ஞாயிறு, 27 ஜனவரி, 2019

குருமூர்த்திகள் எத்தனைக் குட்டிக்கரணம் போட்டாலும்...



இந்தக் கார்ட்டூன் மூலம் துக்ளக் வழியாக திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் என்ன சொல்ல வருகிறார்?

கோயில் ஒன்றுக்குச் சென்ற ராகுல்காந்தி அர்ச்சகர் பார்ப்பனர் கேட்ட கோத்திரம் உள்ளிட்டவைகளுக்கு, நான் காஷ்மீர் கவுல் பிராமணர், தாத்தாத்ரேய கோத்ரம் என்று சொல்லிவிட்டாராம்.

அப்படிப்பட்ட ஒருவரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், திமுக தலை வர் மு.க.ஸ்டாலினும் ஆதரிக்கிறார்களாம்.

இதற்காகத் திருவாளர் குருமூர்த்தி அய் யர் கேலி சித்திரம் வரைந்து தள்ளியுள்ளார்.

இவர்கள் விரும்பும் ஹிந்து ராஷ்டிரம் என்பது கூடக் கடவுள் நம்பிக்கையற்றவரான சாவர்க்கர் கண்டு பிடித்ததுதான். அதை வைத்து நாம் கூட கேலிச்சித்திரம் வரைய முடியுமே!

அதுசரி, திருவாளர் கு.அய்யர் என்ன ஜாதி ஒழிப்பு வீரரா? தன் முதுகுப் பூணூலை அறுத்து எறிந்தவரா?

இன்னும் தங்களுடைய பிராமணத் திமிரை கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்க முன்வராத மூர்க்கத்தனம் பிடித்தவர்களுக்கு ஜாதி குறித்துப் பேசத் தகுதி உண்டா?

சென்னை நாரத கான சபையில் தாம் ப்ராஸ் எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங் கத்தின் ஏற்பாட்டில் அருந்தொண்டாற்றிய அந்தணர்கள் எனும் நூலை வெளியிட்ட இவாளின் ஜெகத்குரு - கொலை வழக்கில் ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந் தவரான திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறினார்?

எந்த ஆட்சியாக இருந்தாலும்; அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதை பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரை நாயக்கர்கள் ஆண்ட போதும் அந்தணர்தான் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட போது கோவிந்த தீக்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சிப் பெரியவர். ஆண்டவன் கூட அப்புறம்தான் - அந்தணன் தான் முதலில் (நக்கீரன் 15.11.2002)

இந்த ஜாதி - வருணத்திமிர் பிடித்த கூட்டம்தான் ஜாதி ஒழிப்பு வீரர்கள் போல சலங்கை கட்டி ஆடுகிறது.

காங்கிரசை ஆதரிப்பது, ராகுலை ஆதரிப்பது எல்லாம், இந்தப் பார்ப்பன ஆதிக்க - மனுதர்மக் கொடியினை கையில் ஏந்தி புறப்படுகின்ற ஹிந்து வெறி பிடித்த பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்து வதற்குத்தான் - சங்பரிவார் வட்டாரத்தின் வாலை ஒட்ட நறுக்கத்தான் என்பதைக் குருமூர்த்திகள் நெஞ்சில் குறித்து வைத்துக் கொள்ளட்டும்!

- - -


2.1.2019 நாளிட்ட துக்ளக் இதழில் கீழ்க் கண்ட கேள்வி பதில் இடம் பெற்றிருக்கிறது.

கே: ஹிந்து மதத்தில் வர்ணம்தான் உண்டு, ஜாதி இல்லை' என்கிறார் திரு.சோ. ஆனால், காஞ்சிப் பெரியவரோ, 'டிவிஷன் ஆஃப் லேபர் பிரச்னையை ஜாதி - மூலம் ஹிந்து மதம் அழகாகச் சரி செய்தது' என்கிறார். முரணாக உள்ளதே?

(Division of Labour அல்ல; Division of Labourersதொழிலையல்ல - தொழிலா ளர்களை பிரிக்கிறது இந்து மதவர்ணம் என்றுதான் அண்ணல் அம்பேத்கர் சொல் லுகிறார் - அதனைத் தலைகீழாகப் புரட்டு வது ஏன்?)

ப: மகாத்மா காந்தியும், காஞ்சி பெரிய வரும் வர்ணத்தைப் பற்றி ஒரே மாதிரி கருத்து கூறுகிறார்கள். - சோவும், திலகரும் வேறு மாதிரி கருத்து கூறுகிறார்கள். - "ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி'' ('உண்மை ஒன்றே. அதை விஷய மறிந்தவர்கள் பலவிதமாகப் பார்க்கிறார்கள்) என்று கூறுகிறது ரிக் வேதம். அதுபோலத்தான் காஞ்சிப் பெரியவரும், காந்தியும்; திலகரும் சோ-வும் கூறுவது முரணாகத் தோன்றுகிறது. உலக விஷயங்களில் மாற்றுக் கருத்து, மாற்று நடத்தை எல்லாமே முரணாகவே தோன்றும். இதை சோ பலமுறை கூறியிருக் கிறார். உதாரணமாக, தந்தைக்குப் பணிந் தான் ராமன், அதனால் அவன் உயர்ந்தவன். தந்தையை மீறினான் பிரஹலாதன், அதனால் அவன் உயர்ந்தவன். கணவனை வணங்கினாள் சீதை, அதனால் அவள் உயர்ந்தவள்.

