ஹேன
யஜ்ஞ                                                 யஸ்ன
ஸோம                                             ஹோம
ஆஹுதி                                          ஆஸுதி
ஹோதர்                                            ஸோத்ர

கடவுளின் பெயர்களிலும் இந்த ஒற்றுமை காணப்படுகிறது. இந்த ஒற்றுமையை டாக்டர் ராதா குமுத் முகர்ஜி சுட்டிக்காட்டுகின்றார்.2

சமஸ்கிருதம்                      அவெஸ்த
இந்திர                                           இந்திர
வாயு                                                 வாயு
மித்ர                                                 மித்ர
நாஸ்த்ய                               நவோன்ஹைத்ய
வ்ருத்ரக்ன                                     வெரத்ரக்ன

மொழியின் அற்புதமான இந்த ஒற்றுமை-யைச் சுட்டிக்காட்டுவதன் காரணம். ‘அவெஸ்த’யை இயற்றியவர்களான இரானியரும் வேதங்களை இயற்றிய ஆரியர்களும் ஒரே குடியேற்றத்தின் இரு பிரிவினரே என்று காட்டுவதற்காகவேயாகும். வடமேற்கிலிருந்து வந்த குடியேற்றக்காரர்களின் ஒரு பிரிவினர் இரானில் (பெர்சியாவில்) தங்கினர். மீதியுள்ளவர்கள் மீண்டும் புதிய மேய்ச்சல் நிலங்களைத் தேடி தென்திசைக்கு வந்தனர். சிந்து சமவெளியை அவர்கள் அடைவது வரை, அவர்கள் சென்ற இடங்களிலுள்ள மொழிகளில், அவர்களது (ஆரியர்களது) மொழி ஆதிக்கம் செலுத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளன.3

ஹரப்பாவாசிகள் எழுத்துகளைப் பயன்படுத்தினரென்றாலும், அவர்களுடைய மொழியைப் படித்துப் புரிந்துகொள்ள இதுவரை நம்மால் இயலவில்லை. ஒரு சமயம் அந்த மொழி முழுமையாக அழிந்து போயிருக்கலாம். இந்தியாவில் இப்போது நிலவி வருகின்ற ஆரிய மொழியல்லாத மொழிகளில் ஏதாவதொன்றின் மூல மொழியா அது? திராவிட மொழிப் பிரிவைச் சேர்ந்த ஒரு மூல மொழியையே ஹரப்பர்கள் பயன்படுத்தியதாகப் பரவலான ஒரு வாதமுண்டு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கொத்த, தோட முதலிய தென்னிந்திய மொழிகள்; மத்திய பாரதத்திலுள்ள நாய்க்கி, கோலாமி, பார்ஸி, ஒல்லாரி, கோண்டி, கொண்ட, கயி போன்ற மற்ற முக்கிய மொழிகள்; வட இந்தியாவிலுள்ள குறுக், மாழ்ட்டோ போன்ற கோத்ரவர்க்க மொழிகள்; பலுசிஸ்தானிலுள்ள ப்ராஹுவி போன்றவை திராவிடப் பிரிவைச் சேர்ந்த மொழிகளாகும்.

ஆரியர்கள், வேதங்களைத் தோற்றுவித்த காலத்திலும் ஹரப்பர்கள் மீது ஆக்ரமிப்பு நடத்திய காலத்திலும் எழுத்துகளைப் பயன்படுத்தவில்லை. ஹரப்பர்களிடமிருந்தே அவர்கள் எழுத்துகளைப் படித்திருக்க வேண்டுமென நியாயமாகக் கருத இடமுள்ளது. நூற்றாண்டுகளாக நீண்டு நின்ற போர்களுக்கிடையில் நாகரிகமும் மொழியும் ஒன்றுக்கொன்று கலந்திருக்கலாம். இந்தக் கலவை தஸ்யூக்கள் தோல்வியடைந்த பிறகு அதிக சக்தி பெற சாத்தியக் கூறுகள் உள்ளன. பழைய சமஸ்கிருதச் சொற்கள் திராவிட மொழியின் கலப்பாலேயே மாறியதென அறிஞரான டாக்டர் பரோவ்ஸின்டா கருதுகின்றார்.4 ரிக் வேதத்தில் உலுகல, குண்ட, தண்ட, பல, பில, மதூர போன்ற திராவிடச் சொற்கள் காணப்படுகின்றன. ரிக் வேதம் எழுதப்பட்டதற்கு முன்பே திராவிட மொழி இருந்ததையே இது காட்டுகின்றது. மொகஞ்சதாரோவிலும், ஹரப்பாவிலும் மக்கள் பேசியது திராவிட மொழியே என்ற வாதத்திற்கு வலிமை கூட்டுகின்ற ஆதாரமே இது.

அடிமைகளாக்கப்பட்ட தஸ்யூ(ஹரப்பர்) படை வீரர்களும், ஆரியர்களின் ஆசை நாயகிகளாகவோ மனைவியராகவோ ஆக்கப்-பட்ட அவர்களுடைய பெண்களும் திராவிட மொழிகள் பழைய சமஸ்கிருதத்தில் கலக்க முக்கியப் பங்கு வகித்திருக்க வேண்டும். இதைத் தொடர்ந்து சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட திராவிடச் சொற்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்க பின்வரும் எடுத்துக்காட்டுகள் உதவுமெனக் கருதுகின்றேன்.5

அனல (தீ) _ அனல் (தமிழ்); அனலு, சூடு (கன்னடம்)
அர்க்க _ எருக்கு (தமிழ்); எருக்கு (மலையாளம்)
அலஸ(சோர்வு) _ அலசு (தமிழ், கன்னடம்)
உலூகல _ உரலு (மலையாளம்); ரொகலி, உலய்க்க (தெலுங்கு)
கங்க _ கொற்றி (மலையாளம்); கொங்க (தெலுங்கு); கொறங்கு(துளு)
கடின _ கெட்டி(தமிழ்); கட்டி (கன்னடம்)
கரக _ கரகம் (தமிழ்); காக்கல (மலையாளம்); காக்கன் (பார்ஸி); காக (குர்க்); காகோ (ப்ராஹுவி)
காஞ்சிக _ கஞ்சி (தமிழ்); கஞ்ஞி (மலையாளம்) கஞ்சி (தெலுங்கு)
காள (கருமை) _ கார் (தமிழ்)
குடி (வீடு) _ குடி (தமிழ், துளு, கன்னடம், தெலுங்கு)
குண்ட (பாத்திரம்) _ குடம் (தமிழ்)
குத்தளா _ குத்தாலி (கன்னடம்); குத்தோலி(துளு)
குந்தள _ கூந்தல் (தமிழ்); கூதல்(கன்னடம்)
குவலய(தாமரை) _ குவளை (தமிழ்); கோமலை (கன்னடம்)
கெமுக _ சேம்பு (தமிழ்); சேவ் (துளு); கேசு (கன்னடம்) சேம (தெலுங்கு)
கோண(மூலை) _ கோண், கோணை (கன்னடம்), கோண (தெலுங்கு)
கோரக _ குரை (தமிழ்); காரு (குயி); கொர்ஸன
(மொட்டு) (கோண்டி); கொரசே (மாழ்ட்டெ)
கள (களம்) _கன, கள (கன்னடம்); களாய் (குயி); கர (கோண்டி)
கல (மூர்க்கன்) _ கள்ள (கன்னடம், தெலுங்கு)
சூட _ சூடு (தமிழ்); ஸுடு (கன்னடம்);
தாமரஸ (தாமரை) _ தாமரை (தமிழ்); தாமர(தெலுங்கு); தாவரெ (கன்னடம்)
நீர (தண்ணீர்) _ நீர் (தமிழ், குயி); நீரு (துளு, தெலுங்கு); தீர்(ப்ராஹுவி)
பண்டித _ பண்டு (பழுஞ்ஞ, தெலுங்கு) பாண்ட் (பழுஞ்ச, கோண்டி)
புன்னாக _ பூனை (தமிழ்); பொன்னே (கன்னடம், தெலுங்கு)
பில _ பிளவு (தமிழ்); விள்ளு (மலையாளம்)
மஹிள _ மகள் (தமிழ்); மகளு (துளு); மள்(பார்ஸி)
மால _ மாலை (தமிழ்); மாலெ (கன்னடம்)
மீன _ மீன் (தமிழ், கோண்டி); மீனு (குயி, மால்ட்டோ, தெலுங்கு)
முக்த _ முத்து (தமிழ், கன்னடம், தெலுங்கு)
முரஜ _ முரசு (தமிழ்); மொரயு (தெலுங்கு)
முருங்கி _ முருங்கை (தமிழ்); முனக (தெலுங்கு) முளுங்க (பார்ஸி)
வலய _ வளை (தமிழ்)
வல்லி _ வள்ளி (தமிழ்); பள்ளி (கன்னடம்); வள்ளி (தெலுங்கு)
சவ _ சாவு (தமிழ்) சா (கன்னடம்)
சூர்ப்ப _ துறு(தமிழ்); துப்பு (துளு)
ஹேரம்ப (எருமை) _ எம்மெ (கன்னடம்); எர்மெ(எருமை) (துளு); எர்மி (கோண்டி)

ஆரியர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்னர் அடிபணிந்தவர்கள் அவர்களது அடிமைகளாயினர். மலைகளுக்கும் காடுகளுக்கும் தப்பிச் சென்ற மற்றொரு கூட்டத்தினருமுண்டு. மத்திய இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் கோத்திர வர்க்கத்தினராக வாழ்கின்ற அவர்கள், நாகரிக வளர்ச்சிக்குரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் பழைய கோத்திர நாகரிகத்தையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்-கின்றனர். அவர்களுடைய மொழி, பாடல்கள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றில் மிகவும் பழமையான அவர்களுடைய லவுகீக நடைமுறைகளே குறிப்பிடத்தக்க மாற்றங்களின்றித் தொடர்ந்தன.

