வெள்ளி, 30 அக்டோபர், 2020

மனு ஸ்மிருதியும் தர்ம சாஸ்திர நூல்களும்

மநு ஸ்மிருதி என்பது தர்ம சாஸ்திர நூல்களில் ஒன்று.தர்ம சாஸ்திர நூல்கள் 20 க்கும் மேல் உள்ளன.இந்த நூல்களைப் பற்றி எனது முக நூலில் சிறு சிறு பதிவுகளாக அவ்வப்போது  எழுதியிருக்கிறேன்.தர்ம சாஸ்திர நூல்களில் தமிழில் பரவலாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாக மநு ஸ்மிருதி எனும் மநு தர்ம சாஸ்திர நூல் விளங்குகிறது.

நான் அறிந்த வகையில் தமிழில் ‘மநு தரும சாஸ்த்திரம்’(1865 ஆம் ஆண்டு பதிப்பு)எனும் நூலே அச்சு வடிவில் கிடைத்த முதல் நூலாக எண்ணுகிறேன்.1865 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட மநு தரும சாஸ்த்திரம் நூலினை வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர்,திருவைந்திரபுரம்-கோமாண்டூர் இளையவில்லி இராமாநுஜசாரியர் எனும் வடமொழியில் புலமை வாய்ந்த பண்டிதர் ஆவார். இதே நூலின் 1907 ஆம் ஆண்டு பதிப்பும் இணையத்தில் கிடைக்கிறது.இதே நூலின் பதிப்பு 1919 லும் வெளியிடப் பட்டது. 
இதன் பிறகே திராவிடக் கழகத்தார் 1919 ஆம் ஆண்டு இதே நூலை மறு பதிப்பாக வெளியிட்டார்கள். இந்த நூல் திராவிடக் கழகத்தாரால் தெருக்களில் எரிக்கப்பட்டது. இந்த நூலை திராவிடர் கழகத்தவரே திரித்து எழுதிக் கொண்டார்கள் எனும் பொய்ப் பிரச்சாரமும் தொடர்ந்து வருகிறது.அது உண்மையல்ல என்பதை உணர்த்துவதற்காகவே 1865 ஆம் ஆண்டு பதிப்பித்த நூலை(pdf copy)கேட்கிறவர்களுக்கு அனுப்பி வருகிறேன்.

இது தவிர காஞ்சி மடத்தின் கும்பகோணம் பதிப்பாக தமிழில் ஆபஸ்தம்பர், போதாயணர்,கௌதமர் பெயர்களில் வெளிவந்த தர்ம சாஸ்திர நூல்கள் உள்ளன. இதோடு காஞ்சி மடத்தின் கும்பகோணம் பதிப்பாக ஸ்ம்ருதி முக்தாபலம் எனும் நூலும் (எல்லா தர்ம சாஸ்திர நூல்களின் சாரம்) ஆறு பாகங்களாக வெளிவந்துள்ளது.
இவை தவிர தனித்தனி தர்ம சாஸ்திர நூல்கள் தமிழில் இல்லை.இவற்றை தமிழில் மொழி பெயர்ப்பு செய்வதற்கு கடந்த ஆண்டு முதல் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.இந்தப் பணியில் விரும்பம் உள்ளவர்கள் என்னை உள்பெட்டியில் தொடர்பு கொள்ளலாம்.

மநு தர்ம சாஸ்திர நூலைப் போன்று மற்ற தர்ம சாஸ்திர நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு பரவலாக்கப் பட்டால், இந்து வைதீகத்தில் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள். 