கணவனை மீறினாள் மீரா, அதனால் அவள் உயர்ந்தவள். அண் ணனை மீறினான் விபீஷணன், அதனால் அவன் உயர்ந்தவன். அண்ணனுக்குப் பணிந்தான் கும்பகர்ணன், அதனால் அவன் உயர்ந்தவன். எனவே எது சரி, எது தவறு என்பது தர்ம சங்கடமான விஷயம். தர்மம் என்றாலே தர்மசங்கடம்தான். இந்த வேறு பாடுகளைப் புரிந்து கொள்ள, மற்றவர் களின் கருத்துக்களை ஏற்கா விட்டாலும், சகித்துக்கொள்ள வேண்டும். அதனால் தான் ஹிந்து மதத்துக்கு சகிப்புத்தன்மை இயற்கையாக உருவாகியது. ஒரு கருத்து மட்டுமே சரி என்று கூறும் சித்தாந்தங்கள் காரணமாக உலகில் இரத்த ஆறுதான் ஓடியது. எனவே, இரு முரணான கருத்துக் களை ஏற்கும் நமது சித்தாந்தம், நமக்கு சகிப்புத்தன்மையை வளர்த்தது. - இதுதான் துக்ளக்கின் குருமூர்த்தியாரின் பதில்.

ஹிந்து மதத்தில் வர்ணம் உண்டு - ஜாதி இல்லை என்று சொல்லிவிட்டாராம் சோ - இதை விடப் பித்தலாட்டம் ஒன்று இருக்க முடியாது. சோ கூட்டமும் குருமூர்த்தி கும்பலும் அய்யர், அய்யங்கார்கள் பற்றிக் கேள்வி பட்டதில்லையா? தந்தை பெரியா ராலும், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கத்தாலும் இவர்கள் பெயருக்குப் பின்னால் ஜாதி வாலை வெட்டிக் கொண் டாலும் இவாளின் தோப்பனார் பெயர்களில் ஒட்டியிருந்த அய்யர் வா(ல்)ள் என்பது ஜனாதிபதி வழங்கிய பத்மசிறீ பட்டமா?

காந்தியார் தீண்டாமை ஒழிக என்று சொன்னாரே தவிர, வர்ணம் - ஜாதிகளில் நம்பிக்கை உள்ளவர் தானே! காந்தியாரையும், சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியையும் ஒப் பிட்டு எழுதுகிறதே துக்ளக் - இது எவ்வள வுப் பெரிய மோசடி - பாஷாணத்தில் மூழ்கி எழுந்த போக்கிரித்தனம்.

இதே சங்கராச்சாரியாரை பாலக்கோட் டில் காந்தியார் சந்திக்கவில்லையா? (15.10.1927) மாட்டுக் கொட்டகையில் வைத்து காந்தியாரை அந்த சங்கராச்சரியார் சந்திக்க வில்லையா? தீண்டாமை ஒழிப்புக்கு சங்கராச்சாரியார் ஒத்துழைக்க காந்தியார் வேண்டுகோள் வைத்தபோது, இவாளின் யோகக்குருவான சங்கராச்சாரியார் அதனை நிராகரிக்கவில்லையா? (ஆதாரம்: தமிழ் நாட்டில் காந்தி: பக்கம் 575-576)

இந்த நிலையில் காந்தியாரையும், சங்க ராச்சாரியாரையும் ஒப்பிடுவது யாரை ஏமாற்றிட?

ஹிந்துமதத்தில் வர்ணம் உண்டு, ஜாதி யில்லை என்று சோ கூறிவிட்டாராம். குருமூர்த்திகளின் - ஆர்.எஸ்.எஸ்.காரர்க ளின் குருநாதரான கோல்வாக்கர் ஜாதிபற்றி என்ன கூறுகிறார்?

"நீண்டகாலமாக ஜாதி அமைப்பு முறையை சிலர் எதிர்த்து வருகிறார்கள். பழங்காலத்திலேயே ஜாதி அமைப்பு முறை இருந்து வந்திருக்கிறது. நாம் அதன் உச்சியில் இருந்தோம். ஆனால் ஜாதி முன்னேற்றத்திற்கு முட்டுக்கட் டையாக இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது; உண்மையில் சொல்லப்போனால் இந்த ஜாதி அமைப்பு என்பது சமூகத்தில் ஒற்றுமை யைக் காப்பதற்கே உதவி செய்திருக்கிறது என்ற தமது “BUNCH OF THOUGHTS” என்ற நூலில் கோல்வாக்கர் எழுதிய தற்கு என்ன பதில்?

சோ சொல்லுவது சரியா - கோல்வாக்கர் சொல்லுவது சரியா? அறிவு நாணயத்தோடு பதில் சொல்லட்டும் குருமூர்த்தி அய்யர் வாள்.

குணத்தின் அடிப்படையில் தான் வருணம் என்று சாதிக்க முற்படும் சோ என்ன சொல்லுகிறார்?

"இந்த நிலையிலே ஒரு விஷயத்தை தெளிவாக்கி விடுவது நல்லது. இந்த நான்கு வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படை யில் மனிதர்கள் இப்படி வகைப்படுத்தப் பட்டனர். இது பற்றி 'எங்கே பிராமணன்' தொடரில் விளக்கமாக எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரையிலும் ஓரளவுக்கு இவ் விஷயத்தைப் பார்க்க நேரிடலாம். குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படை யில் ஏற்படுத்தப்பட்ட இந்த நான்கு வகைகள், காலப் போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்து, பிறப்பின் அடிப்படையில் ஏற் படுகிற பிரிவுகளாக உருவெடுத்து விட்டன'' என்று சாதிக்கிறார். சோவின் கட்டுரையில் பிற்பகுதி முழுவதுமே இதனை மய்யமாக வைத்தே புனையப்பட்டுள்ளன. இதற்குப் பதிலடி  கொடுத்து விட்டாலே அந்த எல்லா வற்றிற்குமே போதுமானதாகிடும்.

வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படை யிலானது அல்ல என்பது சோலின் வாதம்.