திராவிட மொழிகளில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகவும் மெதுவாக ஏற்பட்டவையேயாகும். நாகரிக வளர்ச்சியின் முன்னோக்கியுள்ள பயணத்தினிடையில் பெருகிய ஆதிவாசிகளின் மொழிகளுக்கும் புதிய திராவிட மொழிகளுக்குமிடையே மிகுந்த ஒற்றுமை இருப்பதற்குக் காரணம் இதுதான்.
ஹரப்பர்களின் கோட்டை கொத்தளங்களைக் குடியேற்றக்காரர்களான ஆரியர்கள் தகர்த்தனர். செங்கற்களால் கட்டப்பட்ட அவர்களது கட்டடங்கள் தரைமட்டமாயின. கழிவு நீரோடைகளும் கழிப்பிடங்களும் பயனற்றுப் போயின. ஆனால், பழைமையான அந்த நாகரிகம் ஆரிய நாகரிகத்திற்குப் பல நன்மைகளையும் அளித்தன. அவற்றை உட்கொண்டு ஒரு புதிய நாகரிகம் வளர்ந்தது. மூலதிராவிட மொழி, சமஸ்கிருத மொழிக்குச் சிறந்த ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.

இலக்கிய நூல்

வேதங்கள் பிரதிபலிக்கின்ற சமுதாய எண்ணங்கள் பயன் அற்றவையென்றாலும், அவற்றின் மனிதத் தத்துவம் பலவீனமானது என்றாலும், பழங்கால மனிதர்களின் நம்பிக்கை ஆச்சாரங்களின் கோர்வையென்பதில் பெரிய ஆழமொன்றும் வேதங்களுக்கு இல்லை-யென்றாலும் ஓர் இலக்கிய நூல் என்ற நிலையில் வேதங்களுக்குரிய இடம் ஒளிமயமானது. வேதங்களிலுள்ள பாவனைகளும் காவிய உணர்வும் மனோகரமானவை. பிற்கால சவுந்தர்ய சாஸ்திர (aesthetics) வளர்ச்சியில் வேதப் பாரம்பரியம் வகித்த பங்கு தெளிவானதாகும். ♦


நவராத்திரி


2023 அக்டோபர் 16-31, 2023 

சாமி கைவல்யம்

நவராத்திரி என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள், கடவுள்களின் உருவமான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்காலமும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம்.

இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியா விட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். வேதபாராயணம், சூரிய நமஸ்காரம் முதலியவைகளை நடத்த
பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாளில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும்படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப்பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக்களுக்கும், பணம் படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தியோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப்பனனுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து, ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.

நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, காலை முதல் உபவாசமிருந்து சரஸ்வதியை பூஜை செய்ய வேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள், ஆயுதத்தையுடையவர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்துப் பூஜை செய்வது வழக்கம். அதனா லேயே இந்தப் பூஜைக்கு ஆயுத பூஜை என்றொரு பெயரும் உண்டு. இந்த நவராத்திரியை இந்துமதப் பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண்டாடுகிறார்கள். அன்றியும் சிவ, விஷ்ணு ஆலயங்களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடுகிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள். இந்த வேடிக்கைகளைப் பார்க்கவே அநேகர் மைசூருக்குப் போவது வழக்கம். இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப்பனரும் இவ்வுற்சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்பதால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள். நிற்க,
இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்னவென்றால், கல்வியும், ஆயுதமும் அதற்குக் கற்பிக்கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்டவர்கள் – ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங்களின் அம்மன்களானதனாலும், இந்து மதத்தவர்களுக்கெல்லாம் இது சம்பந்தப்
படுத்தப்பட்ட புராணக் கதைகளிலிருப்பதாலுமேயாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்காவிட்டாலும், இது சம்பந்தமான கதைகள் அவர்களிடையேயும் உண்டு. மற்றவர்கள் சரஸ்வதி பூஜையன்று துர்க்காலட்சுமி ஸரஸ்வதீப்யோ நம என்று கூறிப் பூஜை தொடங்குவார்கள்.

முன்னொரு காலத்தில் மகிஷாசுரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தியாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்தான். இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்தி பெற்று, ஒன்பதாம் நாள் மகிஷாசுரனைக் கொன்று, பரிவாரங்களை நாசம் செய்து சாந்தம டைந்தாளாம். மகிஷாசுரனைக் கொன்றதனால் பார்வதிதேவிக்கு மகிஷாசுரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே, இந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பாள் என்னும் கருத்தைக் கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் புராணக் கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர்களுக்கு இதில் வயிறு வளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந்தாலும் கூட இது போன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது, தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள் என்று எதற்கும் தத்துவ நியாயம் சொல்வதுபோல், இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேத பாராயணம், கோயிலில் நடக்கும் பூஜை, ஆராதனைகள், ஒன்பது நாளும் பார்ப்பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவை களால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டு பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம். படித்த பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத்தென்ன வென்றால் மகிஷாசுரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என்பதை அஞ்ஞானமும் அதன் காரியங்களுமாகவும், பார்வதியை சித் சக்தியாகவும் அது பரம்பொருளாகிய ஆத்ம ஸாக்ஷாத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண் டுமாம். துர்க்காலட்சுமி சரஸ்வதீப்யோ நம என்னும் மந்திரத்தைப் பார்ப்பானிலிருந்து அம்மனையே பிரதானமாகப் பூசிக்கும் சங்கரமடத்து சாஸ்திரிகள் வரையிலும், மக்களிடமிருந்து கிடைக்கும் வரையிலும், தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர்களை வேரறுக்கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்து வார்த்தம் சொல்லும் சமயவாதிகளெல்லாம் மகிஷாசுரனிடமல்லவா (அதாவது ஆசையில்) மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

முன்னொரு காலத்தில், லட்சுமிதேவி உலகில் அலர்மேலு மங்கையாக வந்து, பரமதபதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெருமாளை அடைந்து ஆனந்திக்க, இந்த ஒன்பது நாள் தவமிருந்தாளாம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுப்பெற, விவாகம் பெரிய ஆடம்பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன்னிட்டுத்தான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்நாள்களில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கிறது. பிரம்மாவின் பத்தினியான சரஸ்வதியும் இந்த நவராத்திரியில் தன் நாயகனை அடைந்து நிலைபெறத் தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு, கடைசி மூன்று நாளும் சரஸ்வதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி அன்று சரஸ்வதி தவம் முடிந்து சந்துஷ்டியாயிருப்பதால், அன்று வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம்; தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.

இதை நம்பி நடக்கும் நம்மைவிட, மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத்துடன் இருக் கிறாள். நம் தேசத்தில் வருடத்திற்கு ஒருநாள் தான் கண்ணைத் திறந்து திருப்திப்படுகிறாள். இதற்குக் காரணம், பார்ப்பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று பார்ப்பதற்காகவோ அல்லது பூஜையின் திருப்திக் குறைவாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றிகெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன்மொழியான சமஸ்கிருத இலக்கணத்தைத் தன் முதற் பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ? என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்

கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஓர் அரசன் இருந்ததாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்சாதியான சுவேதி என்பவளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூஜையை உபதேசித்ததாகவும், அவ்வாறே அவள் செய்து அங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து, அவன் சத்துருக்களை ஜெயித்துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகின்றது. நவராத்திரிக்கு இன்னும் இதுபோன்ற பல கதைகளும் உண்டு.

கிரேதாயுகம் முதற்கொண்டு, இதுநாள் பரியந்தம் செய்த பூஜைகளும், மந்திரங்களும், அதைச் செய்த ஜன சமூகங்களும், நம் நாடும், அதை ஏற்றுக் கொண்ட தெய்வங்களும் அய்ந்நூறு வருடங்களாக அந்நியர் படையெடுப்பால் சின்னாபின்னப்பட்டு, வெள்ளைக்கார மந்திரத்தால் வெளியேற்றப் பட்டிருக்கையில், நமது சரஸ்வதியும், லட்சுமியும், பார்வதியும் அவர்களுக்குப் பூஜையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு? என்று குடிஅரசு கேட்டு விட்டால், சமயவாதியும், சாஸ்திரவாதியும், அது சமயத்தை அடியோடு தூஷிக்கின்றது என்று சொல்லுவத னாலும், படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ், பி.ஏ., எம்.ஏ.,வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா? இல்லையா? என்று தான் கேட்கிறோம்!

மேலும், விஜயதசமி அன்று சிவன் கோயிலில் பரிவேட்டை உற்சவம் என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று பகவான் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னிமரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி, அந்த மரத்தை எரித்து விடுமாம். அதனால் வேட்டையாடுவோருக்கும், ராஜாக்களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்தக் காரணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர். என்றாலும், இதற்கும் உள்கருத்துண்டாம். உள் கருத்தை வைத்துத்தான் நம் நாடு உள்ளேயே போயிற்று. பாமரர்களுக்கு உள்கருத்து ஸ்தூலமாகவும், படித்தவர்களுக்குச் சூட்சுமமாகவும் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். (எந்தச் சூட்சுமமும் பாமரர்களைப் படித்தவன் ஏமாற்றவே உபயோகப்படுகிறதே ஒழிய, காரியத்திற்கு ஒன்றும் உபயோகப்படுவதில்லை). அதாவது, நெருப்பிலடங்கிய வன்னி மரத்தையே ஆத்மாவோடு கூடிய தேகமாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்புவிடுவதை ஞானோபதேசமாகவும், மரம் எரிந்து விழுவதை கரும சம்பந்தமானவைகளை ஞானத்தணல் சுட்டு வெண்ணீராக்குவதாகவும் கொள்ள வேண்டுமென்பார்கள். இந்த உள்கருத்து உபதேசம் கேட்டுத்தான் ராஜ வம்சமெல்லாம் நடுத்தெருவில் நின்றதான வடதேசத்துக் கதைகள் அநேகம்.

மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமையானார். ஆனால், வெள்ளைக்காரப் பரிவேட்டை தான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சாவூர்ராஜா செய்த சரஸ்வதி பூஜையும், ஆரிய பரிவேட்டையும் சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின்வாயிலில் ராஜாவை ஓடச் செய்துவிட்டது. அதுபோலவே, திப்பு காலத்தில் திருவனந்தபுரத்து ராஜாவிற்கு வெள்ளைக்காரர்கள் அபயம் கொடுத்தார்களே ஒழிய, சரஸ்வதி பூஜையும், பரிவேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத்திராவிடில், அனந்த சயனப் பிரபுவும், அவர் பெண்சாதியும், அவர் மருமகளும் ஓடிப் போயன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடிவந்து தங்கள் சொத் தென்று, அங்கு சயனித்துக் கொண்டிருப்பதாக இப்பொழுதும் சொல்லுகிறார்கள்.

கடவுளையும், பெரியவர்களையும் தூஷிக்கிறவர்கள் காட்டும் ஆதாரங்களையும், அதன் நியாய வாதங்களையும் கூட்டி ஆலோ சியுங்கள். சரஸ்வதியைக் கொலுவிருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்திற்கு 50 பேருக்குக்கூட கல்வி இல்லை. சரஸ்வதியே இல்லாத நாட்டில் ஆயிரத்திற்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.
நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானியமல்லவே! ஓர் ஏட்டைக் கிழியோம்; ஓர் எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; படித்த ஒரு பழைய ஏட்டையும் வீசி எறியோம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடுவோம்; கைபட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் புண்ணிய தீர்த்தத்தில் கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும், கம்பன் கவித்திறனும் அவளே என்போம். இத்தனையும் போதாமல் வருடம் ஒருதரம் பத்து நாள் பள்ளியறையில் வைத்துக் கும்பிடவும் செய்கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய, இந்த சரஸ்வதி கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாமல் மேனாட்டில் குடிபுகுந்த காரணம் என்ன? என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும். ஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார்கள்; காலில் மிதிக்கிறார்கள்; செருப்புக் கட்டுகிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை; நீ ஒருத்தி இருக்கின்றாய் என்றுகூட நினைப்பதில்லை; உனக்குப் பூஜை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமானர்கள் என்கிறார்கள். எனவே நீ செய்வது நியாயமாகுமா? என்று நாங்கள் சொல்லிவிட்டால், உன் பாஷையான சமஸ்கிருத இலக்கணத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படாதென்று நீ சொன்னதாகச் சொல்லும் சாஸ்திரிகளே எங்களை நாஸ்திகர்கள் என்று சொல்கிறார்கள். உன் முதற்பிள்ளையான பார்ப்பனர்களின் தாசிப் பிள்ளை, அடிமை, வேலையாள், ஒழுக்கமற்றவன் என்று எங்களில் படித்த உணர்ச்சியற்ற பண்டிதர்களையும்கூட நீ சொல்லியிருப்பதாக உன் முதற் பிள்ளைகள் சொல்லும் ஏட்டைக்கூட கிழித்தெறியாமல் சற்றும் விசுவாசமற்றுப் போனாயே என்று நாங்கள் சொல்லிவிட்டால், தூஷித்தவர்களாகி விடுவோமா? நீயே சொல்லு?

நீ வாசம் செய்யும் மேனாட்டில் உனக்குப் பூஜையில்லை. நைவேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையுமில்லை. பஞ்சமும் படியாமையுமுடைய இந்த நாட்டின் பேரில் மாத்திரம் உனக்கு வந்த வயிற்றெரிச்சல் என்ன? உன் முதற் பிள்ளைகளுக்கெல்லாம் உன் பேராலேயே அளித்தளித்து ஆண்டியானோமே என்று நாங்கள் சொல்லுவதாலேயே உன் பக்த
கோடிகள், உன் புருஷனுடைய பிரம்மலோகத்திற்கும் உன் மாமனுடைய வைகுண்டத்திற்கும் உன் பாட்டனும் மகனுமான சிவனுடைய கைலாசத்திற்குப் போகும் கதவுகளை (சமயதூஷணையால்) சாத்தினவர்களாகி விடுகிறோமாம். நீயும் உன் குடும்பத்துப் பெண்களும் குடிபோயிருக்கும் நாட்டில் உங்கள் புருஷர்களுக்குக் கோயில் கிடையாது.

கும்பாபிஷேகமில்லை. அப்படியிருக்க, நீங்களில்லாத நாட்டில் உங்களுக்குக் கோயிலும், கும்பாபிஷேகமும், பூஜையும் எதற்கு? இருக்கிற கோயில்களில் நீங்கள் குடியிருந்தால் போதாதா? காணிக்கையையும் நிறுத்தி, கும்பாபிஷேகத்தையும் விட்டு, கோயிலுக்கு எழுதி வைப்பதையும் நிறுத்தி, பணத்தையெல்லாம் படிப்பிற்கே வைத்துவிட்டுப் போங்கள் என்றால், பாமர மக்களுக்காக ஏற்பாடு செய்து வைத்த சமய ஒழுக்கங்களையெல்லாம் தடுத்து மோட்ச வாசலை அடைக்கும் தாசர்களென்று எங்களை ராஜீயவாதிகள் கூடச் சொல்லலாமா?
ஆச்சாரிகளுக்கும், குருக்களுக்கும் அதைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பக்கத்து ஏழைக்குப் படிப்பும்,

தொழிலும் கற்பியுங்களென்றால் ஆச்சாரிகளையும், பெரியவர்களையும் நாங்கள் குற்றம் சொல்லுகிறவர்களாகி விடுவோமா? அறுப்பறுக்கும் காலத்தில் கருக்கரிவாள்கூட ஒரு மூலையில்
கவலையற்றுத் தூங்குகிறதே! வருண பகவானுக்கும் சூரிய பகவானுக்கும் ஏற்பட்ட சண்டையில் வருண பகவான் முறியடிக்கப்பட்டு, ஓடி மறைந்து விட்டானே! சூரியனே இப்போது கழனியில் உள்ள எல்லாவற்றையும் காய்ந்து தொலைத்து விட்டானே! உன் ஆயுதங்களுக்குக் காட்டிலும் கழனியிலும்கூட வேலையில்லை என்றால், பின்னை கருமார் வீட்டிலும் வேலை என்ன? எனவே வேலையில்லா ஆயுதத்திற்குப் பூஜை ஏன்?

சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்டபமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூஜைகளும், கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூஜையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூஜையின் கொலுவால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது?

கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார்கள்? அவரவர்கள் முயற்சியும், கடமையும், எந்தக் கஷ்டத்திலும் செய்து முடிக்கும் தைரியமும்
இருந்தால் எல்லா லட்சுமியும் அங்கே வந்து தீர்வார்கள். இதுவே உலக அனுபோகமும் சாஸ்திரத்தின் கருத்துமாகும். ♦


ஞாயிறு, 16 ஜூன், 2024

தமிழ் வேதங்களும் ஆரிய வேதங்களும்…எதிர்வினை (120)

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (120) – 

நேயன்

பழமையான தமிழ் இலக்கியங்கள், வேதங்களைப் போற்றுகின்றன; வேதம், பண்டைய தமிழர் வாழ்க்கையில் ஆதார அச்சாக இருந்திருக்கிறது என்பதைப் பார்த்தோம். 19ஆம் நூற்றாண்டில், தமிழர்களுக்குத் தனி அடையாளம் தேவைப்பட்டது. வெள்ளைக்காரர்கள் புகுத்திய ஆரிய-_திராவிட இனவாதத்தைச் சில தமிழறிஞர்களும் ஆராயாமல் ஏற்றார்கள். இப்பெரியோரின் தமிழ்ப்பற்று குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல. ஆனால், இவர்களிடம் சமஸ்கிருத வெறுப்புணர்ச்சி உருவாகியிருந்தது. அது, ஆரியர்களின் மொழி. இங்குள்ள பிராமணர்கள், வெளியில் இருந்து வந்தவர்கள்.

முதன்முதலாக, திராவிடமொழிக் குடும்பம் தனித்தன்மை கொண்டது என்பதைச்சொன்னவர் எல்லிஸ்தான். அதை அவர் கண்டுபிடிக்கத் துணை நின்ற சக ஆராய்ச்சியாளர்களே பிராமணர்கள்தான். ஆனால், இந்தியப் பண்பாடு குறித்த துவேஷம் எதுவும் எல்லிஸிடம் இல்லை. பின்னாள்களில், இந்த மொழியியல் கருத்தாக்கத்தை வளர்த்தெடுத்த கால்டுவெல், அதனை இனவாதக் கோட்பாடாக உருமாற்றினார்.அரசியல் தளத்திலும் கொண்டு வந்தனர். அது
தான், திராவிட இயக்கம். ஜாதி மோதல்கள், சமூகப் பிளவுகள் எந்த அளவு ஆழமாகின்றனவோ, அந்த
அளவு தனக்கு நல்லது என்பதை உணர்ந்திருந்த பிரிட்டிஷ் அரசாங்கமும் இதனை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஆதரித்தது. எனவே, ஒரு வலுவான தமிழ் அறிஞர்கள் கூட்டம், இந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதில் ஆச்சரியம் இல்லை. அதேபோல், பிராமணர்களிலும் தங்களை ‘ஆரிய இனத்தவர்’ என்று சொல்லிக்கொண்டவர்கள் கணிசமாக இருந்தார்கள். இதர தமிழக மக்களைக் காட்டிலும், பண்பாட்டிலும் இனரீதியாகவும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதிலும், ஏதோ ஒரு விதத்தில் வெள்ளைக்காரனுடன் இன உறவு உடையவர்கள் என்று சொல்லிக்கொள்வதிலும் அவர்களுக்குப் பெருமை இருந்தது.

