செவ்வாய், 13 ஜூன், 2017

பெண்களைக் கேவலப்படுத்தும் இந்து மதம்


(மனுதர்மம் கூறும் இழிக் குப்பைகள் இங்கே... இங்கே... ஆதாரத்தோடு)
மனுதர்மம் என்ன கூறுகிறது?
இதோ.....
சுலோகம்: அத்தியாயம் 5
147) பாலியமாகவிருந்தாலும், யௌவனமாக இருந் தாலும், வார்த்திபமாகவிருந்தாலும் ஸ்திரிகள் தன்றன் வீடுகளிலும் தன் மனம் போனபடி ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது.
148)       பாலியத்தில் தகப்பன் ஆஞ்ஞையிலும், யௌ வனத்தில் கணவன் ஆஞ்ஞையிலும், கணவனிறந்த பின்பு பிள்ளைகள் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டி யதே  யல்லது ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக்கூடாது.
154)       கணவன் துர்ராச்சாரமுள்ளவனாகவிருந்தா லும், அந்நிய ஸ்திரி லோலனாயிருந்தாலும், நற்குண மில்லா தவனாயிருந்தாலும் பதிவிரதையான  ஸ்திரியா னவள் அவனை தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது.
162)       ஸ்திரிக்குத் தன் கணவனைவிட மற்றொரு வனால் உண்டாக்கப்பட்ட பிள்ளையும் சாஸ்திரத் தினாலொப்புக் கொள்ளப்பட்ட பிள்ளையன்று. உண்டு பண்ணுகிறவனுக்கும் உபயோகமில்லை. பதிவிரதா ஸ்திரிகளுக்கு இரண்டாவது விவாகமும் ஒரு சாஸ்த்திரத்திலுஞ் சொல்லப்படவில்லை.
163)       தாழ்ந்தவனான தன் புருஷனை நீக்கி உயர்ந்த வனான மற்றொருவனை எந்த ஸ்திரியடைகிறாளோ அவள் நிந்திக்கப்படுவாள். மற்றொருவனோடு சேர்ந்தவளென்றுஞ் சொல்லப்படுகிறாள். ஒருவராலும் கொண்டாடப்பட மாட்டாள்.
164)       ஸ்திரி விபச்சாரஞ் செய்கிறதினால் உலகத்தில் நிந்திக்கப்படுகிறதுமல்லாமல் இறந்த பின் குள்ளநரியாகவும் பிறந்து வெண்குட்டம் முதலிய கர்ம வியாதியையும் அனுபவிக்கிறாள்.
ஒன்பதாவது அத்தியாயம்
14)          மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத் தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள்.
15)          மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், நண்பின்மையும், இயற்கையாகவுடைய வராதலால் கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்.
17)          படுக்கை, ஆசன அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
18)          மாதர்களுக்கு ஜாதகர்ம முதலியவை மந்திரத்தோடு கிடையாது. மனச்சுத்தியுங் கிடையாது. பாவத்தைப் போக்குகிற மந்திரோபதேசமுமில்லை. ஆகையால் அபரிசுத் தாளாயிருக்கிறார்கள்.
19)          மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷ முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங் களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்கு திருஷ் டாந்திரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதியில் சொல்லிய பிரயாச் சித்தத்தைத் கேளுங்கள்.
30)          கணவன் சொற்படி நடவாதவள் உலகத் தாரால் நிந்திக்கப்பட்டு நரியாய்ப் பிறந்து பாவப் பிணியால் வருந்துவாள்.
46)          கணவன் மனையாளைத் தள்ளிவிட்டாலும், விற்றாலும் அந்த மனையாள் தன்மை அவளை விட்டு நீங்காது. இப்படி இவர்களுக்கு பிரமன் சிருஷ்டி காலத்திலேயே ஏற்படுத்தியிருக்கிற சாசுவதமான தருமத்தை நாமறிந்திருக்கிறோம். ஆதலாலிவ்விதமான பிறன் மனையாளிடத்தில் பிறந்த பிள்ளையும் உபயோகப்படமாட்டான்.
60)          ஒருவனுக்கு நிலமில்லாமல் வித்துள்ளவனா யிருந்தால் மற்றுமொருவனையடைந்து உன்னிலத்தில் நான் பயிரிடுகிறேன். அப்பயிர் நம்மிருவருக்கும் பொதுவாயிருக்கட்டுமென்று ஏற்பாடு செய்து கொண்டு பயிரிடுகிறார்ப்போல் ஒருவன் மனை யாளிடத்தில் மனையாளில்லாத  மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம். அந்த வேற்பாடு இல்லாவிட்டால் உடையவனைச் சாருமென்பது பிரத் திய கூலமாகவே யிருக்கிறது. ஏனெனில் பிஜத்தை விட நிலமுயர்ந்த நல்ல விஷயத்தைப் போல் மாதர் விஷயத்திலும், கணவனும் மற்றொருவனும், பயிரைக் குறித்தாற்போல் புத்திரவுற்பத்தியைக் குறிக்கும் ஏற்பாடு செய்து கொண்டால் அதில் விளைகிற தானியம்போல் பிறந்த பிள்ளையும் இருவருக்கும் சொந்தமாகவிருப் பதை உலகத்திற் கண்டிருக்கிறோம்.
59)          பிள்ளையில்லாமல் அந்தக்குலம் நசிக்கிறதாக விருந்தால் அப்போதந்த ஸ்திரி தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழுதலை முறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல் லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம்.