இது அடிப்படையிலேயே தவறானது என்பது இந்து மதத்தின் அடிப்படை ஆதா ரங்களைக் கொண்டே தகர்த்து விடலாம். 'சோ' குறிப்பிடும் வேதங்களுள் 'யஜுர் வேதம் ஒன்று; அதன் அத்தியாயம் 31 சுலோகம் 11 என்ன கூறுகிறது? ''ப்ராஹ்ம ணோஸ்ய முகமாஸீத் பாஹு ராஜன்ய: க்ருத: 1 ஊரூத்தஸ்ய யத்வைஸ்ய: பத்ப்யாம் சூத்ரோ அஜாயத 11

(கடவுளின் முகத்தினின்றும் பிராமணன் பிறந்தான், தோள்களினின்றும் க்ஷத்திரியன் பிறந்தான், துடைகளினின்று வைசியன் பிறந்தான், பாதங்களினின்று சூத்திரன் பிறந்தான்.) அதர்வண வேதம் என்ன கூறுகிறது? ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத் பாஹு ராஜன்யோபவத் 1

மத்யம் ததஸ்ய யத் வைஸ்ய: பத்ப்யாம் சூத்ரோ அஜாயத 11

(அத்தியாயம் 19 சுலோகம் 6) யஜுர் வேதத்தில் கூறப்பட்ட அதே பொருள்தான் இதற்கும்.

மனுர்வையத் கிஞ்சிதவத் தத் பேஷஜம் - இதன் பொருள் மனு எதைச் சொன்னாரோ அது மருந்து என்பதாகும். பதினெட்டு ஸ்மிருதிகள்; மனுஸ் மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு ஸ்மிருதிகளும் ஒரே வாக்காய்ச் சொல்லி யிருந்தாலும் அது ஒப்புக் கொள்ளத்தக்க தன்று என்று மனுதர்ம சாத்திரம் பீடிகை கூறுகிறது. அவ்வளவுப் பெரிய அந்தஸ்து மனுதர்ம சாத்திரத்துக்கு!

அந்த மனுவானப்பட்டவரும் என்ன கூறுகிறார்?

அந்தப் பிரம்மாவானவர் இந்த வுலகத் தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், துடை, பாதம் இவைகளினின்று முண்டான பிராமண ஷத்திரிய வைசிய சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு முபயோகமான கருமங்களைத் தனித்தனி யாகப் பகுத்தார் (அத்தியாயம் ஒன்று சுலோகம் 87) வேதங்களும், மனுதர்ம சாத்திரமும் இதன் மூலம் எதை உறுதிப்படுத்துகின்றன?

பிரம்மா என்ற கடவுள் படைப்பிலேயே பிறப்பின் அடிப்படையிலேயே தன் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பிராம ணன், சத்திரியன், வைசியன், சூத்திரர்க ளைப் படைப் பித்து இருக்கிறான் என்பது திட்டவட்டமாகத் தெளிவாக்கப் பட்டுள் ளதா இல்லையா?

படைக்கப்படும் போதே இந்தப் பிரிவு களை பிறப்பின் அடிப்படையில் பிரம்மா படைத்து விட்டார் என்று இந்து மத வேதங்களும், ஸ்மிருதியும் கூறிவிட்ட நிலையில், பிறப்பின் அடிப்படையில் இவை உண்டாக்கப்படவில்லை என்று சோ கூறுவதை எண்ணிப் பார்க்க வேண்டும். வேதங்களையும் ஸ்மிருதிகளையும் மறுக்கும் மகா புரட்சி யாளராக சோ மாறி விட்டாரா? அல்ல - அல்ல! வேதங்கள், ஸ்மிருதிகள் கூறியவற்றை ஏற்றுக் கொண்டு அவற்றின் அடிப்படையில் விவாதிக்க முயற்சித்தால் அவாளின் இந்துத்துவா கபாலம் கழன்று விடும் என்பது அவர்களுக்கு மிக நன்றா கவே தெரியும். கடவுளேயானாலும், காந்தி யாரே ஆனாலும் அவர்களைப் பொருத்த வரை அவர்கள் காரியத்துக்கு எந்த அள வுக்குப் பயன்படும் என்பதைப் பொறுத் ததேதான்.

சோ வியாக்கியானம் செய்வது போலவே வேறு சிலரும் இந்தக் காரியத்தில் ஈடுபடு கிறார்கள். இதற்கு ஆப்பு அடிக்கும் வகை யில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியார் விளக்க மாகவே கூறி இருக்கிறார். இந்து மத சமாச்சாரங்களுக்கு வியாக் கியானம் கூற சோவைவிட சங்கராச்சாரி யார் தான் தகுதியானவர் என்பதை சோவே மறுக்க முடியாதே!

காஞ்சி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல்' - முதல் பாகம் (பக்கம் 1001-1003) என்ன கூறுகிறது?.

"ஜாதி வித்யாஸமே இல்லை என்று பகவான் சொல்லவில்லை: ஆனால், பிறப் பின்படி இன்றி, குணத்தின்படி கர்மாவைப் பிரித்துத் தரும் சதுர் வர்ணத்தைத் தாம் ஸ்ருஷ்டித்ததாகத் தான் சொல்கிறார். 'சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச' என்றே சொல்கிறார் என்கிறார்கள்.

சரி, ஆனால், எத்தனை வயசுக்கு மேல் இப்படிக் குணத்தை அறிந்து அதை அநு சரித்து அதற்கான வித்தையைப் பயின்று அதற்கப்புறம் தொழிலை அப்பியாஸம் பண்ணுவது? முக்கியமாக பிராம்மணனின் தொழிலை எடுத்துக் கொண்டால் இவன் ஏழெட்டு வயசுக்குள் குருகுலத்தில் சேர்ந் தால்தானே அப்புறம் பன்னிரெண்டு வரு ஷங்களில் தன் தொழிலுக்கானவற்றைப் படித்து விட்டுப் பிறகு அவற்றில்தானே அநுஷ்டானம் பண்ண வேண்டியதைப் பண்ணவும், பிறருக்குப் போதிக்க வேண் டியதைப் போதிக்கவும் முடியும்? குணம் ஆன பிறகு (ஓர் அமைப்பில் உருவான பிறகு) தான் தொழிலை நிர்ணயிப்பது என்றால், கற்க வேண்டிய இளவயசு முழுதும் பல பேர் தொழிலைத் தெரிந்து கொள்ளாமல் வீணாவதாகவும், அப்புறம் சோம்பேறியாக ஒரு தொழிலுக்கும் போகப் பிடிக்காமல் இருப்பதாகவுமே ஆகும். அப்படியே கற்றுக் கொண்டு தொழிலுக்குப் போகும்போதும் சமூகத்துக்கு அவனால் கிடைக்கிற பிரயோஜனத்தில் வெகுவான - காலம் நஷ்டமாயிருக்கும். க்ஷணகாலம்கூட வீணாக்காமல் ஒழுங்காக, விதிப்படி கர்மா பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று திருப்பி திருப்பிச் சொல்லும் பகவான் இதை ஆதரித்துப்  பேசியிருப்பாரா?