சைவத் திருமறைகளும் சரி, பழைமையான தமிழ் இலக்கியங்களும் சரி, நால் வேதங்களைப் புகழ்கின்றன. உதாரணமாக, திருமூலர் தனது திருமந்திரத்தில், ‘வேதத்தை விட்ட அறமில்லை, வேதத்தின் ஓதத் தகும் அறமெல்லாம் உள‘ என்கிறார். சைவ சமயத்தின் மூவர் முதலிகளாக அறியப்பட்ட அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரும், பன்னிரண்டு ஆழ்வார்களும் வேதத்தைப் போற்றிப் புகழ்கின்றனர். எந்தக் காலகட்டத்தைச் சார்ந்து நமக்குத் தொன்மையான தமிழ் இலக்கியங்கள் கிடைத்துள்ளனவோ, அந்தக் காலகட்டத்திலேயே தமிழர் பண்பாட்டில், ஒருங்கிணைந்த இன்றியமையாத அங்கமாக வேதம் விளங்குகிறது.

இவையெல்லாம், பிராமணக் காழ்ப்பால் வேதத்தைத் தவிர்த்த தனித்தமிழ்ச் சமயம் ஒன்று தமிழர்களுக்கு இருப்பதாகக் காட்ட எண்ணிய தமிழ் ஆர்வலர்களுக்குப் பிரச்சனையாக இருந்தது. எனவே, அவர்கள் இப்பிரச்சனைக்கு ஒரு முடிவு கண்டனர். இங்கு வேதங்கள் எனச் சொல்லப்படுபவை ரிக், யஜூர், சாம, அதர்வ வேதங்கள் அல்ல. அவை, தமிழருக்கென உருவான தனிப்பெரும் நால் வேதங்கள், கடல்கோளால் அல்லது ஆரிய சூழ்ச்சியால் அவை அழிந்தபிறகு, ஆரியர் தமது நால் வேதங்களை சூழ்ச்சியால் புகுத்திவிட்டனர். சைவப் பெருமான்களும், தொல் தமிழ் இலக்கியங்களும் நான்கு வேதங்கள் எனச் சொல்வது அவற்றையே அன்றி வடமொழி வேதங்களை அல்ல.

தமிழர்களின் வேதங்கள் வேறு; ஆரியர்களின் வேதங்கள் வேறு. தமிழர்களின் தொன்மையான நான்கு வேதங்களை கடல்கோள் அழித்து விட்டது. இதையே, ஆரியர்கள் கண்டு தங்களிடமும் நான்கு வேதங்கள் இருப்பதாக உருவாக்கிக் கொண்டனர். இதுதான், தமிழ்ப் புத்தெழுச்சியாளர்கள் கூறியது. இதற்கு என்ன ஆதாரம்? அன்று, இன்றளவுக்கு புவியியல் துறை வளரவில்லை. கடல் கொண்ட ஒரு பெரிய நிலப்பரப்பு குறித்த அய்தீகம், தியஸோபிக்கல் சொஸைட்டி என்கிற பிரம்மஞான சபையினரால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நம்பிக்கை, தமிழ் இனவாதக் கோட்பாடுகளுடன் கலந்து, தமிழர் வாழ்ந்த லெமூரியாவாக, குமரிக் கண்டமாக உருவெடுத்தது. கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் வழ்ந்த நம் தொல்_தமிழ் மூதாதையர் உருவாக்கியதுதான் நான்மறைகள். அவற்றை நகலெடுத்து, பார்ப்பனர்கள் / ஆரியர்கள் உருவாக்கியவைதான் இன்றைய வேதங்கள்.

முக்கியமான தமிழ் அறிஞராகக் கருதப்படும் கா. சுப்பிரமணிய பிள்ளை என்கிற கா.சு. பிள்ளை, ‘திருநான்மறை விளக்கம்’ எனும் கட்டுரையை, 1920களில் வெளியிட்டார். அந்தக் கட்டுரையில், மேற்கூறிய கருத்துகளைப் பண்டைய தமிழ் இலக்கியங்கள் மற்றும் சைவத் திருமுறைகளையும், திருக்குறளையும் ஆதாரமாகக் காட்டி நிறுவ முற்பட்டார்.

அன்றைய உண்மையான வெறுப்புணர்ச்சி இல்லாத தமிழ் அறிஞர்கள், இந்த ‘தனித்தமிழ் மறை’ எனும் போலி ஆராய்ச்சிக்குத் தங்கள் மறுப்பை, பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சைவ வைணவ இலக்கியங்கள் அடிப்படையாகவே அளித்து வந்தனர். அவர்களுக்கு அன்று ஆரியப் படையெடுப்பு – திராவிட இனவாதக் கோட்பாடுகளை எதிர்க்க புற ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், இன்று நாம் அகழ்வாராய்ச்சி மற்றும் மரபணு சார்ந்து இந்த ஆரியப் படையெடுப்பு மற்றும் இனக்கோட்பாடுகளை நிராகரிக்க இயலும்.

தொல்காப்பியம், ‘நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான்’ முன்னர் அரங்கேறியது என்பது தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர், ‘இவை தைத்திரியமும், பவுடிகமும், தலவகாரமும் சாம வேதமும்’ எனக் கூறுகின்றார். இவை ரிக், யஜுர், சாம, அதர்வம் என்பது பொருந்தாது என்கிறார். எனவே, நச்சினார்க்கினியர் கூறும் இவை நான்கும் எவை என்பதை நாம் காணலாம்.

ஆக, பவுடியம், தைத்திரீயம், தலவகாரம் என்பவை, தெளிவாகத் தரும சூத்திரங்களைக் குறிப்பவை ஆகும். அவை ரிக், யஜுர், சாம, அதர்வ சேவதங்களைக் குறிப்பவை அல்ல. மாறாக, அவற்றை அடியொற்றியதாகக் கூறி எழுந்த வாழ்வியல் சட்ட நூல்களான தரும சாத்திரங்களைக் குறிப்பவை ஆகும். இந்த நூல்கள், மனுவுக்கு முந்தையவையும் ஆகும். தொல்காப்பியம், வாழ்வியலை வரையறுக்கும் இலக்கண நூல் என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இது தெளிவாக விளங்கும்.

தென் திருப்பேரை (தூத்துக்குடி மாவட்டம்) கிராமத்தின் அந்தணர்கள் அனைவரும், சாம சாகையைச் சேர்ந்தவரே. திராவிடத்தின் தனித்தன்மையாகிய ‘ழ’காரம், இந்தச் சாமசாகை ஓதுதலில் (பாடுதலில்) காணப்படுகிறது.
ஆக, தனித்தமிழ் வேதம் என்கிற போலிப் பெருமைக்கு அப்பால், வேதம் வளர்த்த தமிழகம் என்கிற உண்மைப் பெருமையே நமக்கு இன்னும் சிறப்பளிக்கிறது. என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.

(தொடரும்)


பசு வதையும் வேதப் பண்பாடும் – நேயன் - எதிர்வினை (117)


எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (117) 

வேத காலத்தில், பசு வதை’’ இருந்ததா?

வேதப் பண்பாட்டில், பசு புனித மிருகமாகக் கருதப்பட்டதா?
பசு இறைச்சி உட்கொள்ளப்பட்டதா?

இவ்விஷயங்கள், இன்று பெரும் சர்ச்சை-யாகவே மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, இடதுசாரி வரலாற்றாசிரியர்கள், வேத காலத்தில் பசு உண்ணப்பட்டது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது குறித்து அவர்கள் அளிக்கும் ஆதாரங்கள், இரண்டு வகையானவை. ஒன்று, ‘கோகன’ எனும் பதத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனை 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தாராநாத் என்பவர், ‘பசுவைக் கொல்பவர்’ என மொழிபெயர்த்தார். அதாவது, வீட்டுக்கு வரும் மதிப்புக்குரிய விருந்தினர்களுக்குப் பசு மாமிசம் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார். இதுவும், மாட்டு மாமிசம் குறித்துப் பேசும் வேதச் செய்யுள்களும், இடதுசாரிகளின் வாதங்களுக்கு ஆதாரமாக முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், பாரம்பரியமான மொழிபெயர்ப்பில், இதனை ‘பசுவைத் தானமாகப் பெறும் தகுதி உடையவர்’ என்றே பாணினி மொழி பெயர்க்கிறார். அவ்வாறு தகுதி உடையவருக்கு, கோதானம் செய்யும் வழக்கம், பாரதப் பண்பாடு முழுமைக்கும் பரவியிருந்தது என்பதை நாம் பல ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. முக்கியமாக சென்ற நூற்றாண்டில், தமிழகத்தின் முக்கியச் சமுதாயத் தலைவர்களில் ஒருவர், ‘தாத்தா’ எனஅன்புடன் அழைக்கப்பட்ட ரெட்டைமலை ஸ்ரீனிவாசன் ஆவார். பாபாசாஹிப் அம்பேத்கருடன், லண்டன் வட்டமேசை மாநாட்டில், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமை உடையவர்.
அவர் கூறுகிறார்-
“நெட்டாலில் வருளமென்னும் நகரில், முருகன் என்பவர் ஒரு பெரிய பயிர்க் குடியானவராகவும் தனவந்தராகவும் இருந்தார். பிராமணர் யோக்கியம் என்னிடந்தான் அவர் கண்டதாக, என்னை வற்புறுத்தி கோதானம் பெறச் செய்து என் ஆசீர்வாதம் கோரினார்.’’
ஆக இப்பழக்கம், பெருமையும் ஒழுக்கமும் கொண்ட பெரியவர்கள் தங்கள் இல்லங்களுக்கு வருகை தரும்போது, பசுவைத் தானமாக அளிப்பதே அல்லாமல், பசுவைக் கொன்று கறி சமைப்பது அல்ல. இடதுசாரிகள் கொடுக்கும் மற்ற ஆதாரங்களிலும், எருமை அல்லது காளையே கொல்லப்பட்டுள்ளது இருக்கிறதே தவிர, பசு இல்லை. எனவே, மாட்டிறைச்சி சமைத்து உண்ணப்பட்டிருந்தாலும்கூட, பசு கொல்லப்பட்டதற்கு ஆதாரங்கள் எனக் கொடுக்கப்படுபவை, நம்பகத்தன்மை அற்றதாகவே உள்ளன.