60)          விதவையிடத்தில் பெரியோர்களின் அனு மதிப் பெற்றுக் கொண்டு புணரப்போகிறவன் தன் தேகமெங்கும் நெய்யைப் பூசிக்கொண்டு இரவில் இருட்டான இடத்தில் அவளைப் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டுபண்ண வேண்டியது. இரண்டாம் பிள்ளையை ஒரு போதும் உண்டு பண்ணக்கூடாது.
69)          ஒரு பெண்ணை ஒருவனுக்குக் கொடுக்கிறதா உண்மையாக வாக்குத்தானம் செய்த பின் அந்த வான் இறந்துபோனால் அவன் தம்பி அல்லது அண்ணன் விவாகம் செய்து மேற்சொல்லும் விதிப்படி இருக்க வேண்டியது.
70)          அவனந்தப் பெண்ணை விதிப்படி விவாகஞ் செய்து வெள்ளை வஸ்திரமுடையவளாயும், திரிகரண சுத்தியுடையவளாயு மிருக்கச் செய்து, ருதுஸ்நாள மானவுடன் ஒரு நாள் புணர்ந்து மறுபடி ருதுகாலம் வனாயிற் பார்த்து கருப்பமுண்டாகாவிடில் கருப்பமுண் டாகிறவரையில் அந்தந்த ருதுஸ்நானமானவுடன் ஒவ்வோர் நாள் புணர வேண்டியது.
77)          கணவனை மனைவி பகைத்தால் அவன் ஒரு வருஷம் வரையிலும் பார்த்து அவள் வணங்காவிடில் அவளுக்குத் தான் கொடுத்த ஆடையாபரணம் முதலியவற்றை வாங்கிக் கொண்டு  அவளோடு பேசுதலும், புணர்தலும் ஒழிக்க ஜீவனத்துக்காகக் கொடுத்தது கலாத் தக்கதன்று.
78)          கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடிய னாகவிருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், அவ னுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யா விட்டால் அவனுக்கு அலங்காரம் வஸ்த்திரம் படுக்கை இவைகளைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது.
81)          மலடியான மனைவியை எட்டு வருஷத்திற்கு மேலும், சாப்பிள்ளை பெறுபவளை பத்து வருஷத் திற்கு மேலும், பெண்ணையே பெறுபவளை பதினொரு வருஷத்திற்கு மேலும், தீங்கு சொல்பவளை அப்பொழு தேயும் நீக்கி வேறு விவாகம் செய்து கொள்க. இந்த மனைவியர்களுக்கு மனமகிழ்ச்சிப் பொருள் கொடுக்க வேண்டியதில்லை.
88)          குலம், நல்லொழுக்கம் இவைகளாலுயர்ந்தவ னாயும், பெண்ணுக்குத் தக்க ரூபமுள்ளவனாயும், தன் ஜாதிக்குத் தக்க ஜாதியுள்ளவனாயுமிருக்கிறவானுக்கு தனது பெண் எட்டு வயதுக்குட்பட்டிருந்தாலும், விதிப்படி விவாகம் செய்து கொடுத்து விடலாம்.
94)          முப்பது வயதுள்ளவரன் அழகான பன்னி ரெண்டு வயதுள்ள பெண்ணையும், இருபத்திநாலு வயதுள்ள பெண்ணையும், இருபத்திநாலு வயதுள்ள வரன் எட்டு வயது பெண்ணையும் விவாகம் செய்து கொள்ளலாம். இதற்கு முன் விவாகம் செய்து கொள்ள அவசரப்பட்டால் வேதமோதல் முதலிய தர்ம காரியம் கெடும். அதனால் பின்பு துக்கப்படுவான்.
பாரதத்தில் பெண்ணடிமைக் கருத்துகள்
பெண்கள் பாப ஜென்மங்கள், அவர்களுக்கு ஒழுக் கம் கிடையாது. பாதுகாக்கும் அளவுக்குத்தான் அவர்களிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்.
“மத்தளம், சூத்திரர், விலங்குகள், பெண்கள் தண்டிக் கப்பட வேண்டியவர்கள்”. இராமன், சுந்தரகாண்டம்.
1. அஸ்வமேதிக பர்வம், அத்யாயம் - 99
புகழ் பெற்ற உத்தமி (பக்கம் 282)
ருதுவாதற்கு முன் பிராம்மம் முதலான விவாஹங் களுள் (ஒன்றால்) விதிப்படி விவாஹம் செய்யப்பட்ட வளுமான கன்னிகையானவள் புகழ் பெற்ற உத்தமியாவாள்.
2. குருதாரம், பரதாரத்தைப் புணருதல்
வியாசர் - தருமருக்கு
சாந்தி பர்வம் - அத்தியாயம் 83, பக்கம் 12-113
குருவின் கட்டளைப்படி குருதாரத்தைச் சேருவதால் மனிதன் குற்றமுள்ளவனாக மாட்டான்.
தமையன் பதிதனாகவும், ஸந்யாசியாகவும் போய் விட்டால் தம்பிக்கு பாரிவித்தியமென்னும் தோஷ மாகாது. தர்மநிமித்தம் ஸ்திரிகளின் வேண்டுகோளின்படி அவர்களைச் சேருதல் பரதாரத்தைச் சேர்ந்த பாவமாகாது.
3. பெண் உரிமை மறுத்தல்
ஆதிபர்வம் - அத்யாயம் 94, பக்கம் 341
சகுந்தலை
இளமையில் பிதா காப்பாற்றுகிறான். பருவகாலத்தில் கொழுநன் காப்பாற்றுகிறான். முதிர்ந்த பிராயத்தில் புத்திரன் காப்பாற்றுகிறான். ஸ்திரி ஸ்வந்திரமாய் இருக்கத்தக்கவள் அல்லள்.
4. பெண்கள் உறவினர்களிடம்
நெடுங்காலம் வசிக்கலாகாது
ஆதிபர்வம் - அத்யாயம் 96, பக்கம் 352
சகுந்தலை
பெண்கள் தம்மைச் சேர்ந்த உறவினர்களிடம் நெடுங்காலம் வஸிப்பது புகழையும் ஒழுக்கத்தையும் தர்மத்தையும் கெடுக்கும். அதில் எனக்கு இஷ்ட மில்லை (உடன்பாடில்லை).
5. துஷ்யந்தன் பெண்களை ஏசியது
ஆதிபர்வம் - அத்யாயம் 98, பக்கம் 365