அப்படியானால் அவர் 'தியரி'யில் (கொள்கையளவில்) குணப்படி தொழில் என்றாலும், 'ப்ராக்டிஸில்' (நடைமுறையில்) பிறப்பால் தொழில் என்பதைத்தான் ஆத ரித்தாரா? என்றால், பாலிடீஷியன்கள் (அரசியல்வாதிகள்) போல பகவான் கொள்கை ஒன்று, காரியம் இன்னொன்று என்று இருப்பவர் அல்ல.

சரி அவருடைய வாழ்க்கையில் நாம் என்ன பார்க்கிறோம்? - "நான் யுத்தம் பண்ண மாட்டேன்; பந்துமித்தரர்களின் ரத்தத்தைச் சிந்தி சாம்ராஜ்யாபிஷேகம் பண்ணிக்கொள்வதைவிட, ஆண்டிப் பரதே சியாக பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவது எத்த னையோ மேல், என்று சொல்லிக்கொண்டு தேர்த் தட்டில் உட்கார்ந்து ஸ்த்யாக் ரஹம் பண்ணிவிட்ட அர்ஜூனனிடம் அவர் என்ன சொன்னார்?. "நீ க்ஷத்ரிய ஜாதி யில் பிறந்தவன். யுத்தம் பண்ணுவதுதான் உன் ஸ்வதர்மம். எடு வில்லை - போடு சண் டையை" என்றுதான் அவனைவிடப் பிடி வாதம் பிடித்து அவனை யுத்தம் பண்ண வைத்தார்.

அப்படியானால் தர்ம புத்திரரின் விஷயம் என்ன? சண்டையே கூடாது. சமாதானமாகவே போய்விட வேண்டும் என்று தானே அவர் ஆரம்ப காலத்தி லிருந்து இருந்து வந்திருக்கிறார்?. அவரை யும் பரமாத்மா க்ஷத்ரிய தர்மத்தைத்தான் அனுஷ்டிக்கப் பண்ணினார் என்றால், அவர் "ஸ்வதர்மம் என்கிறபோது அவரவர் ஜாதி தர்மத்தைத்தான் சொன்னார் என்று தான் அர்த்தமாகும். பிராமணராகப் பிறந்தும் க்ஷத்ரிய தர்மப்படி யுத்தத்தில் இறங்கிய த்ரோணாச்சாரியார் மாதிரியானவர்கள் பெரியவர்கள் என்பதால் பகவானாக அவர்களை நிந்திக்க மாட்டாராயினும், பீமஸேனன் போன்றவர்கள் இவர்களை ஜாதி தர்மம் விட்டதற்காகக் குத்திக் காட்டிப் பேசியபோதெல்லாம் பகவான் ஆக்ஷேபித் ததில்லை. அதனால் பிறப்பால் ஏற்படுகிற ஜாதி தர்மமே அவர் சொன்ன ஸ்வதர்மம் என்று உறுதியாகிறது. அப்படியானால், ஏன் குணகர்ம விபாகச: என்றார் என்றால்,

இந்த ஜாதி தர்மமே தான் உள்ளூர அவரவரின் குணமாகவும் இருக்குமாதலால் குணத்தால் சதுர்வர்ணம் பிரிவதாக பகவான் சொன்னதும், பிறப்பால் இப்படி ஜாதியாகப் பிரிவதும் ஒன்றே தான்; ஒன்றுக்கொன்று முரணானதல்ல. தியரி, ப்ராக்டீஸ் என்று - வெவ்வேறு விஷயங் களைச் சொல்கிற தோஷம் பரமாத்மாவுக்கு ஏற்படவில்லை . என்று சங்கராச்சாரியார் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

இதற்கு என்ன பதில் சொல்கிறார் திரு வாளர் சோ? குணத்தின் அடிப்படையில் வர்ணம் - அதற்குரிய தொழில்கள் என்பது சாத்தியமில்லை என்று பாஷ்யம் கூறி விட்டாரே - இதற்குமேல் சோவோ, குரு மூர்த்திகளோ முண்ட முடியுமா?

ஜாதி வேறு வர்ணம் வேறு என்று பிரிக்க முயலுவதற்கும் இதில் பதில் இருக்கிறதே - இதற்கு என்ன பதில்?

ஆகா - இந்த முரண்பாடுகளை எவ்வளவு சாமார்த்தியமாக சப்பைக்கட்டுக் கட்டி பம்மாத்து வேலை பண்ணுகிறார் குருமூர்த்தி அய்யர்வாள்!

தர்மம் என்றாலே தர்ம சங்கடம் தானாம், இந்த வேறுபாடுகளை புரிந்து கொள்ள மற்றவர்களின் கருத்துக்களை ஏற்காவிட்டாலும் சகித்துக் கொள்ள வேண்டுமாம்!