மாறாக, வெளிப்படையாகவே பசு கொல்லப்படத்தகாதது என்றே வேதம் கூறுகிறது. கிருஷ்ண யஜுர் வேதத்தில், தைத்திரீய சம்ஹிதை முதல் காண்டம், முதல் பிரச்னம், முதல் அனுவாகத்தில் ஓதப்படும் மந்திரங்களின் கருத்து, பசுக்களின் பண்பாட்டு விவசாய முக்கியத்துவத்தை விளங்குகிறது.

“கொல்லத் தகாதவையான பசுக்களே, நீங்கள் நன்றாகப் புற்களை மேய்ந்து, மடி நிறையப் பால் பெருக்கிக்கொண்டு, தேவபாகத்தை (இந்திரனுக்கு அளிக்கப்பட வேண்டியதாகிய தயிர்) வளர்க்க வேண்டும். அதிகமான ரசமுள்ளதாகவும், பால் நிறைந்தனவாகவும், கன்றுகள் நிறைந்ததாகவும், கிருமிகள் நோய்கள் இல்லாமலும் நீங்கள் இருக்கவேண்டும்.’’

ரிக் வேதத்துக்கு நிருக்தம் எழுதிய யாஸ்கர், பசுவின் ஒன்பது வேதப் பெயர்களை வரிசைப்-படுத்துகிறார். அவற்றுள் முலாவது பெயர், அஹ்ன்யா என்பதாகும். அதாவது, கொல்லத்தகாதது. இரண்டாவது உஸ்ரா _- பால், தயிர் ஆகிய பொருள்களின் விளைவிடம். உஸ்ரியா-_ இன்பத்தை அளிப்பது. மேலும், யாஸ்கர், மஹீ, அதிதி, இளா என அனைத்து வேத பெண் தெய்வங்களின் பெயரையும் பசுவின் பெயராகவே குறிப்பிடுகிறார். வேதப் பண்பாட்டின் தொடக்க மதிப்பீடுகளில் ஒன்றாகவே பசுவதைத் தடையைக் கூறலாம். பசுவை ஏன் கொல்லக்கூடாது என்பதற்கான காரணத்தை, ஒரு வேத மந்திரம் அளிக்கிறது.

“இந்தப் பசு, ருத்திரர்களுக்கு எல்லாம் தாய். வஸுக்களின் பெண். ஆதித்தியர்களின் தங்கை. அமுதத்தின் இருப்பிடம். அறிவுடையவனுக்குச் சொல்கிறேன், குற்றமற்றதும் பெருந்தன்மை கொண்டதுமான பசுவைக் கொல்லாதீர்கள்.’’
(ரிக், 8.101.15)

தைத்ரீய சம்ஹிதையில், பசுக்களைப் பாதுகாக்கும் பணி தனக்கே இருக்க வேண்டுமென ருத்ரன் கருதுவதாகக் கூறப்படுகிறது. ருத்ரனின் பெயர், ‘அஹ்ன்யானாம்பதி’ என்பதாகும். பசு, வேளாண்மைக்கு மையமாக மட்டுமல்ல, ஒரு பிரபஞ்சத் தாயாகவும் கருதப்பட்டது என்பதை இது காட்டுகிறது. அனைத்து தெய்வங்களின் உறைவிடமாகக் காட்டப்படும் பசுவின் சித்திரம்-_ இன்று நாம் காலண்டரில் காணும் கோமாதா(காமதேனு) வேத இலக்கியத்தில் வேர் கொண்ட ஒன்றுதான்.

அனைத்து உயிர்களின் இறைத் தன்மையை மதிக்கும் ஒரு குறியீடாகவும், வேதப் பண்பாட்டில் இருந்து பசு வழிபாடு பரிணமித்து நமக்கு வந்துள்ளது. மார்வின் ஹாரிஸ் போன்ற மார்க்சிய மானுடவியலாளர்கள்கூட, ஹிந்துக்களின் பசு வணக்கம், எத்தகைய முக்கிய சூழலியல்_ பொருளாதாரப் பொருள் கொண்ட ஒன்றாக அமைந்-துள்ளது எனக் கூறியுள்ளனர்.’’ என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.
இவர் கூறியவை சரியா என்று இனி பார்ப்போம்.

முதலில் ஆரியர்கள் பசு இறைச்சி உண்டது பற்றி அம்பேத்கர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
“ரிக் வேத ஆரியர்கள் உணவுக்காக பசுக்களைக் கொன்று மாட்டின் இறைச்சியை ஏராளமாக உண்டனர் என்பது ரிக் வேதத்திலிருந்தே மிகத் தெளிவாகத் தெரிகிறது. ரிக் வேதத்தில் ((X. 86.14) இந்திரன் சொல்கிறான்: அவர்கள் ஒருவருக்காக 15க்கு மேல் 20 காளைகளை சமைக்கிறார்கள். ரிக் வேதம் ((X. 91.14), “அக்கினிக்காக குதிரைகள், காளைகள், எருதுகள், மலட்டுப் பசுக்கள் மற்றும் ஆட்டுக்கடாக்கள் பலியிடப்பட்டன. ரிக் வேதம் ((X. 72.6)லிருந்து, பசுக்கள் வாள் அல்லது கோடரியைக் கொண்டு கொல்லப்பட்டன என்பது அறியப்படுகின்றது.

‘ஆபஸ்தம்ப தர்மசூத்திரம்’ நூலிலுள்ள கூற்றுக்கு எதிராக கீழ்க்கண்ட கருத்துகள் கவனிக்கப்பட வேண்டும்.
முதலாவதாக, அதே சூத்திரத்தில் 1.5, 14, 29இல் அடங்கியுள்ள முரணான ஒரு கூற்று சொல்கிறது:

“பசுவும் காளையும் புனிதமானவை; ஆகவே அவை உட்கொள்ளப்பட வேண்டும்.”
மதுபர்க்கம் இறைச்சி இல்லாமல் இருக்கக் கூடாது; பசு விடப்பட்டு விட்டால் வெள்ளாட்டு இறைச்சி அல்லது பாலில் சமைத்த சோறு (பாயசம்) படைக்கப்படலாம் என வேதம் அறிவிக்கின்றது என்று மத்வ (சாஸ்திரம்) 1.9.22 கூறுகிறது. இறைச்சி இல்லாமல் மதுபர்க்கம் இருக்கக் கூடாது; எனவே, பசு விடப்பட்டு விட்டால் வெள்ளாடு அல்லது ஆட்டுக்கடா அல்லது ஏதாவது (மான் முதலிய) காட்டு விலங்கின் இறைச்சி படைக்கப்படலாம் என்று பிவீக்ஷீ.ரீக்ஷீ. (1.2,51-_54) கூறுகிறது. ஒருவனால் இறைச்சியைப் படைக்க இயலாத நிலையில், அரைக்கப்பட்ட தானியங்களைச் சமைக்கலாம்.

ஆக, மதுபர்க்கத்தின் முக்கிய பாகமாக இறைச்சி, அதுவும் குறிப்பாக பசுவின் இறைச்சி உள்ளது.

விருந்தினர்களுக்காக பசுவைக் கொல்லுவது மிகவும் அதிகரித்து விட்டதால், விருந்தினர்கள் ‘கோக்னா’, அதாவது ’பசுவைக் கொல்பவர்’ என அழைக்கப்படும் வழக்கம் ஏற்பட்டது.

இந்துக்கள் பசுக்களைக் கொன்று அதன் இறைச்சியை உண்டனர் என்பதை, வேதங்கள் மற்றும் பிராமணர்களுக்கு மிகவும் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்த புத்த மத சூத்திரங்களில் பல இடங்களில் காணப்படும் யாகங்களைக் குறித்த வர்ணனைகள் மிகவும் நன்றாக மெய்ப்படுத்துகின்றன.

பசுக்களும் பிற விலங்குகளும் பிரம்மாண்ட-மான அளவில் ஏராளமாக கொல்லப்பட்டன. ஒவ்வொரு சமயத்திலும் மதத்தின் பெயரால் பிராமணர்கள் எத்தனை பசுக்களைக் கொன்றனர் என்பதைக் கூறுவது இயலாத ஒன்று. இந்த நிகழ்வுகளைக் குறிப்பிடும் புத்த மத நூல்களில் கிடைக்கின்ற மேற்கோள்களைக் கொண்டு ஓரளவுக்கு இந்தப் படுகொலைகளைக் குறித்து அறிந்துகொள்ள முடியும். கூடதண்ட சுத்தாவில் உள்ள, விலங்குகளைப் பலியிடுவது கூடாது என்று கூடதண்ட பிராமணனுக்கு, புத்தர் போதித்த அறிவுரையை ஒரு நல்ல மேற்கோளாகச் சுட்டிக்காட்ட முடியும்.’’