உலகத்தில் பெண்களனைவரும் கொடியவர்கள்; காமத்தை முக்கியமாகக் கொண்டவர்கள். எல்லாப் பெண்களும் அயலாருக்குட்படுகிறவர்கள். எல்லாரும் கோபத்தை மேற்கொண்டவர்கள். பெண்களெல்லாரும் பொய் சொல்லுகிறவர்கள். கண்ணுவரைப்பற்றி நீ பேசத்தகாது. உன் தாயாராகிய மேனகை தயை யற்றவள் வியபிசாரி அவள் உன்னை இமயமலைச் சரிவில் நிர்மாலியத்தைப்போல் எறிந்துவிட்டாள் அல்லவா?
நிர்மாலியம் = தேவதைகள் பூஜித்து கழித்த பொருள் - குப்பை
6. பாண்டு குந்திக்குக் கூறிய (அ)தர்மம்
ஆதிபர்வம் - அத்யாயம் 128 பக்கம் 469-470)
ராஜபுத்திரியே! பதிவ்ரதையே! ஒவ்வொரு ருதுகாலங் களில் மட்டும் ஸ்திரி கணவனை மீறி நடக்கக் கூடா தென்பதே தர்மமென்றும், மற்ற காலங்கள் எல்லாவற் றிலும் பெண் தன் இஷ்டப்படி நடப்பதற் குரியவளென் றும் தர்மந்தெரிந்தவர்கள் அறிகின்றனர். ஸாது ஜனங்கள் இவ்வாறாகவே பழைய காலத்துத் வதர்ம மிருப்பதாக நிச்சயித்திருக்கின்றனர். ராஜபுத்திரியே! தர்மமோ அதர்மமோ எதைப் பாரியைக்குப் பர்த்தா சொல்வதோ அதை அவள் செய்ய வேண்டுமென்று வேதந்தெரிந்தவர்கள் நிச்சயித்திருக்கின்றனர்.
என் கட்டளையினால் தவத்திற் சிறந்த பிராம் மணனைக்கொண்டு குணங்கள் நிரம்பின புத்திரங்களை உண்டாக்கிக் கொள்வதற்கு உரியவளாகிறாய்!
ஸாது ஜனம்: பார்ப்பனர்
7. புருஷனில்லா ஸ்திரி
கணவனுக்கு முன் இறக்கும் பெண்
ஆதிபர்வம் - அத்யாயம் 172, பக்கம் 641-642
தரையிற் போடப்பட்ட மாம்ஸத்தைப் பறவைகள் எவ்வாறு விரும்புகின்றனவோ அவ்வாறே புருஷனில் லாத ஸ்திரியை எல்லா ஜனங்களும் விரும்புகின்றனர். பிராமணோத்தமரே! புருஷனில்லாமல் கெட்டவர்களால் விரும்பப்பட்டு மனம் தடுமாறும்படி செய்யப்பட்ட நான் ஸாதுஜனங்கள் ஒப்பினமார்க்கத்தில் நிற்கச் சக்தியுள்ள வளாக மாட்டேன். நாதரே! துஷ்டஜனங்கள் (கெட்ட) மிகுந்த இவ்வுலகத்தில் பெண் ஜன்மம் இழிவானது. கன்னிகையாயிருக்கும் போது தாய் தந்தையர் வசத்திலும், விவாகமானபின் (திருமணம்) பர்த்தாவின் வசத்திலும், இவர்களில்லாதபோது புத்திரன் வசத்திலும் இருக்கவேண்டும். ஸ்வதந்திரையான ஸ்திரி இகழப் பட்டவள். நெய்யில் நனைக்கப்பட்ட வஸ்திரத்துண்டு நாய்களால் எப்படியிழுக்கப் படுகிறதோ அப்படி பெண்களுக்கு நாதனில்லாமலிருப்பது (கணவன்) துஷ்டர்களுக்கு (கெட்டவர்) வாயில் திறந்துவிட்டது போல் அல்லவா?
ஓ! பிராமணரே! கணவனுக்குமுன் பரலோகமடைவது புத்ரனுள்ள ஸ்திரிகளுக்குப் பெரும்பாக்கிய மென்று தர்சாஸ்திரஜ்ஞர்கள் அறிகின்றனர். இவ்வுலகத்தில் புத்திரர்கள் வசத்தில் திரிவது விரும்பத்தக்கதன்று. எவள் மஞ்சள், மை, புஷ்பம்பூ முதலிய ஸ்மங்கலி லக்ஷ ணங்களோடு கூடியவளாயிருந்து பர்த்தாவின் பாதங் களில் மனம் வைத்து அவன் கொடுத்த தர்ப்பண ஜலத் தைப் பானஞ்செய்பவளாகப் பர்த்தா முன்னிலையில் மரணமடைகிறாளோ அவள் பார்வதிலோகத்தை அடைகிறாள். பார்வதிக்குத் தோழியாயிருந்து அந்தப் பர்வதராஜ கன்னிகையுடன் கூட மகிழ்ந்திருக்கிறாள்.
கீதை என்ன சொல்லுகிறது?
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் (Born out of the womb of sin) “மாம் ஹி பார்த்த வ்யாபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு: பாப-யோனய: ஸத்ரியோ வைச்யாஸ்-ததா சூத்ராஸ்-தே பி யாந்தி பராங்கதிம்”
(அத். 9 - சுலோகம் 32)
இந்துமதத்தில் பெண்கள் நிலை
* ஒரு கணவன் தன் மனைவியைத் தனக்குத் தொண்டு செய்யவும், பிள்ளைகளைப் பெறவும் கடவுளால் கொடுக்கப்பட்டவள் என்று அதர்வன வேதத்தில் உள்ள ஒரு பாட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
* மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே-காம வேட் கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள் என்று உபநிஷதர்கள் நினைத்து வந்திருக்கிறார்கள்.
* பெண்ணாய்ப் பிறப்பதைவிட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை. எல்லாக் கேடுகளுக்கும் வேர் பெண்களே.
- பாரதம், அனுசான்ய பருவம்.
பெண்ணைவிடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்பு போன்றவள்; பெண் மாய்கை (வஞ்சக) குணமுள்ளவள், க்ஷவரக்கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.
ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர் களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்.
- பாகவத ஸ்கந்தம் 4-14-42.
இப்பொழுது சொல்லுங்கள் - பெண்களைக் கேவலப்படுத்தும், இழிவுப்படுத்தும் இந்த இந்து மத சாஸ்திரங்களை எரிக்கவேண்டுமா - வேண்டாமா?
- தொகுப்பு : மின்சாரம்
-விடுதலை ஞா.ம.,11.2.17


திங்கள், 24 ஏப்ரல், 2017

இதுதான் மனுநீதி


ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான்
இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவனாக விளங் கியவன் சுந்தர சோழன். இவன் கி.பி 957 முதல் கி.பி. 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டான். இவன் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும் ஆவான். தனது முன்னோர் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவன் இவன். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டான். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினான். இவரு டைய மூத்த மகனும் பட்டத்து இளவர சனுமாகிய ஆதித்த கரிகால சோழன் கொலை செய்யப்பட்டார். இக்கொலை குறித்து உடையார் குடி கல்வெட்டு கூறும் செய்தியில்
உடையார் குடி கல்வெட்டுக்களில் ஆதித்த சோழனின் கொலையாளி களின் பெயர்கள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப் பட்டுள்ளன.
சோமன்

இவன் தம்பி ரவிதாசன் பிரம்மாதி ராஜன் இவன் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன் இவன் தம்பி பரமேசுவரன் ஆனால் சோழநாட்டுப் பிரஜை இவர்கள். உடன் பிறந்த மலையனு ரானும் இவன் பெயர் மலையனூரன பார்ப்பனச்சேரி ரேவதாச கிரமவித் தனும் இவன் மகனும் இவன் தாய்பெரிய நங்கைச் சாணியும்

இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களும் ராமத்ததம் பேரப்பன் மாரும்

இவர்களுக்கு பிள்ளைக் கொடுத்த மாமன் மாரிடும் இவர்கள் உடன் பிறந்த பெண்களை வேட்டரினவும் இவர்கள் மக்களை வேட்டரினவும் ஆக
இவ்வனைவரும் கொலையில் தொடர்புடையவர்கள் என இக்கல் வெட்டு கூறுகிறது. இவர்களுடைய நிலத்தைப் பறிமுதல் செய்துவிடுமாறு ராஜராஜ சோழன் முன்பு உத்தரவு இட்டதை இந்த கல்வெட்டு சுட்டுகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தை அல்லது நிலத்தின் ஒரு பகு தியை வெண்ணையூருடையார் பரதன் என்னும் விஜய மல்லன் என்பவன் 115 பொன்னுக்கு வாங்கி அதை திருவனந் தீஸ்வரர் பட்டாரகர் கோவில் பார்ப்பனர் களுக்கு உணவு கொடுப்பதற்கு கொடை யாக வழங்கினான் என தெளிவாக இக்கல்வெட்டு கூறும் செய்தியாகும் கொலைசெய்த அனைவரும் பார்ப்பனர் என்பதற்காக ராஜராஜ சோழன் கொலை யாளிகளைத் தண்டிக்கவில்லை என்ற செய்தியும் இதில் அடங்கியுள்ளது. கொன்றவர்கள் அனைவரும் பார்ப்ப னர்களே அவர்களில் பாண்டிய நாட் டைச் சேர்ந்தவர்கள் இருவர் மீதிப்பேர் சோழ நாட்டை சேர்ந்தவர்கள். பாண் டிய மன்னன் தலையைக் கொய்ததற்கு சோழ நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர்கள் ஏன் சினம் கொள்ளவேண்டும்? பார்ப் பனர்களுக்கு நாட்டுப்பற்றை விட ஜாதிப்பற்று அதிகம் என்பது இங்கு தெரியவரும் மற்றுமொரு செய்தியாகும்.

-விடுதலை ஞா.ம.,22.4.17

திங்கள், 3 ஏப்ரல், 2017

சங்க இலக்கியங்களில் வைதீக எதிர்ப்பு

பிற ஏடுகளிலிருந்து...

சங்க இலக்கியங்களில் வைதீக எதிர்ப்பு

அவைதிகம் என்பதற்கு வைதிகம் அல்லாதது என்று பொருள். வைதிகம் என்றால் வேதங்கள் மற்றும் அவற்றின் பக்கவிளைவுகளான உபநிடதங்கள், புராணங்கள், மந்திர தந்திரங்கள் உள்ளிட்ட மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் உண்மை என சாதிப்பது. அவைதிகம் என்பது இவற்றை யெல்லாம் நிராகரிப்பது. சுருங்கச் சொன்னால் நாத்திகம் என்பதே அவைதிகம் எனப்படும். இதற்கு சான்றாகச் சிலர் அளித்துள்ள விளக்கங்களைக் காணலாம். தத்துவ ஆய்வறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா ‘‘இந்திய நாத்திகம்’’ என்ற நூலில் இவ்வாறு விளக்கம் தருகிறார். உலகாயதம் சாருவாகம் ஆகியவற்றின் பொருண்மை நாத்திக வாதமே ஆகும். இவற்றோடு சாங்கியம், புத்தம். சமணம். மீமாம்சம். நியாயவைசேசிகம் ஆகியவையும் கீழ்காண்பவற்றை மய்யக் கருத்துக்களாக கொண்டிருந்தன.

1.வேத வேள்விகளையும் வருணாசிரமங்களையும் பல கடவுள் வழிபாட்டையும் மறுத்தன.

2.உபநிடதங்கள் உரைக்கும் ஒரு கடவுளுண்மை வாதத்தையும் உடன்படவில்லை.

3.வேதங்கள் விளம்பும் இயற்கைச் சக்திகளுக்கும் உபநிடதங்கள் உரைக்கும் பரம்பொருளுக்கும் பதிலாக அண்ட அமைப்பியல் நியதிகளை வரையறுத்தன.

4.இயற்கை இறந்த ஆற்றல்களைப் புறக்கணித்தன.

5.அண்டத்தில் இயற்கை விதியின் ஆட்சியை மதித்தன. உடன்பாட்டு முறையில் நோக்கினால் அவைதிக அல்லது நாத்திக தத்துவங்கள் அமைப்பியல் நியதிகளை வரையறுத்தன; அண்டத்தின் இயற்கை விதியின் ஆட்சியை மதித்தன. செயற்கையாக முன் வைக்கப்பட்ட கடவுள் , இயற்கை கடந்த ஆற்றல் இன்ன பிறவற்றை அவை ஏற்க மறுத்தன என்கிறார் சட்டோபத்யாயா. நாத்திகம் குறித்த தந்தை பெரியாரின் கருத்தும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

‘‘இன்றைய தினம் நாத்திகன் என்ற பதத்திற்குக் கடவுளை இல்லை யென்பவன் என்றாக்கிவிட்டார்கள். தர்க்கரீதியில் புத்தியை உபயோகப்படுத்தி விஷயத்தை ஆராய்ச்சி செய்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் நாத்திகன் தான்’’ என்கிறார் பெரியார்.

தனது கருத்துக்கு ஆதரவாக அவர் பவுத்தம், புத்தம் என்ற சொற்களுக்கான விளக்கத்தை முன்வைக்கிறார். ‘‘சொந்த புத்தியைக் கொண்டு வேத சாஸ்திரங்களைத் தர்க்கம் செய்பவன் நாத்திகன். அப்படிப்பட்ட புத்தியை உபயோகப்படுத்துகிறவன் புத்தன்.’’ அபிதான சிந்தாமணி, என்சைக்கிளோபீடியா ஆகிய நூல்களில் பவுத்தம் என்பதற்குப் ‘‘புத்தியைக் கொண்டு - அறிவைக்கொண்டு பார்ப்பவர்கள்; கண்மூடித்தனமாக நம்பாதவர்கள்’’ என்றே பொருள் சொல்லியிருக்கிறார்கள் (பெரியார் களஞ்சியம்  தொகுதி 4 பக்கம்: 236) இந்திய தத்துவக் களஞ்சியம் என்ற நூலில் முனைவர் சோ.நா. கந்தசாமி அவர்கள்நாத்திகம் என்பதற்கு அளித்துள்ள சில விளக்கங்களையும் காணல் நன்று. ‘‘பாணினி இலக்கண விதிக்கு (எ - 460)பதஞ்சலி செய்த மாபாடியத்திற்கு விளக்கவுரை எழுதிய சாயாதித்தர் ஆத்திகர்  பரலோகத்தை உடன்பட்டவர்; நாத்திகர்  அதனை நம்பாதவர்’’ என்று விளக்கம் கூறினார்.மனு, நாத்திகரை விளக்கும் பொழுது ‘‘வேதக்கொள்கைகளை நிந்தனை புரிபவர்’’ என்று குறித்துள்ளார்.

‘‘சுக்கிர நீதியில் கற்பதற்குரிய கலைகளில்’’ நாத்திக சாத்திரமும் ஒன்றாக எண்ணப்பட்டுள்ளது. இச்சாத்திரம் சுபாவ வாதத்தைக் கூறுவதுடன் தருக்க வாதங்களை வலிமையாகக் கொண்டது. வேதங்களையும் கடவுளையும் மறுத்துரைப்பது. இந்த விளக்கங்கள் வழி நாம் ஒரு முடிவுக்கு வரலாம் பொதுவாக நாத்திகம் என்பதுகடவுள் மறுப்பு என்று சொல்லப் பட்டாலும் வேத மறுப்பு மேலுலக மறுப்பு. சடங்கு மறுப்பு போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும். இந்தப் புரிதலை அடியொற்றி செவ்வியல் இலக்கியங்களில் நாத்திக அல்லது அவைதிக மரபுகள் பதிவாகியிருப்பதைக் கண்டுகாட்ட முற்படுவதே கட்டுரையின் நோக்கமாகும். செவ்வியல் இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் அய்ம்பெரும் காப்பியங்கள் அய்ஞ்சிறு காப்பியங்கள் ஆகியவற்றுக்கெல்லாம் ஆதி நூலாக விளங்குவது தமிழுக்கான இலக்கணத்தை மொழியியல், வாழ்வியல் அடிப்படையில் கூறும் தொல்காப்பியம் ஆகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட இவ்விலக்கண நூல் உலகத்து உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டவை என்கிற அடிப்படை வைதிக மரபை ஏற்கவில்லை. மாறாக உயிர்களின் பரிணாம வளர்ச்சி என்கிற அறிவியலுக்கு முன்னுரை எழுதியுள்ளது. ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிர் வரையிலான வகைப்பாட்டினைத் தொல்காப்பியம் எடுத்துரைக்கிறது.

ஒன்றறிவதுவே உற்றறிவதுமே இரண்டறிவதுவே அத னொடு நாவேமூன்றறிவதுவே அவற்றொடு முக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே அய்ந்தறிவதுவே அவற்றொடு செவியே ஆறறிவதுவே அவற்றொடு மனனேநேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே!’’

(தொல், பொருள். மரபியல்நூற்பா 27) பொதுவான உயிர் வகைமைகளைக் கூறி நிறுத்தாமல்

புல்லும் மரனும் ஓரறிவினவே

நந்தும் முரலும் ஈரறிவினவே

சிதலும் எறும்பும் மூவறிவினவே

நண்டும் தும்பியும் நான்கறிவினவே

மாவும் மாக்களும் அய்யறிவினவே

மக்கள் தாமே ஆறறிவுயிரே

(தொல். பொருள் மரபியல் நூற்பாக்கள் 28 - 33)

என்று விளக்கம் தருகிறது. ஒருசெல் தாவரங்களிலிருந்தே பரிணாம வளர்ச்சி துவங்குகிறது. இதன் இறுதி வடிவமே மனிதன் என்று அறிவியல் கூறுவதன் முன்னோட்டம் போலவே தொல்காப்பிய நூற்பாக்கள் அமைந்துள்ளன. உலகின் உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டவை என்ற ஒற்றை வரியோடு நின்றிருந்தால் தொல்காப்பியம் வைதிகத்தின் வழிப்பட்டதாகி இருக்கும். அதிலிருந்து விலகி நிற்பதால் தமிழர்களின் அவைதிக மரபுக்குத் தொல்காப்பியம் வழி திறந்திருக்கிறது எனலாம்.அது மட்டுமல்ல. உலகத்தைப் படைத்தது கடவுள் அல்ல என்பதான கருத்தையும் தொல்காப்பியம் முன்வைக்கிறது.

‘‘நிலம், தீ, நீர், வளி, விசும்பொடு அய்ந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆகலின்’’ (தொல். பொருள் நூற்பா 635) தொல்காப்பியத்தைப் பின்பற்றுவது போன்ற கருத்துக்கள் புறநானூறு தொகை நூலிலும் காணப்படுகின்றன.மன்னனைப் புகழ்ந்து பாடுவதென்ற பெயரால் தங்களின் கோட்பாட்டு சார்பு நிலையைப் புலவர்கள் சொல்வார்கள். இவ்வகையில் உறையூர் முதுக்கண்ணன் சாத்தனர் சோழன் நலங்கிள்ளி யின் குணநலன்களைக் கூறுவதுபோல உலகின் அய்ம் பூதத்தியற்கையைப் பதிவுசெய்கிறார்.

மண்திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

ஒளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

அய்ம்பெரும் பூதத்து இயற்கைபோல

(புறநானூறு - 2)

மன்னனின் குணங்கள் இருந்ததாகக் கூறுகிறார் புலவர்.ஆரம்பத்தில் உலகாயதர் என்றும் பின்னர்சாருவாகர் என்றும் அறியப்பட்ட ஆதிச் சிந்தனையாளர்களில் ஒரு பிரிவினர் முன்வைத்த இயற்பண்பு (ஸ்வாபம்) வாதத்தை இந்தப் பாடலில் காணமுடிகிறது.இப்புலவரின் இன்னொரு பாடலும் வானியலை அளந்து கூறுவதாக இருக்கிறது.

செஞ்ஞாயிற்றுச் செலவும்

அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்

பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

வளிதிரிதரு திசையும்

வறிது நிலைஇய காயமும் என்றிவை

சென்று அளந்து அறிந்தோர் போல என்றும்

இனைத்து என்போரும் உளரே

(புறநானூறு - 30)

‘‘செஞ்ஞாயிற்றுச் செலவும்அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவைசென்று அளந்து அறிந்தோர் போல என்றும் இனைத்து என்போரும் உளரே’’ (புறநானூறு - 30)

ஞாயிறு எனும் சூரியனின் பயணம், அதனைச் சூழ்ந்த மண்டலம், (பிறகோள்கள்) காற்றின் திசை, காற்றே இல்லாத ஆகாயம் என இவற்றையெல்லாம் நேரில் சென்று அளந்தது போல கணித்துச் சொல்வோரும் உள்ளனர் என்பது இப்பாடலின் கருத்தாகும். ஞாயிற்றின் மண்டிலம் என்ற அறிவியல் முன்னோட்டத்தை மேம்படுத்த மறந்ததாலும்  வைதிகக் கருத்தாளர்கள் மறைத்ததாலும், நவக் கிரகங்களைச் சுற்றிவந்து பூசனை செய்யும். பூமியிலிருந்து மேற் செல்லச் செல்ல குறிப்பிட்ட தூரத்திற்குப்பின் சுவாசிக்கத் தேவையான காற்று கிடைப்பதில்லை புவியீர்ப்பு விசை இல்லையாகிறது என்ற இன்றைய ஆய்வுகளுக்குக் கட்டியம் கூறுவதுபோல இருக்கும் தொடர் ‘‘வறிது நிலை இய காயமும் என்பதாகும். அனைத்துக்கும் மேலாக இவற்றையெல்லாம் நேரில் சென்று அளந்ததுபோல் கணித்துச் சொல்வோரும் உள்ளனர் என்று சொல்லியிருப்பது புலவரின் காலத்தோடு ஒப்பு நோக்கி மதிக்கத் தக்கதாகும்.ஆகாயத்தில் பரலோகம் இருக்கிறது. சொர்க்கம் இருக்கிறது. முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். தேவேந்திரனும் முப்பெருங் கடவுளரும் தேவியரும் இருக்கிறார்கள் என்றெல்லாம் இன்றும் சொல்லி நம்பவைத்துக் கொண்டிருக்கும் வைதிகப் புராண மரபை அன்றே உடைத்தெறிந்திருக்கிறார் புலவர் முதுகண்ணன் சாத்தனார் இவரது பெயரைக் கொண்டே இவர் புத்தமதச் சார்பாளர் என்று கொள்ள இடமுண்டு. புத்தமதம் உள்ளிட்ட நாத்திக சமயங்கள் அண்ட அமைப்பியல் நியதிகளை வரையறுத்தன. அண்டத்தில் இயற்கையின் ஆட்சியை மதித்தன என்ற சட்டோபாத்யாயாவின் நிர்ணயிப்பையும் இதுபோன்ற கருத்துக்கள் மெய்ப்பிக்கின்றன.

நன்றி: ‘தீக்கதிர்’, 3.4.2017

-விடுதலை,3.4.17

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

சீர்திருத்தமும் இந்துமத ஸ்மிருதியும்


 
திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரி அவர்கள் தற்காலம் ஆலோசனையிலும் கமிட்டி விசாரணையிலும் இருந்து வரும் குழந்தை விவாகத் தடை மசோதாவைக் கண்டித்து ஒரு ஸ்ரீமுகம் வெளியிட்டிருக்கின்றார். அதை சுதேசமித்திரன் பிரசுரித்துள்ளபடி மற்றொரு பக்கத்தில் எடுத்துப் போட்டி ருக்கின்றோம். அதன் காரண காரியங்களைப் பற்றி ஆராயுமுன் திரு. சத்திய மூர்த்தி யார் என்பதையும், அவர் எந்த முறையில் வெளிப்படுத்தியிருக்கின்றார் என்பதையும் முதலில் கவனிப்போம்.
திரு. சத்தியமூர்த்தியை அவருடைய தனித்த ஹோதாவில் ஒரு சாதாரண மனிதர் என்பதாகச் சொல்லி விடலாமானாலும் அவருக்கு இம்மாதிரியான ஸ்ரீமுகங்கள் வெளியிட சந்தர்ப்பங்கள் அளித்ததும் அந்த ஸ்ரீமுகங்களை மக்கள் கவனிக்க நேர்ந்ததும், சில விஷயங்களிலாவது அவர் இந்திய மக்கள் பிரதிநிதி என்கின்ற தன்மை அடைந்திருக்கிறார் என்பதே அதாவது தேசிய அரசியல் இயக்கம் என்று சொல்லப் படுவதில் ஒரு குறிப்பிட்ட மனிதராகவும், சென்னை சட்டசபை என்பதில் ஜனப் பிரதிநிதி அங்கத்தினராகவும், அதிலும் படித்த மக்களின் பிரதிநிதியாகவும், அதாவது யுனிவர்சிட்டி பிரதி நிதியாகவும், சென்னை முனிசிபாலிட்டியின் ஒரு அங்கத் தினராகவும், மற்றும் பொது ஜனசேவை செய்கின்றவர் என்று சொல்லிக் கொள்ளும் கூட் டத்தில் சேர்ந்தவராகவும் இருக்கின்றார் என்பதே. அன்றியும், தன்னை ஒரு சீர்திருத்தக்காரர் என்றும், மதம், சமூகம் முதலியவைகளில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம்தான் என்றும் சொல்லிக் கொள்பவர்.
எனவே, இப்படிப்பட்ட ஒருவர், குழந்தைகள் புருஷன் பெண்ஜாதியான வாழ்வு நடத்தா திருப்பதற்கும், குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவம் மாறாததற்கு முன்பே பிள்ளை பெறும்படியான நிலைமையை உண்டாக்காமல் இருப்பதற்கும், மற்றும் மனித சமுகத்தின் அறிவு, சரீர வளர்ச்சி, பலம் முதலியவைகள் விர்த்தி அடைவதற்கும் அவசியமானதான மேல்கண்ட குழந்தை விவாகத் தடுப்பு மசோதா என்பதை எதிர்த்துப் போராடவந்து அதற்கு ஆதாரமாக பெரிதும் மதசம்பந்தமான ஆட்சேபனைகளையே எடுத்துக்காட்டி இருக்கிறார்.
இது மாத்திரமல்லாமல், மற்றும் இது போன்ற பல சீர்திருத்தங்களையும், மதத்தைச் சாக்காகக் கொண்டே ஆட்சேபித்து வந்திருக்கின்றார். இதற்கு உதாரணமாக இரண்டொன்றைக் குறிப்பிடுகின்றோம்.
அதாவது கொஞ்ச நாளைக்கு முன் சென்னை சட்டசபையில் திரு. முத்துலட்சுமி அம்மாளால் கொண்டுவரப்பட்ட சாமிபேரால் விபச்சாரத்திற்குப் பொட்டுகட் டும் வழக்கத்தடுப்பு மசோதாவையும் மதத்தைச் சாக்காகக் கொண்டே தடுத்து நின்றதும் யாவருக்கும் தெரிந்ததாகும். அந்தச் சமயத்தில் திரு. சத்தியமூர்த்தி அய்யர் சொன்ன ஆட்சேபனை, என்ன வென்றால் பொட்டுகட்டுகின்ற வழக்கம், கேட்டைத் தரத்தக்கதானாலும், அதை நிறுத்தச் சம்மதிப்பது மதத்தில் பிரவேசிப் பதாகும் என்றும், இன்று பொட்டுகட்டுவதை நிறுத்த ஒப்புக்கொண்டால் நாளை மற் றொரு சீர்திருத்தம் வரும் என்றும், ஆத லால் அதற்குச் சம்மதிக்க முடியாதென்றும் சொல்லி விட்டார்.
பிறகு சென்ற வாரத்தில், சென்னையில் நடைபெற்றுவரும் விபச்சாரங்களை தடுக்க ஒரு மசோதா கொண்டுவர முயற்சித்த போதும் இதுபோலவே தடைக்கல்லாய் நின்றதுடன் அவர் சொன்ன சமாதானம் என்னவென்றால், விபச்சாரிகள் எவ்வளவு தான் ஒழுக்க ஈனமாக நடந்துகொண்டாலும் அவர்களும் நமது சமூகத்தார் அல்லவா? அப்படியிருக்க அவர்களின் விபச்சாரத் தொழிலை நிறுத்தி விட்டால் பிறகு அவர்கள் ஜீவனத்திற்கு என்ன செய்வார்கள் என்று சொல்லி ஆட்சேபித்தாராம்.
இம்மாதிரியாகவே எவ்விதமான சீர்திருத் தங்கள் வந்த போதிலும் மதத்தின் பேராலும் சமுகத்தின் பேராலும் ஆட்சேபித்து அவைகள் நிறைவேற்றப்படாமல் போவதாயிருந்தால் பிறகு எந்த விதத்தில் தான் நமக்குக் கதிமோட்சம் ஏற்படக் கூடும்? அன்றியும் பராசரர் ஸ்மிருதியும் மனுஸ் மிருதியும் நமது வாழ்க்கைக்கும் மதத்திற்கும் ஆதாரமென்பதை நாம் சகித்துக் கொண்டு அதைப் பின்பற்றுவதென்றால், அதை விட ஈன வாழ்க்கை வேறு எங்காவது ஏதாவது உண்டா என்று கேட் கின்றோம். இப்பேர்ப்பட்ட இந்துமதம் என்பதும் அதனுட் பிரிவுகள் என்பதான சைவ வைணவ முதலிய சமயங்கள் என்பதும், அதன் ஆதாரங்களான வேதம், சாஸ்திரம், ஸ்ருதி, ஆகமங்கள் என்பவைகளும், நமது மோட்ச சாதனத்திற்கு ஏற்பட்டவை என்றும், உலகத்திலுள்ள மற்ற மதங்களுக் கெல்லாம் சிறந்தது என்றும் சொல்லிக்கொண்டு அச்சமயங்களைக் காப்பாற்ற வெளிவந்திருக்கும் வீரர்கள், சுயமரியாதை இயக்கம் இந்து மதத்தைக் கெடுக்கின்றது. வைணவ மதத்தை வைகின்றது, சைவ சமயத்தை ஒழிக்கின்றது என்று ஊளையிட்டு கொண்டிருக்கின்றவர்களே இம்மாதிரி சீர்திருத்தத்தைப் பற்றியாவது கடுகளவு கவலையாவது கொள்ளுகின்றார்களா என்பதைப் பொது ஜனங்கள் யோசித்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ளுகின்றோம்.