திருவாளர் குருமூர்த்தி அய்யர் அவர் களே! வேறு பாடு என்பது வேறு, முரண் பாடு என்பது வேறு, இங்கே சோ கூறுவது - சங்காராச்சாரியார் கூறுவது முரண்பாடே தவிர வேறுபாடல்ல. இதனை நாணயமாக ஒப்புக்கொள்ளும் ஒழுக்கம் குருமூர்த்திக்கு இல்லாததை நாம் புரிந்து கொள்ள முடியும். அவாளிடம் முரண்பாடு ஏற்பட்டால் அதைச் சகித்துக் கொள்ள வேண்டு மாம், எப்படி?

காரணம் சோவும், சங்கராச்சாரியாரும் அவாள் அல்லவா? இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் பற்றை யும் தாண்டிய வெறித்தனம் என்பது.

ஒரு பார்ப்பான் இன்னொரு பார்ப் பானை விட்டுக் கொடுக்க மாட்டான் என் கிறபோது குருமூர்த்தி அய்யர் மட்டும் எப்படி விட்டுக் கொடுப்பார் என்று எதிர்ப் பார்க்க முடியும்? இதைத்தான் நம்மின மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், குருமூர்த்திகள் என்ன தான் குட்டிக் கரணம் போட்டாலும் பெரியார் மண் அவர்களின் முகத்திரையை கிழித்தே தீரும் என்பது நினைவில் இருக்கட்டும்!

-  விடுதலை ஞாயிறு மலர், 5.1.19

செவ்வாய், 22 ஜனவரி, 2019

ஹிந்து மதம் மனித உரிமைகளை மதிக்கிறதா? மிதிக்கிறதா?

'சோவி'ன் 'துக்ளக்' கட்டுரைக்கு மறுப்பு!


மஞ்சை வசந்தன்


மற்ற மதங்களின் தெய்வங்களையெல்லாம் தொழ லாமா? நம்பலாமா, கூடாதா? என்ற கேள்விக்கு 'சோ' தந்த பதிலை, 16-1-2019 துக்ளக் இதழில் 24ஆம் பக்கத்தில் 'ஹிந்து மதத்தின் தனியுரிமை!' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர்.

"மற்ற மதங்கள் எல்லாம், நீ இன்னாரைத் தொழுதால், நீ உருப்படலாம்! நீ வேறு ஏதாவது தெய்வத்தை நம்பினால் நீ குளோஸ்! என்று சொல்கின்றன. இந்தத் தெய்வத்தைத்தான் நம்ப வேண்டும். நான் சொல்கிற தெய்வத்தை நம்பு என்கின்றன. ஆனால், ஹிந்து தர்மமோ, பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்...

யேசபி அன்யதேவதாபக்தா யஜந்தே ச்ரத்த யாந்விதா:

தேசபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம்  -  ப.கீ.9.23

சிரத்தையோடு, ஒருவன் வேறு கடவுள்களை, தெய்வங்களை அதற்கு வேண்டிய முறையோடு வேண்டினான் என்றால், அந்த வேண்டுதலும் பக்தியும் என்னிடம்தான் வந்து சேரும். அவன் சரியான விதி முறைப்படி செய்யவில்லை என்றாலும், என்னிடம்தான் வரும். நான் அவனுக்கு அனுக்கிரகம் பண்ணுவேன். இதன் பிறகுநீங்கள் என்ன செய்ய முடியும்?நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நீங்கள் சிரத் தையாகக் கடவுளைக் கும்பிட்டால் அது என்னிடம்தான் வந்து சேரும் என்று சொல்லி விடுகிறார்.' என்று கூறியுள்ளார்.

சோவின் இந்தப் பதில் சுத்த மோசடியாகும்! பகவத் கீதையை தன் வசதிக்கேற்ப திரித்து ஏமாற்றுகிறார். பகவத் கீதையை யார் படிக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் அப்படி எழுதியிருக்கிறார். ஹிந்து மதத்து அறிஞர்கள் என்று கூறிக் கொள்கின்றவர்களைவிட பெரியார் தொண்டர்கள் அதிகம் இந்து மத நூல்களை படித்து ஆய்வு செய்தவர்கள் என்பது சோவுக்கு மறந்திருக்கலாம்.

சோ எடுத்துக்காட்டியுள்ள இந்த ஸ்லோகத்திற்கான சரியான பொருள் அவர் கூறியுள்ளதுபோல் அல்ல.

பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ள அறிஞர்கள் இவர் கூறுவதுபோல் கூறவில்லை. எடுத்துக்காட்டாக,

"ஸ்ரீமத் பகவத் கீதை" - சுவாமி சித்பவானந்தர் உரையில்,

சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதை களை வணங்குங்கால், விதி வழுவியவர்களாய் என் னையே வணங்குகிறார்கள் என்று கூறுகிறார்.

"பகவத் கீதை - பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா உரையில்,

தேவர்களுக்கு எவற்றையெல்லாம் யாகங்களாக ஒரு மனிதன் படைக்கிறானோ அவையும் உண்மையில் எனக்கானவையே. ஆனால், அவை அறிவின்றி அவை அப்படி படைக்கப்படுகின்றன என்று கூறுகிறார்.

ஆக, பகவத் கீதையில் சோ எடுத்துக்காட்டிய ஸ்லோகத்தில் உள்ள மற்ற தேவதைகள் என்பதை பிற மதக் கடவுள்கள் என்கிறார். மற்ற உரையாசிரியர்கள் இதர கடவுளர்கள் என்றே கூறுகின்றனர். இராமானுஜர் பிற தேவதைகள் என்பதற்கு பிரம்மா, சிவன், விநாயகர் போன்றவர்கள் என்றே விளக்கம் அளிக்கிறார். அது மட்டுமல்ல, பகவத் கீதை காலத்தில் கிருத்தவ, இஸ்லா மிய மதங்கள் போன்ற பிற மதங்கள் உருவாக்கப் படவேயில்லை. அப்படியிருக்க பிற மதங்கள் என்று சோ பொருள் கொண்டது மோசடியானது.

அதாவது சிவனை வணங்கும் சைவர்களுக்கும் விஷ்ணுவை வணங்கும் வைணவர்களுக்கும் இடையே கடுமையான மோதல் இருந்தபோது, சைவத்திற்கு எதிராக வைணவத்தை உயர்த்திப் பிடித்துப் பரப்பு வதற்காக எழுதப்பட்டு மகாபாரதத்தில் இடைச் செருக லாய் நுழைக்கப்பட்டதே பகவத் கீதை.

அதனால் சைவக் கடவுள்களைவிட தானே உயர்ந்த கடவுள் என்றும், பிற கடவுளர்களை வணங்கினாலும், அது தன்னை வணங்கியதாக என்னையே வந்து சேரும் என்று கண்ணன் கூறுகிறார்.

உண்மை இப்படியிருக்க, நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயினும் நீங்கள் எந்த மதத்துக் கடவுளை வணங்கினாலும் அது என்னிடமே வந்து சேரும் என்று கண்ணன் பகவத் கீதையில் சொல்லியுள்ளார் என்பது மோசடியானது. அது மட்டுமல்ல, சிவன், பிரம்மா, விநாயகர் போன்ற கடவுள்களை வணங்குகிறவர்கள் சிற்றறிவுடையவர்கள் என்கிறது பகவத் கீதை.

அர்ஜுனா! பிரம்மலோகம் வரையிலுள்ள எல்லா லோகங்களும் அழிவுள்ளவை. குந்தி மகனே! என்னை அடைந்துவிட்டாலோ, மறுபிறவி கிடையாது என்று அத்தியாயம் 8, சுலோகம் 16இல் கிருஷ்ணன் கூறுகிறார்.

பிரம்மலோகம் வரையில் உள்ள லோகங்களெல்லாம் அழிவுள்ளவையாகையால் அவைகளுக்குச் செல்ப வர்கள் மறுபடியும் பிறவி எடுக்க வேண்டும். ஆனால், வைகுந்தம் அடைபவர்கள் மறுபிறவி எடுத்துத் துன்பப் பட மாட்டார்கள் என்று இந்த சுலோகத்திற்கு விளக்கம் அளிக்க வந்த ராமானுஜர் கூறுகிறார்.

பிரம்மலோகம் வரையிலுள்ள எல்லா லோகங்களும் அழியக் கூடியவை என்று கிருஷ்ணன் கூறுகின்ற கருத்துப்படி நோக்கின் சிவலோகம், பிரம்மலோகம், வைகுந்தம் போன்ற பல லோகங்கள் இருப்பதாயும், சிவன், பிரம்மா போன்ற பல கடவுள்கள் இருப்பதாயும் கிருஷ்ணனே ஒப்புக்கொண்டுவிட்டதாக அர்த்தம் ஆகிறது. உலகை நடத்தும் கடவுள் ஒன்றே என்று மதத் தலைவர்கள் கூறுகின்ற கருத்துக்கு இது முரணாக இல்லையா?

உலகிற்குப் பொதுவான அக்கடவுள் கிருஷ்ணனாக அவதாரம் எடுத்து வந்து கீதையை உபதேசம் செய் திருந்தால், அது பல கடவுள் இருப்பதாக உபதேசம் செய்திருக்குமா?

இது மட்டுமல்ல, சிவலோகம், பிரம்மலோகம் போன் றவை அழியக் கூடியவை என்றும், விஷ்ணு வாழும் வைகுந்தம் மட்டும் அழிவில்லாதது என்றும், அக்கடவுள் காழ்ப்பு உணர்வோடு கூறியிருக்குமா?

சைவத்தைத் தாழ்த்தி வைணவத்தை உயர்த்தித் கூற, உலுத்தர்கள் செய்த இடைச் செருகலே இக்கீதை என்பது இதிலிருந்து உறுதி செய்யலாம்.

மேலும், பகவத் கீதையில் முன்னுக்குப் பின் முர ணாக பல கருத்துகள் ஒரே உளறலாக இருப்பதையும் பகவத் கீதையை நன்கு ஆராய்வோர் அறியலாம்.

எடுத்துக்காட்டாக,

மேலே கூறிய சுலோகத்தில் பிற கடவுள்களை வணங்கினாலும், அது தன்னையே வணங்கியதாகத் தன்னையே வந்து சேரும் என்று 9ஆவது அத்தியாயம் 23ஆவது ஸ்லோகத்தில் கூறிய கண்ணன், 26ஆவது ஸ்லோகத்தில்,

தேவர்களை தொழுபவர்கள் தேவர்களை அடை கிறார்கள், பிதுர்களைப் போற்றுகிறவர்கள் பிதுர்களை அடைகிறார்கள். பூதங்களை வணங்குபவர்கள் பூதங் களைப் போய்ச் சேருகிறார்கள். என்னைப் போற்றுகிற வர்கள் என்னை வந்தடைகிறார்கள் என்கிறார்.

அதாவது யார் எத்தெய்வத்தை வணங்கினாலும் அவர்கள் என்னையே (கிருஷ்ணனையே) வணங்கிய தாக அர்த்தம் என்று முதலில் கூறிவிட்டு, அதன்பின், யார் எதை எதை வணங்குகிறார்களோ  அதையே சென்றடைகிறார்கள் என்று கூறிகிறார்.

இப்படிப்பட்ட உளறல் குப்பைதான் புனித நூலாம். அதைத் தேசிய நூலாக வேறு ஆக்க வேண்டுமாம்.

மனித உரிமைகளை பகவத் கீதையும் இந்து மதமும் மதிக்கிறதா?

மனித உரிமைகளுக்கும், மனித நேயத்திற்கும், சமத் துவத்திற்கும் நேர்எதிரான கொள்கைகளைக் கொண்ட மதம் இந்து மதம். ஆனால், சோ, இந்து மதம் மனித உரிமையை மதிக்கும் மதம் என்கிறார்.