பின் வருவன தர்ம சாஸ்திர நூல்களில் குறிபிடத்தக்கவை;

மநு தர்ம சாஸ்திரம் (தமிழில் உண்டு)
ஆபஸ்தம்ப ஸ்மிருதி(தமிழில் உண்டு)
கௌதம தர்ம ஸூத்ரம்(தமிழில் உண்டு)
விஷ்ணு ஸ்மிருதி
நாரத தர்ம சாஸ்திரம்
வியாச ஸ்மிருதி
ஆங்கிரச ஸ்மிருதி
போதாயண தர்ம சாஸ்திரம்(தமிழில் உண்டு)
யாக்யவல்கிய ஸ்மிருதி
அத்ரி ஸ்மிருமி
பராஸர ஸ்மிருதி
அஸ்திர ஸ்மிருதி
ஹரித ஸ்மிருதி
யம ஸ்மிருதி
காத்யாயனர் ஸ்மிருதி
கர்கர் ஸ்மிருதி
கார்க்யர் ஸ்மிருதி
தேவர ஸ்மிருதி
ப்ரஹஸ்பதி ஸ்மிருதி
சாத்தியான ஸ்மிருதி
தஷ ஸ்மிருதி
சங்க ஸ்மிருதி
உசான ஸம்ஹிதா

இதில் பராஸர ஸ்மிருதி என்பதே கலி யுகத்திற்கான நீதி நூல் என வைதீக நூல்கள் வலியுறுத்துகின்றன.ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு வரை மேலுள்ள தர்ம சாஸ்திர நூல்களை ஆதாரமாகக் கொண்டே சிவில் கிரிமினல் வழக்குகள் விசாரிக்கப் பட்டு நீதி வழங்கப்பட்டு வந்தன.இதில் யாக்யவல்கிய ஸ்மிருதி யை அடிப்படையாகக் கொண்ட மிட்டாக்‌ஷரா (Mitakshara) எனும் நீதி நூல் நடைமுறையில் பல சுதேசி மன்னர்களால் பின்பற்றப் பட்டு வந்தது. 
மேலுள்ள எந்த ஒரு தர்ம சாஸ்திர நூலும் ஒன்றுக்கு ஒன்று தரத்தில் தண்டனைகளில்,மனித நேயமற்ற செயல்களில், பெண்களை இழிவு படுத்துவதில் சமத்துவமின்மையில் குறைந்த தல்ல.இதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டே ‘மநு தர்ம சாஸ்திரம்’.

காலம் கடந்தாவது மக்கள் மத்தியில் மநு தர்ம சாஸ்திரம் நூல் பேசு பொருளாக மாறியுள்ளது. இது மிகவும் சந்தோசமான விசயம். இந்த ஒரு நூல் மட்டுமல்ல,வேத வைதீக சனாதன நூல்கள் அனைத்துமே வர்ணாசிரமம்,பெண்களைத் தரம் தாழ்த்தி இழி பிறவிகளாக பாவிப்பது, சமத்துவமில்லாத விசயங்களை போதிப்பது, அறிவியல் விசயங்கள் அல்லாது பிற்போக்கான மூட நம்பிக்கைகளை வளர்ப்பவை என்பதை போகப் போக உணர்ந்து கொள்ள இது நல்ல ஒரு வாய்ப்பாக அமையும் என்பதிலும் மகிழ்வே.

இந்த ஒரு நூலை எரிப்பதோடு மக்கள் போராட்டம் நின்று விடக் கூடாது, மநு தர்ம சாஸ்திரம் போலவே ஆயிரக் கணக்கான நூல்கள் வேத வைதீக சனாதன தர்மத்தில் உள்ளன.மனித குலத்திற்கே எதிரான அனைத்து வேத வைதீக சனாதன நூல்களும் எரிக்கப்பட வேண்டும்.வைதீக சனாதனமற்ற சமத்துவத்தையும்,மனித நேயத்தையும்  அடுத்த தலைமுறையினராவது உணர்வதற்கு வாய்ப்பினை அளிப்போம்! 

வாட்ஸ் அப்பில் பகிர்ந்த தோழர் புகழேந்தி அவர்களுக்கு நன்றி! 
கட்டுரையாளர் தோழர் Dhinakaran Chelliah அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக