சனி, 12 நவம்பர், 2016

பிராமணன்’ என்றால் என்ன அர்த்தம்?


ஜாதிப் பிரிவுக்கு மூல கர்த்தா பிரம்மா. இந்த பிரம்மாவைத்தான் உலக சிருஷ்டிக்கே கர்த்தா என்கிறது சாஸ்திரங்கள். அது மட்டுமல்ல; பிரம்மாவை-சிவனுக்கும், விஷ்ணுவிற்கும், தகப்பனுக்கும் மேலானவனுமாவான் என்றும் சாஸ்திர புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன.

பிரம்மா முகத்தில் பிராமணர்களையும், மார்பில் சத்திரியர்களையும், இடுப்பில் வைசியர்களையும், காலில் சூத்திரர்களையும் சிருஷ்டித்தார் என்று சொல்லிவிட்டு உடலில் இருந்து உலகை சிருஷ்டித்தார் என்று அதே சாஸ்திரங்களும் புராணங்களும் கூறு கின்றன. வேதத்தில் நான்கு ஜாதிகள் இல்லை. தேவர்கள்-கருப்பர்கள் அல்லது தேவர்கள்-அசுரர்கள்.

மனுதர்மம், வர்ணாசிரம தர்மம் என்பவை எல்லாம் ஆரியர்களுக்கு இந்த நாட்டில் ஸ்திரமான நிலையும் மக்களிடத்தில் செல்வாக்கும் ஏற்பட்ட பிறகுதான், தங்களையே கடவுள்களாக ஏற்படுத்திக் கொண்டு மற்றவர்களை கீழ்மக்களாக, மனுதர்ம மனித (மனுஷ) தர்ம சாஸ்திரத்தை ஏற்படுத்தி அதை பிரம்மாவின் மகனான மனு எழுதினார் என்று வெளியிட்டு அமலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

பொதுவாகச் சொல்லப்போனால், இந்த ஜாதிப்பிரிவு உற்பவத்திற்கு, ஆரியர்களுடைய சாமார்த்தியமான தந்திரங்களே காரணமாகும். ஜாதிப் பிரிவு, பித்தலாட்டமும் சுயநல தந்திர முமானதாகும் என்பதற்கு எடுத்துக் காட்டும் ஆதாரமும் வேண்டுமானால் முக்கியமாக ஒன்றைப் பார்க்கலாம்.

அதாவது, முதல் ஜாதியாராகிய ‘பிராமண’னுக்கு உயர்வும் அவனுக்கு பல வசதிகளும் கொடுக்கப்பட்டிருக் கிறதே தவிர, ஒழுக்கம், நீதி, நாணயம் என்பவையான உயர் மனிதப் பண்பு என்பவைகளில் ஒரு குணம்கூட கொடுக்கப்படவில்லை.

‘பிராமண’ தர்மம் என்ன வென்றால்,

¨ அவன், உடலுழைத்து பாடுபடக் கூடாது.

¨ அவன், மற்றவர்களிடம் வேலை வாங்கலாம்.

¨ அவன், ஏர் உழுதால் பாவம்!

¨ அவன், மற்றவர்கள் உழைப்பால் உயிர் வாழலாம்!

¨ அவன், விபசாரம் செய்தால், விபசாரத்திற்கு உள்ளான பெண் ணுக்கு மோட்சம்!

¨ அவன், பலாத்கார புணர்ச்சி செய்தால், ஊரை விட்டு வெளி யேற்றலாம்.

¨ அவன் கொலை செய்தால், அவ னுக்கு மொட்டை அடித்தாலே போதுமான தண்டனை!

¨ அவன், திருடினாலும், அவன் சொத்துக்களை அவன் எடுத்துக் கொண்டதாகுமே தவிர, பிறர் பொருளை களவாடினதாகாது.

¨ அவன் சொத்துடையவனிடமி ருந்து பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ளலாம்.

--அவன், மது வருந்தலாம்; மாட்டு மாமிசம் சாப்பிடலாம், சூது ஆடலாம், தன் நலத்திற்குப் பொய் பேசலாம்! இவை குற்றமாகாது!

¨ அவன் என்ன செய்தாலும் அரசன் அவனை தண்டிக்கவே கூடாது.