(தொடரும்)
ஆதாரம்: The Untouchables- Dr.B.R. Ambedkar)


வேதங்களும் பெண்களும் -எதிர்வினை (115)


எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (115)

2023 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை பிப்ரவரி 1-15, 2023

– நேயன்

1921 இல், 612 பெண் குழந்தைகள் விதவைகள். அவர்களின் வயது ஒன்றுக்கும் கீழே. இந்தக் குழந்தைகள் அனைவருமே இந்துக்கள், 498 விதவைக் குழந்தைகளின் வயது ஒன்றிலிருந்து இரண்டு வரை. இரண்டிலிருந்து மூன்று வயதுக்குள்ளான விதவைக் குழந்தைகளின் எண்ணிக்கை -_ 1280. மூன்றிலிருந்து நான்கு 2863. நான்கிலிருந்து அய்ந்து 6758. அய்ந்திலிருந்து பத்து 12,016. இவை, மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள். உண்மைத் தொகை, இதற்குப் பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்பதை மிக எளிதாக ஊகிக்கலாம்.
இப்படிக் குழந்தை விதவைகளை உருவாக்குதல், சொத்து அபகரிப்பு முதல் பெண்களைக் ‘கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது’ என்பது வரை பல நோக்கங்கள், சமுதாயத்தின் தேக்கநிலைச் சக்திகளுக்கு இருந்தன. இதற்கு, மத  ஆசார முலாமும் பூசப்பட்டது. இது எங்கள் மதம். மாட்சிமை தங்கிய பேரரசி, எங்கள் மத நம்பிக்கைகளில் அரசாங்கம் தலையிட முடியாது என 1857இல் சொல்லியிருக்கிறார்கள்.
குழந்தைத் திருமணங்களுடன் ஒப்பிடுகையில், மற்றொரு சமூகஅநீதியான ‘சதி’ அல்லதுஉடன்கட்டை ஏற்றப்படுவது மிக அரிதாக நிகழ்ந்த நிகழ்ச்சி. ஆனால், அதை உலகஅளவில் பெரிதாக்கி, பின்னர் அதைத் தடைசெய்ததில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஒரு குறிக்
கோள் இருந்தது. நாங்கள் இந்த இருண்ட தேசத்துக்குப் பண்பாட்டைக் கொண்டு வருகிறோம்.

ஆனால், குழந்தைகள் திருமணம் என்கிற அதைப்போன்று ஒரு முக்கியமான சமூகக் கொடுமையை அழிக்க, பிரிட்டிஷார் முன்வரவில்லை. காரணம் இருந்தது. உடல்நிலையும் மனநிலையும் சரியில்லாத அடிமைப் புத்தி கொண்ட ஒரு மக்கள் கூட்டம், ‘எங்களை இப்படியே வைத்திருப்பதுதான் எங்கள் மதம்’ எனத் தாங்களாகவே விண்ணப்பிக்கும்போது, அதை மாற்ற முயற்சி செய்யும் அளவுக்கு பிரிட்டிஷார் முட்டாள்கள் இல்லை. இன்னொரு விதத்திலும் இது பிரிட்டிஷுக்கு உதவியது. ‘நாங்கள் ஆட்சி நடத்தும்போதே இந்த விஷயங்களில் தலையிட எங்களுக்கு முடியவில்லை. இனி நாங்களும் வெளியே போய்விட்டால், இந்தக் காட்டுமிராண்டிகள் என்ன நிலைக்கு இந்த நாட்டைக் கொண்டுவந்துவிடுவார்களோ? எனவே, நாங்கள் இருப்பது அவசியம்.’ இந்தப் பிரச்சாரத்தையும் அவர்கள் செய்து வந்தார்கள்.
“குழந்தைத் திருமணம் நடக்காவிட்டால் மாதம் மும்மாரி பெய்யாது. ஏனென்றால், மழை பெய்வது கற்புக்கரசிகளுக்காகவே. ஒரு பெண் வயதுக்கு வரும் முன்னரே, அவளுக்கு ‘இதுதான் உன் கணவன்’ எனக் காட்டிவிட வேண்டும்.

இல்லாவிட்டால், அவள் மனம் மாசுபட்டுவிடும். அப்படி அலைபாயும் பெண், கற்புநிலை தவறிவிடுகிறாள். பெண்
கற்புநிலை தவறிவிட்டால், மழை பெய்யாது’. இப்படியெல்லாம் ‘ஆன்மிக விளக்கங்கள்’ அளிக்கப்பட்டன.
இத்தகைய இக்கட்டான சூழலில், ஆரிய சமாஜ தலைவர்கள் மூலமாக, வேத தர்மத்தின் குரல் ஒலித்தது. குழந்தைத் திருமணத்துக்கு வேத ஒப்புதல் கிடையாது என மூலை முடுக்கெல்லாம் ஆரிய சமாஜிகள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். பிரிட்டிஷார் உருவாக்கிய ஆசாரப் பூனைகள் அதிர்ந்தார்கள். வேதங்களில் இருந்து ஆரிய சமாஜிகள் மேற்கோள்களைக் காட்டினர். “பெண் விடுதலைக்கு அடிப்படை அஸ்திவாரத்தை நவீன இந்தியாவில் அழுத்தமாக அமைத்தது வேதப் புத்தெழுச்சியே!

குழந்தைத் திருமணத்திற்கு வேத ஒப்புதல் கிடையாது. வேத ஆதாரங்களைக் காட்டி ஆரிய சமாஜிகள் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தனர்.
இதோ வேத தொன்மம்: ‘சூரிய தேவனே தன் மகளை அவள் விருப்பப்படி தேர்ந்தெடுத்த கணவனுக்கு அளிக்கிறான்.’ (ரிக், 1.157.1.) பெண்கள், தங்கள் கணவனை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமையும் அறிவும் பெற வேண்டும். வயதுக்கு வந்த பிறகே அவர்கள் திருமணம் செய்ய வேண்டும். ஆசாரவாதிகள் வெகுண்டெழுந்தார்கள். ஆனால், அறிஞர்களும் மக்களும் சிந்திக்க ஆரம்பித்தார்கள்’’ என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.இவர் ஆதாரமாகக் காட்டும் மேற்கண்ட ரிக்வேதப் பாடலை ரிக் வேதத்தில் பார்த்தால் இச்செய்தியே இல்லை. ரிக் வேதத்தில் உள்ள அப்பாடலையும் அதற்குரிய விளக்கத்தையும் கீழே தருகிறோம்

“அக்கினி புவியின் மீது எழுப்பப்படுகிறான். சூரியன் எழுகிறான். மகத்தான உஷை தன் காந்தியால் அனைவரையும் மகிழ்வித்து இருளை நீக்கினாள். தேவசவிதா எல்லா சீவர்களையும் அவரவர் செயல்களிலே செலுத்த, அசுவினிகளே! நீங்கள் வேள்விக்கு வர உங்கள் தேரை இணையுங்கள்.
“Agni is wakened: Surya riseth from the earth. Mighty, refulgent Dawn hath shone with all her light.
The Asvins have equipped their chariot for the course. God Savitar hath moved the folk in sundry ways.”
என்பதே அப்பாடல் சொல்லும் செய்தி. அப்படியிருக்க, சூரிய தேவனே தன் மகள் அவள் விருப்பப்படி தேர்ந்தெடுத்த கணவனை மணம் செய்ய சம்மதிக்கிறான் என்று இப்பாடல் கூறுவதாக இவர் கூறுவது மிகப்பெரிய மோசடி. இப்பாடலில் இல்லாத செய்தி.
இவர் மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். ஆள்கள் எல்லோருமே இப்படிப்பட்ட மோசடி வேலையைத் தொடர்ந்து செய்கிறார்கள்.
காலஞ்சென்ற நாகசாமி திருக்குறளை இழிவுபடுத்த இதுபோன்ற வேலைகளை நிறைய செய்துள்ளார்.

தங்கள் கருத்தை நிலைநாட்ட இல்லாத பாடல்கள் எல்லாம் இருப்பதாகக் காட்டும் மோசடி வேலை இவர்களுக்கு வாடிக்கையானது.
இந்த நீலகண்டன் இவரது நூலில் 251ஆம் பக்கத்தில் ரிக்வேதம் 10.8.125 என்று ஒரு பாடலைக் காட்டுகிறார்.
ரிக் வேதத்தில் அப்பாடலைத் தேடினால் பாடலே இல்லை. அதுமட்டுமல்ல, ரிக்வேதத்தில் 10ஆவது மண்டலத்தில் எட்டாம் அத்தியாயத்தில் 125 பாடலே இல்லை. எட்டாம் அத்தியாயத்தில் மொத்தம் 9 பாடல்களே உள்ளன. இது எவ்வளவு பெரிய மோசடி பாருங்கள்!
ஆக, இவர்கள் கருத்தை நிலைநாட்ட வேதம் சொல்கிறது, சாஸ்திரம் சொல்கிறது என்று பொய்யான ஆதாரங்களைக் காட்டி, மக்களை ஏமாற்றுவது இவர்களின் வாடிக்கை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

(தொடரும்)


புதன், 12 ஜூன், 2024

வேதத்தில் தமிழ்க் கடவுளா?- எதிர்வினை (113), எதிர்வினை (114)


எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (113)

 உண்மை இதழ்

வேதத்தில் தமிழ்க் கடவுளா?
நேயன்

அரவிந்தன் நீலகண்டன், வேதத்தில் தமிழ்க் கடவுள் பற்றிய குறிப்பு இருப்பதாக கீழ்க்கண்டவற்றைக் கூறியுள்ளார்.
தமிழ்க் கடவுள் என்றாலே அது முருகன் தான். முருகன் குறித்த மிகப் பழமையான தொன்மங்களிலேயே, அவன் சிவந்த மேனியுடையவனாகக் காட்டப்படுகிறான். கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், மொழியியல் அறிஞருமான ராமச்சந்திரன், ‘கழகக் கந்தனும் பரிஷத் முருகனும்’ எனும் தனது முக்கியமான கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார் – சேயோன், சிவன் இரண்டுமே சிவந்த நிறத் தெய்வம் என்ற பொருளுடைய சொற்களாகும். நிறத்தில் மட்டுமின்றி, சீற்றம் என்ற தன்மையில் இவ்விரு தெய்வங்களும் ஒத்த தன்மையுடையவர்களாவர்.
(‘முருகற் சீற்றத்து உருகெழு குரிசில்’ பொருநராற்றுப்படை, 131; ‘கூற்றொத்தீயே மாற்றருஞ் சீற்றம் (புறநானூறு, 56:11). இந்திரன் என்ற தேவர்கள் அரசனின் படைகளான மருதகணங்களின் தலைவனாக ருத்ரன், வேதங்களில் குறிப்பிடப்படுவது போன்றே வடமொழிப் புராணங்களில் தேவசேனாபதியாக முருகன் (ஸ்கந்தன்) குறிப்பிடப்படுகிறான். இந்த ஏற்புத்தன்மை இருந்ததால், சங்ககாலத் தமிழகத்தில் வைதிக ருத்ர வழிபாட்டினர் (கடியலூர் உருத்திரங்கண்ணனார், நல்லுத்திரனார் போன்றோர்) முருகனைச் சிவனது ஓர் அம்சமாகவே ஏற்றிருக்க வாய்ப்புண்டு.

உண்மையில், இந்த ‘ஏற்புத்தன்மை’ ஓர் அடிப்படை ஒற்றுமையில் இருந்து உருவாகும் ஒன்று என்றே கூற வேண்டும். முருகனின் மிக முக்கியமான அடிப்படையான குமாரக் கடவுள் எனும் கருத்தாக்கத்தை, முதன்முதலாக நாம் ரிக் வேதத்திலேயே காண்கிறோம். ரிக் வேதப் பாடலில், பிரம்மணோஸ்பதி துதிக்கப்படும்போது, ‘சாகஸபுத்திரன்’ (1.40.2) என அழைக்கப்படுகிறார்.
முருகன் குறித்த மற்றொரு ஆதாரமான புராணக் கருத்தாக்கம் என்பது அவன் தேவசேனாதிபதி என்பதே ஆகும். தேவர்களின் சேனையின் தலைவனாக இந்திரன் இருந்தாலும், அந்தப் படையின் முன்னணியில் இருந்தது பிரகஸ்பதி எனக் கூறப்படுகிறது. பிரகஸ்பதி, அக்னியின் ஓர் அம்சம் எனக் கருதுகிறார், தொன்மவியலாளரான நாராயண அய்யங்கார். அக்னியை நல்வழி நடத்திச் செல்லும், போருக்குத் தலைமை தாங்கும் தளபதியாக உருவகிக்கும் ரிக் வேதப் பாடல்களை அவர் சுட்டுகிறார்.
(உதாரணமாக, 1.189.1). சேனாதிபதியாகவே காட்டப்படும் மற்றொரு வேதக் கடவுள், ருத்திரனே ஆகும். யஜுர் வேத சம்ஹிதையில், சேனான்யன் என்றே அவன் அழைக்கப்படுகிறான்.

ருத்ரனும் அக்னியும் இணைந்த ஓர் உருவாக்கமாகவே ஸ்கந்தன் அல்லது முருகன் உருவாகிறான். இந்நிலையில், ஒரு கேள்வி எழக்கூடும். ஸ்கந்தன் என்கிற வேதக் கோட்பாட்டினை முருகன் என்கிற தமிழர் கோட்பாட்டுடன் இணைத்துவிட்டார்களா? இதற்கான தரவுகள் எதுவும் இல்லை என்பதுடன், ஆரிய-திராவிட இருமைப் பார்வையினை ஏற்றுக்கொண்ட பின்னர் ஏற்படுத்தப்படும் ஊகங்களாகவே இதை நாம் பார்க்கவேண்டி உள்ளது.
இதற்கான ஆதாரமாக, முருகனின் ஆகப்பழமையான வழிபாட்டு முறையான கந்தழி வழிபாட்டினைக் கூறலாம். இது, சிவலிங்க வழிபாட்டுடன் தொடர்புடையது. சிவலிங்க வழிபாடோ, ஹரப்பா மொஹஞ்சதாரோ காலம் தொட்டே நமக்குக் கிடைக்கக்கூடிய ஒன்றாகும். ராமச்சந்திரன் கூறுகிறார்-
ஹரப்பா இலச்சினைகளில் பல தொன்ம நிகழ்வுகள் காட்டப்படுகின்றன. அவற்றை அறிந்து கொள்வதற்கு, ஆரிய- திராவிட இனவாதக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்கிறவர்கள் கூட, வேதத் தொன்மங்களையே இந்த இலச்சினைகளின் பொருளை அறிந்துகொள்ளப் பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக, ஃபின்லாந்தைச் சார்ந்த அஸ்கா பர்போலாவையும், நமது அய்ராவதம் மகாதேவனையும் கூற வேண்டும். இருவருமே, ஆரிய-திராவிட இரட்டையை ஒப்புக்கொண்டவர்கள். ஆனால், ஹரப்பா இலச்சினைகளை அறிந்திட, வேத இலக்கியங்களில் உள்ள தொன்மங்களையே அடிப்படையாகக்கொண்டு இந்த இலச்சினைகள் கூறும் சில முக்கியச் செய்திகளைக் கண்டடைந்தவர்கள்.

நாம் இப்போது காண இருக்கும் இலச்சினை, ஒரு முக்கியமான காட்சியைக் கொண்டது. எழுவர் கைகோத்து நிற்கின்றனர். மேலே ஒரு மரம் நெருப்பைப்போல் பிளந்து நிற்க, அதில் இருந்து கை வளையல்களும், இரு கொம்புகள் கொண்ட தலையணியும் அணிந்த ஒரு தெய்வம் வெளிப்படுகிறது. அதன் முன்னால், ஒரு பூசகர். பெண்ணாக இருக்க வாய்ப்புள்ளது. அருகில் ஓர் ஆடு. எதை அல்லது யாரைக் குறிக்கிறது இந்த இலச்சினை?
யார் இந்த எழுவர்? வளையல்கள் அணிந்த இந்த எழுவரும் மகளிர் எனக் கருத, பலமாக இடமளிக்கிறது இந்த இலச்சினை. இந்த ஏழு மகளிர் யார்? ஏழு மகளிரின் மிகப் பழமையான தொன்மம், அவர்களை சப்தரிஷிகள் எனும் ஏழு விண்மீன்களுடன் இணைப்பதாகும். பாரதத் தொன்மங்களில், சப்தரிஷிகளுடன் தொடர்புடைய ஏழு பெண்கள், கார்த்திகை மாதர் அறுவரும் அருந்ததியும் ஆவர்.

சதபத பிரமாணத்தில் (2,1,2,4), சப்தரிஷிகளின் மனைவியரான கார்த்திகை மாதர் எழுவரென்றும், அதில் அருந்ததி தவிர பிறர் கற்பொழுக்கம் தவறியதால், தம் கணவரிடமிருந்து பிரிந்தனர் என்றும், அவர்களே கார்த்திகை மாதர் அறுவராகினர் என்றும் கூறப்படுகிறது. இவர்களை, ஸ்கந்தனுடன் இணைக்கும் மிகப் பழமையான முழுமையான தொன்மம், மகாபாரதத்தில் (3.213.1-3.219.11) கூறப்பட்டுள்ளது. இங்கு, அக்னியின் மகனான ஸ்கந்தனுக்கு, வளர்ப்பு அன்னையராகக் கார்த்திகை மாதர் இருந்தனர் என்றும், எனவே அவர்கள் விண்மீன்களாக வானில் என்றென்றுமாக இருந்தனர் என்பதும் கூறப்படுகிறது”.
மேலே காட்டியுள்ளவை சரியா? வேதத்தில் தமிழ்க் கடவுள் குறிக்கப்பட்டுள்ளதா? உண்மையென்ன? தமிழர் வழிபாட்டிற்கும், ஆரிய வழிபாட்டிற்கும் தொடர்பு உண்டா? என்பவற்றை இனி ஆய்வோம்.
(தொடரும்)


எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (114)

2023 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ஜனவரி 1-15, 2023

தமிழர் வழிபாட்டை ஆரிய மயமாக்கிய சதி!
நேயன்

வேத காலத்தில் ஆரியர்களிடையே கடவுள் வழிபாடு இல்லை. அவர்கள் இயற்கை சக்திகளையே கடவுளராக உருவகப்படுத்தி வழிபட்டனர். அக்னி, வாயு, வருணன், மேகம்(இந்திரன்), ருத்திரன் போன்றவற்றை வழிபட்டனர்.
வேதத்தில் வரும் ருத்திரன் சிவன் என்று இட்டுக்கட்டிக் கூறுவது தப்பு. சிவன் வழிபாடு ஆண், பெண் உறுப்பு வழிபாட்டின் பரிணாமம். ருத்திரன் என்பது உருவ வழிபாடு இல்லாத காலத்தில் ஆரியர்கள் வணங்கியது.
தமிழரின் உறுப்பு வழிபாடு ஆரியர் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பே இருந்த வழிபாடு. தமிழர்கள் உலகின் எப்பகுதிகளில் எல்லாம் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் இந்த ஆண், பெண் உறுப்பு வழிபாடு பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஆரியர்கள் உருவ வழிபாட்டிற்கு மிகவும் பின்னாளில்தான் வருகிறார்கள். அதுவும் தமிழர் வணங்கிய நன்றியின் பாற்பட்ட வழிபாடுகளை கடவுளாக இவர்கள் மாற்றிய பின் நிகழ்ந்தது.