ஜாதிப் பிரிவுகள் மனித உரிமைக்கும், மனித சமத்துவத்திற்கும் எதிரானது. அந்த ஜாதிகள் அழியக் கூடாது; அது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்கிறது பகவத் கீதை. மேலும் ஜாதியடிப்படையில் குலத்தொழிலையே ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்கிறது பகவத் கீதை.

அயலாருக்கு (அடுத்த ஜாதிக்காரனுக்கு) விதிக் கப்பட்ட கடமையைத்தான் மேற்கொண்டு அதை நல்ல முறையில் குறையில்லாமல் செய்வதைக் காட்டிலும், தனக்காக விதிக்கப்பட் கடமையைக் குறையாகச் செய்தாலும் நல்லதே! என்கிறான் கிருஷ்ணன்.

(பகவத் கீதை 18ஆவது அத்தியாயம், 47ஆவது சுலோகம்)

அதாவது, வண்ணான் மகன் வண்ணான் தொழி லையே செய்ய வேண்டும். அடிமை வேலை செய்பவன் மகன் அடிமை வேலையே செய்ய வேண்டும். அடிமை வேலை செய்பவன் மகன் நாட்டை நல்ல முறையில் ஆளுகின்ற திறமை பெற்றிருந்தாலும், வாய்ப்பு இருந் தாலும் அவன் நாடாளச் செல்லக்கூடாது. அடிமை வேலையை அரைகுறையாகத்தான் செய்ய முடியும் என்றாலும் அடிமை வேலையையே அவன் செய்ய வேண்டும் என்கிறது.

"பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள்" ஆகியோர் தாழ்ந்த பிறவிகள்.

"புண்ணியப் பிறவிகளான பிராமணர்களும் பக்தர் களான ராஜரிஷிகளும்" உயர்ந்த பிறவிகள்.

பகவத் கீதை: 9ஆவது அத்தியாயம், சுலோகம் 32, 33இல் கிருஷ்ணனே இவ்வாறு கூறுகிறார்.

ஒருவனது நடத்தையை வைத்து உயர்ந்தவன், தாழ்ந் தவன் என்ற பாகுபடுத்திக் கூறினால் அதில் நியாயம் உண்டு. அதை விடுத்து, ஒருவன் பிறக்கின்ற ஜாதியின் அடிப்படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பாகுபாடு செய்வது அயோக்கியத்தனம் அல்லவா?

பாவம்! பெண்கள் எந்த ஜாதியில் பிறந்தாலும் அவர்கள் தாழ்ந்த பிறவிகளாம்! பெண்களுக்குக் கீதை அளித்துள்ள அந்தஸ்தைப் பார்த்தீர்களா?

இந்து மதத்திற்கு அடிப்படையாகக் கருதப்படுவது வேதங்களும் மனுஸ்மிருதிகளும். அவை மனித உரிமை களுக்கும் மனித சமத்துவத்திற்கும் நேர்எதிரானவை.

ஸுமித்ரிய ந ஆப ஒஷதய ஸந்து துர்மித்ரியா ஸ்தஸ்மை

ஸந்து யோஸ் மான்த்வேஷ்டியம் சவயம் த்விஷ்ம

(யஜுர் வேதம்)

பார்ப்பனர்கள் நாள்தோறும் பாடுகிற யஜுர் வேதப் பாடல் பகுதியே இது. இதன் பொருள் என்ன தெரியுமா?

தண்ணீர், தானிய வகைகள், பிராண வாயு முதலிய உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்கள் யாவும் எங்களுக்கு (பிராமணர்களுக்கு) நன்மை பயப் பனவாகவும் எங்களால் வெறுக்கப்படுகின்ற மனிதர் களுக்குத் தீமையைச் செய்வனவாகவும் ஆகவேண்டும். வேத ஸ்மிருதிக்கு இணங்கி நடக்காத பகுத்தறிவு வாதிகளுக்கு இவ்வுலகம் விஷமாகப் போகட்டும் என்பதே!

ஆரியர்களின் நலன் கருதி எழுதப்பட்டவையே வேதங்கள் என்பது இதிலிருந்து புரியவில்லையா? வேதங்கள் மட்டுமல்ல வேதங்களுக்கு விளக்கம் தரவந்த ஸ்மிருதிகளின் போதனைகளை ஆராய்ந்தாலும் ஒரே அபத்தம்தான்.

பிராஹ்மணோ ஜாயமானோ ஹிபருதிஸ்யாம் அபியாஜதே

ஈஸ்வர; ஸர்வ பூதானாம் ப்ரஹ்ம கோசஸ்யகுப்தயே

ஸர்வஸ்வம் ப்ராஹ்மணஸ்யேதம், யத்கிஞ் சீஜ்ஜகதீகதம்

ஸ்ரைஷ்டைனா பிஜனெனெதம் ஸர்வம் வைப்பிராஹ் மணோர் ஹதி

ஸவமேவ ப்ராஹ்மணோ புங்க்தேஸ்வம் ததால்ச: ஆன்ருமிம்ஸ்யாத்

பிராஹ்மண ஸ்யயுஞ்ஸதே ஹிதரே ஜனா

என்று மனு ஸ்மிருதி கூறுகிறது.

அதாவது, சகல பிராணிகளுக்கும் தலைவனாயும் வேதமாகிய களஞ்சியத்தின் காவலனாயும், பிராமணன் படைக்கப்பட்டிருப்பதால், இப்பூமியிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் பிராமணன் உரிமையுள்ளவனாவான். பிராமணன் பிச்சையெடுத்து உண்பானாயினும், பிறர் உண்பதும் கொடுப்பதும் அவன் பொருளே ஆகும் என்பதே மனு கூறுவதற்கு அர்த்தம்.

தாதவ்வம் ப்ரத்யஹம் பாத்ரே நிமித்தேஷுவிசேஷத்

யாசிதேனா பிதாதவ்யம், ஸ்ரத்தா பூதத்து சக்தித்

என்று யக்ஞவல்கியர் கூறுகிறார்.