இன்னோரன்ன மற்றும் இது போன்ற பல சலுகைகள், வசதிகள், உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இப்படிப்பட்டவர்தான் மக்களில் மேலான - முதலாவதான உயர்ந்த ஜாதி, தேவர்க்கொப்பான தேவர்கள் என்று சொல்லும்படியான ஜாதியாம்!

இவை மாத்திரமல்ல, இந்த மேல் ஜாதிக்காரர்களான ‘பிராமணர்’கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டிருக்கிற பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், சந்திரன், சூரியன், அக்கினி, வாயு, வருணன், சரஸ்வதி முதலிய ஏராளமான தேவ தேவர்கள் ‘கடவுள்’கள் என்பவர்கள் யோக்கியதைகளும் இதுபோல நீதி, நேர்மை, நாணயம், உண்மை முதலிய மனிதப் பண்பு களுக்கு அப்பாற்பட்டதாகவும், பார்ப் பனர்களின் தர்ம உரிமையை விட பலமடங்கு மேற்பட்டதாகவே கற்பிக் கப்பட்டிருக்கின்றன.

மற்றும் மேல்கண்ட இரு கூட்டத் திற்கும் சூதும் வாதும், சூழ்ச்சியும், தந்திரமும் மாற்றாரைக் கெடுக்கும் கெடுமதியும் எல்லையற்றதாகவே நடப்பில் இருந்து வருகின்றன. மற்ற கீழ் ஜாதி என்பவற்றிற்கு மிகமிகக் கடுமை யான நிபந்தனைகள், தண்டனைகள், கொடுமைகள் தர்மமாக கற்பிக்கப் பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இப்படிப்பட்ட ஜாதிமுறை, உயர்ஜாதி ‘பிராமண’ ஜீவன்கள் இந்த நாட்டில் இருக்க விடலாமா? நீங்களே சொல்லுங்கள்.

_----------------------- 01-05-1957 ‘விடுதலை’யில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை

5 கருத்துகள்:

  1. பிராம்மணன் என்பவன் பிறப்பால் பிரம்மணீயத்தை ஏற்றுக் கொண்டவன் அல்ல. ‘பிரம்மம்’ என்பது பரம்பொருளைக் குறிக்கும் சொல் . பரப்பிரம்மத்தை குறிக்கும் சொல். எவன் ஒருவன் பிரம்மத்தின் தியானத்தில் ஈடுபடுகிறானோ அவனே பிரம்மணீயத்தைத் தழுவியவன். பிரம்மணீயம் என்பது ஜாதியல்ல. அது ஒரு “நிலை“. இறையானுபவத்தில் ஈடுபடும் எவரும் அந்த நிலைக்கு தங்களை கொண்டு செல்ல பிரயத்தனப்படுபவர்கள் ஆவார்கள்.

    பூ நூல் சாதி அடையாளமல்ல. மனிதன் மேம்பட்ட அறிவை குரு வழியாக பெற்று புதிய மனிதனாகிறான். அதன் காரணமாக ஏழு வயதுக்குள் உபநயனம் செய்து பூ நூல் அனுவித்து குருவிடம் கல்வி கற்க அனுப்பினர்.
    கல்வி கற்குமுன் அறியாத பிறவியாக இருந்தவன் பின் கல்வி அறிவு பெற்ற பிறவி ஆகிறான்.
    இதை வேதம் இரு பிறப்பாளர் என கூறும்(த்விஜர்).
    இந்த சடங்கு காலப்போக்கில் சுருங்கி பிராமணர் உட்பட எல்லோருக்கும் அடையாள கயிறாகி விட்டது.


    எனவே ஸ்வபாவத்தால் ஏற்படுகின்ற தொழில் ஒன்றானாலும், சிந்தையால் ஒருவன் எப்படி வாழ்கிறான் என்பதன் மூலமே ஒருவன் உயர்ந்தவன் எனப்படுவதும், தாழ்ந்தவன் என்ப்படுவதும் ஆகும் . ஜாதி வேறுபாடுகளையும் , அவற்றின் அடிப்படையில் உயர்வு, தாழ்வுகளையும் வேதபுராணங்களில்் சொல்லவில்லை.

    பதிலளிநீக்கு
  2. விஷ்ணுவை வழிபடுவது மனித வாழ்வின் இலட்சியம் ஆகும். இதற்கான முதல் படியாக இருப்பதே வர்ணாஸ்ரம தர்மமாகும். இது மக்களுக்கு தவறான கருத்து ஏற்பட காரணம் ஆங்கிலேயர் மெக்காலே கல்வியாளர்களால் அத்தகைய கருத்துக்கள் திணிக்கப்பட்டதாகும். வர்ணாஸ்ரம தர்மம் மக்களை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்துகிறது என்னும் தவறான கருத்தினை பல தலைமுறைகளாக பிரச்சாரம் செய்த காரணத்தினால், மக்கள் இதை கண்மூடித்தனமாக எதிர்க்கின்றனர்.
    உண்மையான வர்ணாஸ்ரம தர்மம் பகவத் கீதையில் (4.13) கூறப்படுவது .

    'ஒருவனது குணத்தினையும், செயல்களையும் அடிப்படையாக வைத்து வெவ்வேறு மனிதர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.' பகவத் கீதையில் (4.13)

    அவர்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வகை வர்ணம்( சமுதாய பிரிவு ) அறியப்படுகின்றனர். இந்த பிரிவு கடவுள் உணர்வில் முன்னேறுவதற்கு பயிற்ச்சி அளிப்பதே வேத கலாச்சாரத்தின் நோக்கமாகும்.

    இந்த வர்ணாஸ்ரம பிரிவு முறை தற்போது இந்தியாவில் தலைகீழாக மாறியுள்ளது பிராமண குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் தான் பிராமணனாக ஒப்புக்கொள்ளவேண்டும் என்று ஒருவன் உரிமை கொண்டாடுகிறான். சூத்திரன் தன்னை சமுதாயத்தில் தாழ்த்தவனாக கருதி தனக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று உரிமை கொண்டாடுகிறான். ஆனால் இதை சாஸ்திரம் ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவனின் தந்தை பிராமணராக இருக்கலாம், ஆனால் அதுவே அவன் பிள்ளைக்கு பிராமணனாக மாத்திவிடுவதில்லை.

    உண்மையான வர்ணாஸ்ரம தர்மத்தில், ஒருவனின் வர்ணம் என்பது அவன் பெற்றுள்ள உண்மையான தன்மையை அடிப்படையாக கொண்டதே தவிர, பிறப்பு அல்லது கோத்திரத்தை வைத்து அல்ல. எடுத்துக்காட்டாக, ஒரு டாக்டரின் பையன் எப்படி படிக்காமல் டாக்ட்டர் அக்கா முடியாதோ அது போல, பிராமணரின் மகன் தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் இருந்தால் அவனை வேத கலாச்சாரம் பிராமனாக ஏற்பதில்லை.

    இதற்க்கு வேத சாஸ்திரங்களில் இருந்து உதாரணம் :

    1. ரிஷப தேவர் தனது 100 புதல்வர்களில் - முதல் 10 பேரை சத்திரியர்களாகவும், அடுத்த 9 பேரை பாகவத பேச்சாளர்களாகவும், மீதமுள்ள 81 புதல்வர்களை வேத வேள்விகள் செய்யும் அந்தணர்களாகவும் (பிராமணர்களாக) மாற்றினார் என்று ஸ்ரீமத் பாகவதம் ஐந்தாம் காண்டம் சொல்கிறது.

    2. அதே போல், பிராமணராக இருந்த அஜாமிளன் தனது கெட்ட நடத்தையினால் சூத்திரனாக மாறினான். - பாகவதம் 5 காண்டம்.

    3. சத்திரிய குடும்பத்திலிருந்து வந்த விசுவாமித்திரர் காலப்போக்கில் தகுதிகளை வளர்த்து கொண்டு பின்னர் பிராமணராக மாறினார்.

    4. இராவணன் பிராமண குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், அவனது அசுரர் சுபாவதினால் அவனை எவரும் ஒருபோதும் பிராமணராக ஏற்கவில்லை.

    5. ஜபல உபநிஷத்தில், ஒரு சிறுவன் வேசிக்கு பிறந்தவனாக இருந்த போதிலும், அவனிடம் பிராமண தகுதிகள் இருந்த காரணத்தினால், அவனை கௌதம முனிவர் பிராமணராக ஏற்று கொண்டார்.

    இவ்வாறு, வேத சாஸ்திரத்தில் பல இடங்களில் குணம், மற்றும் தொழிலை அடிப்படையாக வைத்து வர்ணங்கள் பிரிக்க பட்டது .

    வேத காலத்தில் பிறப்பு என்பது ஒரு அடையாளமாக எடுத்து கொள்ளபட்டதே தவிர, அதுவே நியதியாக ஏற்கப்படவில்லை. பொதுவாக வேத காலத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பவர் அக்குடும்பத்துக்குரிய குணத்துடன் இருப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் கலியுகத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், முறையான தகுதியினால் ஒருவன் பிராமணராக ஆக முடியும் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  3. மஹாபாரதத்திலிருந்து சில கூற்றுகள்..

    மஹாபாரதம் வனபர்வம் பகுதி 311-ல், யுதிஷ்டிரர் யக்ஷனிடம் மேற்கொண்ட உரையாடலைக் காண்போம்.

    யக்ஷன் யுதிஷ்டிரரிடம் வினவினார், "மன்னா, எத்தகைய பிறவி, நடத்தை, (வேத) படிப்பு அல்லது (சாஸ்திர) கல்வியினால் ஒரு மனிதன் பிராமணனாகிறான்?

    யுதிஷ்டிரர் பதிலளித்தார், "யக்ஷனே, கேள்! பிறவியோ, படிப்போ, பிராமணத் தன்மைக்குக் காரணமில்லை. நடத்தையே பிராமணத் தன்மையாகும், இஃது எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். நடத்தையைக் கெடாமல் பராமரித்தால். அவன் ஒருபோதும் கெடு நிலையை அடைவதில்லை. நான்கு வேதங்களைப் படித்தும், ஒருவன் இழிந்தவனாக இருந்தால், அவன் சூத்திரனிலிருந்து வேறுபட்டவன் அல்ல. புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவனே பிராமணன் என்று அழைக்கப்படுகிறான்."


    அதேபோல ஒருமுறை பீமன் நகுஷன் என்ற பாம்பிடம் அகப்பட்டு, அதன் உணவாக இருந்த நிலையில், பீமனை விடுவிக்கவேண்டி நகுஷனிடம் யுதிஷ்டிரர் வேண்டினார். தான் கேட்கும் கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதிலளித்தால் பீமனை விடுவிப்பதாக நகுஷன் கூறினான். அவ்வுரையாடலில்,

    ஒரு சூத்திரன் பிறப்பால் மட்டுமே சூத்திரன் அல்ல என்றும், அதேபோல ஒரு பிராமணனும் பிறப்பால் மட்டுமே பிராமணன் அல்ல என்றும், யாரிடம் பிராமணருக்குரிய குணங்கள் இருக்கின்றனவோ அவரே பிராமணர் என்று ஞானமுள்ளோர் கூறியிருப்பதாகவும், யுதிஷ்டிரர் தனது முன்னவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நகுஷனிடம் பதிலளித்தார்.(வனபர்வம் பகுதி 83)


    மேலும், மஹாபாரதத்தின் வனபர்வம் பகுதி 211-ல் தர்மவியாதன் என்ற வேடனை கௌசிகர் அணுகி நுட்பமான விஷயங்கள் குறித்து கேட்டறிந்தபோது, வேடன் பின்வருமாறு கூறலானான்:

    "ஒரு மனிதன் சூத்திர ஜாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நற்குணங்களைக் கொண்டிருந்தால், வைசிய நிலையையும் சத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். மேலும், அவன் நேர்மையில் உறுதியாக இருந்தால், பிராமணராக ஆகலாம்."

    மேலும், மனு சட்டத்திலும் ஒரு வசனம் ...

    ‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
    க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’

    அதாவது – ‘சூத்திரன் பிராமணனாகி விடலாம்; பிராமணனும் சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும், மகள்களும் வேறு வர்ணத்தை அடையலாம்’. அவர்கள் வேதம் ஓதும் பிராமணர்கள் கூட ஆகலாம் என்று சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  4. வர்ணம் என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல...
    எவர் வேண்டுமானாலும் பிராமணராக இயலும்...
    அதற்குரிய பல உதாரணங்கள் புராணங்களிலும் நிகழ்காலத்திலும் உள்ளன..
    அவற்றை காண்போம்...

    *புராணங்களில்*

    வேதங்களை எழுதியவர் மீனவருக்கு பிறந்த வியாசர், இவர் தான் மகாபாரதம்,கீதை எழுதியது,
    ராமாயணத்தை எழுதியது ஒரு வேடனான வால்மீகி,
    பிராமணர்களால் தினமும் கூறும் காயத்திரி மந்திரம் சொன்னது விசுவாமித்திரர் என்கிற சத்திரிய அரசன்,

    மேலும்,கௌசிகர்,ஜாம்பூகர், கௌதமர், வசிஷ்டர்,அகஸ்த்தியர் போன்ற ரிஷிகள், மஹா அதர்வண சத்யகாம ஜாபாலா என்ற வேத கால அறிஞர்போன்றோர் பிராமணனுக்கு பிறக்கவில்லை.

    *நிகழ்காலத்தில்*

    🕉குருக்கள் இனம் சைவ வேளாளரில் இருந்து உருவாக்கப் பட்டது. இன்றைக்கு குருக்கள் பிராமணர்களாகவே அறியப்படுகின்றனர்

    🕉பட்டு நூல் நெசவு தொழிலாளிகளை கொண்டு உருவாக்கப் பட்ட சமூகம் "சௌராஷ்டிர பிராமணர்"

    🕉தாழ்த்தப் பட்டவர்களுக்கு சமாஸ்ரயணம் கொடுத்து உருவாக்கப் பட்டவர்கள் தென்கலை ஐயங்கார்கள்

    🕉தாழ்த்தப்பட்டவர்களில் இருந்து உருவாக்கப் பட்டவர்கள் "சாத்தாணி" என்று அழைக்கப்படும் பிராமண பிரிவு

    🕉கலப்பு இனமாக உருவாக்கப் பட்டது வட தேசத்து "மிஸ்ரா" பிராமணர்கள்

    🕉வட தேசத்து பண்டாரங்களில் இருந்து உருவாக்கப் பட்டது "பண்டா" என்னும் பிராமண பிரிவு

    🕉சோழிய வேளாளரில் இருந்து உருாக்கப் பட்டது "சோழியர்" என்னும் பிராமண பிரிவு

    விஜய நகர சாம்ராஜ்யம் உதயமான பிறகு வடுக பிராமணரின் தூண்டுதலால் பிராமணராக்குதல் தடை செய்யப் பட்டது. ஐநூறு வருடங்களாக ஏதும் முன்னேற்றம் இல்லை☹

    ஆனால் *கடந்த ஐம்பது வருடங்களாக புது முன்னேற்றம்* 🙂

    🕉ஆரிய சமாஜத்தில் *ஜாதி வித்யாஸமில்லாமல் எல்லோருக்கும் பூணூல் போட்டு வேதம்* சொல்லி கொடுக்கின்றனர். இந்த சமூகம் "ஆர்யா" என்று அழைக்கப் படுகிறது

    🕉ISKCON ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் *ஜாதி பேதமின்றி தீட்சை* வழங்கப் படும். முதல் தீட்சை வைஷ்ணவ தீட்சை. அடுத்த தீட்சை பிராமண தீட்சை.

    🕉கௌடிய மடத்தில் *ஜாதி பேதமில்லாமல் பிராமண தீட்சை* வழங்கப் படுகிறது

    🕉பிள்ளையார் பட்டி கிராமத்தில் பிச்சை குருக்கள் நடத்தும் வேத பாட சாலையில் *ஜாதி வித்யாஸம் பார்க்காமல் குழந்தைகள் சேர்க்கப் பட்டு பூணூல் அணிவிக்கப் பட்டு வேதம்* பயில்கின்றனர். சில வருஷ வேத ஆகம பயிற்சிக்கு பிறகு "சிவாச்சாரியார்" பட்டம் வழங்கப் படுகிறது.

    பதிலளிநீக்கு

  5. சிவமயம்.
    திருச்சிற்றம்பலம்.

    " அஹம் ப்ரம்மாஸ்மி"
    " தத்துவம்அஸி"
    போன்ற மஹாவாக்கியங்கள் தன்னை அறிந்தவன் தத்துவஞானி என்கிறது.ஒருவன் தன்னையும் அறிந்து தர்மம் போதிக்கும் நெறிமுறைகளை கடைபிடித்து வந்தால் அவனே பிராமணன்.
    சிவசிவ.

    பதிலளிநீக்கு