முருகன் வழிபாடு தமிழர்களின் நிலத் தலைவர் வழிபாட்டின் கூறு ஆகும். ‘முருகு’ என்றால் அழகு, ‘அன்’ என்பது ஆண்பால் விகுதி. இது தூய தமிழ்ச்சொல். ஆனால் இவ்வழிபாட்டைத் திரித்து புராணக் கதைகள் புனைந்து ‘ஸ்கந்தன்’ என்று மாற்றினர்.
சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட ஆறு நெருப்புப் பொறிகள் ஆறு குழந்தைகளாக சரவண பொய்கையில் மாறின. அவற்றை கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்தனர். சிவனின் அம்சமான அக்குழந்தைகளை பார்வதி ஆசையோடு சேர்த்து அணைத்தபோது ஆறும் ஒட்டிக் கொண்டன. அதுவே ஷண்முகம் என்று கதை உருவாக்கினர். ‘ஷண்’முகம் என்றால் ஆறுமுகம் என்று பொருள். தலைகள் மட்டும் ஆறு; உடல் ஒன்று. ஒட்டிக்கொண்டாலும் ஆறு உடல்கள் இருக்க வேண்டுமல்லவா? இல்லை. உடல் ஒன்றாக ஒட்டிக்கொண்டது என்றால், தலையும் ஒன்றாகியிருக்க வேண்டும் அல்லவா? ஆரியர்களின் மோசடிகள் அனைத்தும் இப்படித்தான்.
நிலத்தலைவர் வழிபாடு என்பது தமிழர்-களின் தொன்மை வழிபாடு. குறிஞ்சி நிலத்தலைவன் முருகன். அவன் மனைவி குறவள்ளி. தெய்வயானை என்பது ஆரியர்கள் உருவாக்கிய புராணம் மூலம் வந்த புனைவு.

குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த பகுதியுமாகும். அதனால்தான் முருகன் மலைக்கடவுள் எனப்பட்டார். திருப்பதியில் இருந்தது கூட முருகன் சிலைதான். அதன் முகம் பெரிய நாமத்தால் மறைக்கப்பட்டு பெருமாளாக்கப்பட்டுவிட்டது என்று ஆய்வாளர்கள் கூறுவர்.
தமிழர்களின் நிலத் தலைவரான முருகனை வேதத்தில் வரும் தேவசேனாதிபதி யென்று தொடர்பு படுத்துவது பித்தலாட்ட முயற்சி. புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு முருக வழிபாட்டை ஆய்வு செய்வது தப்பான அணுகுமுறை. புராணங்கள் கற்பனையானவை. அவை வரலாற்று ஆவணங்கள் அல்ல.
பயன்படுவனவற்றை நன்றியுடன் வணங்கும் மரபு தமிழரிடம் இருந்தது. உடல் இன்பத்திற்கும் இனப்பெருக்கத்திற்கும் முதன்மையான ஆண் பெண் உறுப்புகளை இணைத்து வழிபட்டனர்.

இவ்வழிபாட்டை சிவன் வழிபாடாக மாற்ற ஒரு புராணக் கதையைப் புனைந்தனர் ஆரியர்கள். தாருகாவனத்திற்கு சென்ற சிவன் அங்குள்ள ரிஷி பத்தினிகளைக் கண்டு மோகித்து அவர்களை வலுக்கட்டாயமாகப் புணர, அதைக் கண்ட ரிஷிகள் கோபங்கொண்டு, “சிவனின் ஆணுறுப்பு அறுந்து விழக்கடவது’’ என்று சாபம்விட, சிவனின் ஆணுறுப்பு அறுந்து விழ, பதறிய தேவர்கள் பார்வதியின் உதவியை நாட, பார்வதி உடனே ஓடிவந்து தன் பெண் உறுப்பால் அதைத் தாங்கினாள். அதுவே சிவலிங்கம் என்று அக்கதையை உருவாக்கினர். இப்படித்தான் தமிழரின் ஆண் பெண் உறுப்பு வழிபாடு சிவலிங்க வழிபாடாக மாற்றப்பட்டது.
எனவே, வேதத்தில் வரும் ருத்திரனையும், தமிழர் வணங்கிய ஆண்_பெண் உறுப்பு வழிபாட்டையும் தொடர்புபடுத்திக் காட்டுவது மோசடியான முயற்சியாகும்.

வேதத்தில் வரும் ருத்திரன் சைவக் கடவுள் சிவன் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதுமட்டுமல்ல; சிவனை முதன்மையாகக் கொண்ட சைவமும், திருமாலை முதன்மையாகக் கொண்ட வைணவமும் உருவாக்கப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் கூறப்பட்டது வேதம். வேதகாலத்தில் ஆரியர்களிடையே எந்தவொரு கடவுள் வழிபாடும், உருவ வழிபாடும் இல்லை. இயற்கை சக்திகளையே வழிபட்டனர் என்பது உறுதியான உண்மை.
அப்படியிருக்க, ருத்திரன் என்பதை சிவனோடு முடிச்சுப் போட்டுத் தொடர்புபடுத்துவதும், தேவசேனாதிபதி என்பதை முருகன் என்று திரிப்பதும் மோசடி முயற்சியாகும். காரணம், வேதத்தில் குறிப்பிடப்படும் ருத்திரன் படைத்தலைவனாகவே குறிக்கப்பட்டுள்ளான்.
எனவே, வேதகாலத்தில் இனம் சார்ந்த போராட்டங்கள், ஆதிக்க முனைப்புகள், ஆக்கிரமிப்புகள் ஆரியர்களால் செய்யப்-பட்டபோது, தங்களுக்கு இயற்கை சக்திகள் துணை நிற்க வேண்டும், எதிரிகளை(இந்த மண்ணின் மக்களை) அடக்கி, ஒடுக்கி, அழிக்கவேண்டும் என்று பிரார்த்திக்கும் பாடல்ககளைக் கொண்டவையே வேதங்கள்.

உண்மைகள் இப்படியிருக்க, வேத கால வேண்டுதல்களை, இயற்கை சக்திகளை பிற்காலத்தில் வந்த சிவ, விஷ்ணு கடவுளோடு தொடர்புபடுத்துவது அறியாமை அல்லது வேண்டுமென்றே செய்யும் திரிபு மோசடியாகும்.
அதேபோல, தமிழர்களின் (திராவிடர்களின்) தொன்மையான அடையாளங்களை ஆரிய வாழ்வியலோடு ஒப்பிட்டு, இரட்டைக் கலாச்சாரம் என்று கூறுவது ஒரு மோசமான வரலாற்று மோசடியாகும். தமிழர்கள் தொன்மை வேறு; வந்தேறிகளான ஆரியர்களின் வாழ்வியல் வேறு.
சிந்துவெளி இலச்சினை ஒன்றை எடுத்துக்-கொண்டு அதை கார்த்திகைப் பெண்கள் அறுவர் என்று கதையளக்கிறார்கள். தலையில் கொம்புடைய உருவம் ஒன்று அமர்ந்திருக்க, அதைச் சுற்றிலும் கைகோத்து நிற்கும் ஏழு பெண்கள் சப்தரிஷி நட்சத்திரங்களைக் குறிக்கிறது என்றும், கார்த்திகைப் பெண்கள் ஆறு பேருடன், அருந்ததியைத் தொடர்புபடுத்துவதும் அசல் பித்தலாட்டம்.
அந்த நட்சத்திரங்களை ஏழு ரிஷிகள் என்றுதான் நெடுங்காலமாகக் கூறி வருகிறார்கள். அந்த ஏழு நட்சத்திரத் தொகுப்பிற்கு (ஏறு போன்ற வடிவம்) சப்தரிஷி மண்டலம் என்றுதான் கூறுவர்.

ஆனால் அதை கார்த்திகைப் பெண்களோடு தொடர்புபடுத்துவது கடைந்தெடுத்த மோசடி. ஏழு நட்சத்திரங்களை ஆறு பெண்களோடு தொடர்பு
படுத்துவதே முதலில் தப்பு. ஒரு நட்சத்திரம் கூடுதலாய் இருப்பதைச் சரிகட்ட அருந்ததியை இணைக்கிறார்கள். சப்தரிஷி மண்டலத்தில் அருந்ததியைக் கொண்டு சேர்ப்பது மோசடியிலும் மகாமோசடி.
மேலும் சப்தரிஷிகளின் மனைவியரான கார்த்திகைப் பெண்கள் ஏழு பேர் என்று கூறுவது மிகப்பெரிய பித்தலாட்டம். கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர் மட்டுமே!சிந்துவெளி நாகரிக தொன்மங்கள் அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. ஆனால், கார்த்திகைப் பெண்கள் கட்டுக்-கதைகளெல்லாம் மிகமிகப் பிற்காலத்தில் புனையப்பட்டவை. உண்மை நிலை இப்படி
யிருக்க, இவர்களின் புராணப் பாத்திரங்-களையெல்லாம், சிந்துவெளியில் கிடைத்த தொன்மங்களோடு ஒப்பிடுவது கண்டிக்கத்தக்கது. எனவே, வேதத்தில் தமிழ்க்கடவுள் என்பது மிகப்பெரிய வரலாற்று மோசடி!