அதாவது, பிராமணனுக்குத் தினமும் நாணயமும் கொடுக்க வேண்டும். கையில் ஒன்றுமில்லாவிடில் பிச்சையேற்றோ வேறு எந்த வகையிலோ கொடுத்தே தீரவேண்டும் என்பதே யக்ஞவல்கியர் கூறுவதற்கு அர்த்தம்.

இதே கருத்தை, அஹாஹர்தம் யாதுத பரத்ராதி என்ற வேத வாக்கியம் கூறுகிறது. அதாவது பிராமண னுக்கு பசு தானம் வழங்கியவன், அப்பசுவிற்கு எத்தனை மயிர்கள் இருக்கின்றவோ அவ்வளவு காலம் சுகத்தை அனுபவிப்பான் என்பது இதற்குப் பொருள்.

அதாநருணாமதனம வரருத்வாயோ ததாதீக தர்த்தீனே;

ஸ்வைபோஷண ஜாத்பாபாத் முக்தோ பவதி தத் க்ஷணம்

என்றும் யக்ஞவல்கியர் கூறுகிறார்.

அதாவது பிறருக்குக் கொடுக்காத லோபியின் பொருளைக் கொள்ளையிட்டுப் பிராமணனுக்குக் கொடுக் கிறவன் அக்கணமே திருட்டினாலுண்டான பாபத்தி னின்றும் விடுபடுகிறான் எனப்தே அவர் கூறுவதற்கு அர்த்தம்.

கோமத ஸ்மிருதியில்,

தேனே சோத்தரஸ்ததர்த் தோஹ்ஸ்ய நிசய என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, சூத்திரன் ஏதாவது ஒருவகையில் பொருளீட்டினால் அது பிராமணனுக்கு உரியது என்பது இதன் பொருள்.

மௌண்ட்யம் ப்ராணாந்தி கோதண்ட ப்ராஹ்மணானாம் விதீயதே

இதரேஷாம்து வர்ணானமதண்ட; ப்ராணாந்தி; கோபவேத

என்று மனு கூறுகிறார்.

கொலைத் தொழில் புரிந்த பிற ஜாதிக்காரர்களைத் தூக்கிலிட வேண்டும். ஆனால், பிராமணன் கொலைக் குற்றம் செய்தால், அவனது தலை மயிரை மொட்டை யடித்து விடுதலே அதற்குரிய தண்டனையாகும் என் பதே மனு கூறுவதற்கு அர்த்தம். இப்படிப்பட்ட மனு ஸ்மிருதிதான் இந்து மதத்தின் நீதி நூலாகும்! இப்படிப் பட்ட இந்து மதந்தான் மனித உரிமைகளை மதிக்கும் மதமா?

சூதரந்து காரயேத் தாஸ்யம் க்ரீதமக்ரீதமேவா;

தஸ்யாயைவ ஹீஸ்ருஷ்டோ ஸௌப்ராஹ மணஸ்ய ஸ்வம்புவா

என்றும் மனு கூறுகிறார்.

அதாவது, கூலி கொடுத்தாகிலும், அல்லது கூலி கொடுக்காமலும், சூத்திரனைப் பிராமணன் வேலை வாங்கலாம். ஏனென்றால் பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே சூத்திரன் பிரம்மாவால் சிருஷ்டிக் கப்பட்டிருக்கிறான் என்பதே மனு கூறுவதற்கு அர்த்தம்.

பிராமணன் சாப்பிட்ட மிச்சம், பழைய துணிகள், ஒதுக்கித் தள்ளும் தானியங்கள், பாத்திரங்கள் இவையே சூத்திரனுக்குரிய கூலி   (மனு - 125, அத் - 10)

ஆரியர் அல்லாத முரட்டு மனிதர்கள் கறைப்பட்ட கருப்பையில் பிறந்தவர்கள்  (மனு - 58, அத் - 10)

பெண்களுக்கு சுயவாழ்வு இல்லை. அவர்கள் பிள்ளைப் பருவத்தில் பெற்றோரையும், அடுத்து கணவ னையும், பின் பிள்ளைகளையும் சார்ந்தே வாழ வேண்டும்.  (மனு 148, அத் - 5)

கணவன் தீயகுணம், செயல் உள்ளவனாக விருந்தாலும், பல பெண்களோடு உறவு கொள்பவனாக இருந்தாலும் பெண்ணானவள் அவனை தெய்வமாக எண்ணிப் பூசிக்க வேண்டும். (தொழவேண்டும்)" (மனு 5: 154)

கொலைத் தொழில்புரிந்த மற்ற ஜாதிக்காரர்களைத் தூக்கில் போடவேண்டும். பிராமணன் கொலை செய் தால் அவன் தலையின் மயிரை அகற்றினால் அதுவே தண்டனையாகும்." "பிராமணன் சூத்திரனிடத்தில் ஏதாவது பொருள் இருந்தால் அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் சூத்திரன் பிராமணனுக்கு அடிமையானதால் சூத்திரனுக்கென்று பொருள்கூட உரிமையில்லை." (மனு எட்டாவது அத்தியாயம், சுலோகம் 417)

"கூலி கொடுத்தோ அல்லது கூலி கொடுக்காமாலோ சூத்திரனை பிராமணன் வேலை வாங்கலாம். ஏனென் றால், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே சூத்திரன் பிரம்மாவால் படைக்கப்பட் டிருக்கிறான்."

(மனு எட்டாவது அத்தியாயம், சுலோகம் 413)

இப்படிப்பட்ட கொள்கைகளைக் கொண்ட இந்து மதம்தான் மனிதநேய மதமா? மனித உரிமைகளை மதிக்கும் மதமா? ஆரிய பார்ப்பனர்கள் பித்தலாட்டப் பிரச்சாரம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டு. தமிழர்களே எச்சரிக்கை! குறிப்பாக துக்ளக் படிக்கும் தமிழர்களே எச்சரிக்கை! எச்சரிக்கை!

-  விடுதலை நாளேடு, 22.1.19