அன்றியும் மத சமயக்காரர்கள் என்பவர்கள் சம்பந்தன் சமணர்களைக் கழுவேற்றினது பொய்யா மெய்யா? முதலை தான் உண்ட பாலகனை 14 வருஷம் வரை வயிற்றில் வளர்த்து வெளியில் கக்கினதை ஒப்புக் கொள்ளுவாயா? மாட்டாயா  ராமன் கடவுளா மனிதனா? ராவணன் யோக்கியனா? ராமன் யோக் கியனா? சிவன் பெரியவனா, விஷ்ணு பெரியவனா? விஷ்ணுவுக்கு வடகலை நாமமா, தென்கலை நாமமா? சூரியனுடைய ரதத்திற்கு எட்டு குதிரையா? பதினாறு குதிரையா? விதி பெரியதா மதி பெரியதா? இதுபோன்ற விசயங் களில் மதபக்தியையும் அறிவு சக்தியையும் காண்பித்துக் கொண்டு சமயத் தொண்டையும், தெய்வத் தொண் டையும் செய்துகொண்டும், இம்மாதிரியான விஷயங்களிலெல்லாம் பார்ப்பனர்கள் சொன்னதை தெய்வவாக்கு என்பதாகவும், அதை மறுத்தால் தங்களுக்கு எந்த வித யோக்கியதையும் இல்லாமல் போய்விடும் என்று பயந்து கொண்டும் பாமர மக்களை மிருகங் களாக்கி விடுகின்றார்கள். ஆதலால் இம்மாதிரி மதமும் சமயமும் நமக்கு எதற்காக வேண்டும்? இவை மக்களுக்கு நன்மையளிக்கும் சமயமாகுமா? என்பதாக கேட்க ஆரம்பித்தால் அதை நாஸ்திகம் என்று சொல்லி விரட்டியடிக்கப் பார்க்கின்றார்களேயொழிய மனிதத் தன்மை அறிவுத் தன்மை என்பதை ஒரு சிறிதும் காட்டுவதே கிடையாது.
தவிர திரு. சத்தியமூர்த்தி, பால்ய விதவைகளின் கொடுமையையும் சிறு குழந்தைகள் பிள்ளை பெற்று தாயாகி விடுவதால் வரும் கெடுதியையும் நான் அறிவேன் என்று கொடுமைகளையும் கஷ்டங்களையும் ஒப்புக்கொள்ளு கின்றார்.
ஆனால் கூடவே அதன் கீழ் 12 வயதுக்குள் பெண் களுக்குக் கல்யாணம் செய்யாவிட்டால் பாவம் வரும் என்று பராசர ஸ்மிருதியில் சொல்லி இருக்கின்றது என்கின்றார். கொடுமையையும் கெடுதியையும் நீக்குவது பாவமாகுமானால் அந்தப் பாவத்திற்குப் பயப்படவேண்டுமா? என்றுதான் கேட்கின்றோம்,.
அன்றியும் திரு. சத்தியமூர்த்தி ஆதாரம் காட்டும் பராசர ஸ்மிருதியின் விவாகப் பிரகரணத்தில், 8 வயது பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் சுவர்க்க லோகத்தையும், 9 வயதுப்பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் வைகுண் டத்தையும், 10 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் பிரம்ம லோகத் தையும் அடைகிறான்; அதற்கு மேற்பட்டு பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் ரவுரவதி நரகத்தை அடைகிறான் என்று எழுதியிருக்கின்றது.
ஆனால், திரு. சத்தியமூர்த்தி 10 வயதுக்கு முன் கல்யாணம் செய்யும் வழக்கம் இப்போது நின்றுபோய்விட்டது என்று சொல்லுகின்றார். இந்தப்படி பார்த்தால் இப்போது பெண் பெற்றவர்கள் எல்லோரும் ரவுரவாதி நரகத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று தானே சொல்ல வேண்டும். எனவே இனி 16 வயதில் கல்யாணம் செய்பவர்களுக்குப் புதிதாகப் பாவம் ஏது என்று கேட்கின்றோம்.
தவிர திரு. சத்தியமூர்த்தி பயப்படுவதாக வேஷம் போடும் பராசர ஸ்மிருதியின் யோக்கியதையைக் கவனிப்போம்.
10 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுக்குக் கல்யாணம் செய்யாவிட்டால் ரவுரவாதி நரகத்தை அடைய வேண்டும் என்று சொல்லும் ஸ்மிருதியானது அதே ஸ்திரிகள் விஷயத்தில் சொல்லுவது என்ன என்றால், ஸ்திரிகள் பூமிக்குச் சமமானவர்கள். அவர்கள் குற்றம் செய்தால் தூக்ஷிக்கக் கூடாது. அவர்கள் என்ன தவறுதல் செய்தாலும் அவர்களை விலக்கிவிடக் கூடாது. சண்டாளன் வசித்த பூமியை எப்படிச் சில சுத்திகள் செய்து அதில் நாம் வசிக்கின்றோமோ, அதுபோல் ஸ்திரிகள் சண்டாள சம்பந்தம் வைத்துக் கொண்டாலும் அவர்களைச் சுத்தி பிராயச்சித்தம் செய்து ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கின்றது. அந்த பிராயச்சித்தம் என்னவென்று பார்ப்போமானால் அதாவது ஒரு பிராமண ஸ்திரீ தன் மனதறிந்து ஒரு சண்டாளனுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டால் சாந்திராயண கிருச்சிரம் செய்துவிட்டால் சுத்தியாகிறாள் என்று சொல்லியிருக் கின்றது. இது பராசர ஸ்மிருதி பிராயச்சித்த காண்டம் 7வது அத்தியாயம் 23வது சுலோகம்.
சாந்திராயண கிருச்சிரம் என்பது கிருஷ்ண பட்சம் முதல் அமாவாசை வரை யில் தினம் ஒரு பிடிசாதமாகக் குறைத்துக் கொண்டு வந்து ஒரு நாள் பட்டினி விரதமிருந்து, மறுபடியும் ஒவ்வொரு பிடி விருத்தி செய்து சாப்பிட வேண்டியது இது 7ஆவது காண்டம் 2ஆவது சுலோகம்.
ஒரு பிராமண ஸ்திரீ பாவ சீலர்களான சூத்தி ரர்களால் அனுபவிக்கப்பட்டால் அவள் பிரஜாபத்திய கிருச்சிரம் செய்வதாலும் ருது ஆவதாலும் சுத்தி அடைகின்றாள் என்று சொல்லுகின்றது (இது மேல்படி காண்டம் மேல்படி அத்தியாயம் 24ஆவது சுலோகம்)
பிரஜாபத்திய கிருச்சிரம் என்பது 3 நாள் காலையிலும் 3 நாள் மாலையிலும் புசித்து 3 நாள் யாசிக்காமல் வந்ததைப் புசித்து 3 நாள் உபவாசமிருத்தல் (இது பராசர ஸ்மிருதி 7ஆவது காண்டத்தில் 9ஆவது அத்தியாத்தில் சொல்லப்படுகின்றது.)
இதுவும் செய்வதற்குக் கஷ்டமாயிருக்கு மானால் 12 பிராமணர்களுக்கு சாப்பாடு போட்டால் போதும் (இதுவும் மேற்படி அத்தியாயம்.)
இன்னும் இதுபோலவே மகாபாதகம் என்று சொல்லும் படியான குருபத்தினியைப் புணர்ந்தவன் ஒரு பசுவையும் எருதையும் பிராமணனுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான் (மேற்படி காண்டம் அத்தி யாயம் சுலோகம் 13)
இன்னும் இதைவிட மகாபாதகமான அனேக காரியங்களுக்கும் ஒரு வேளை இரண்டு வேளை பட்டினி கிடப்பதும் பிரா மணனுக்குக் கொடுப்பதுமே பிராயச்சித்தமாய்ச் சொல்லப்படுகின்றது. அதிலும் பிராமணன் சூத்திரன் என்பதாகப் பிரித்து அதற்குத் தகுந்தபடி பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு வேதம் ஓதின ஒரு பிராமணன் ஒரு பசுவைப் புணர்ந்தால் ஒரு பசுவைப் பிரா மணனுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான். இதே காரியத்தை ஒரு சூத்திரன் செய்தால் 4 பசுவையும், 4 எருதையும் பிராமண னுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான் என்று சொல்லுகிறது.
(மேற்படி அத்தியாம் 14ஆவது சுலோகம்)
எனவே இப்பேர்ப்பட்ட காரியங்களுக் கெல்லாம் எவ்வளவு சுலபமாக பிராயச் சித்தம் சொல்லி இருக்கும்போது ஒரு பெண்ணை 12 வயது ஆன பிறகு பிறந்து கல்யாணம் செய்வதால் ஏற்படும் பாவத் திற்கு மிகவும் சுலபமான பிராயசித்தம் தானே இருக்கக்கூடும். ஆதலால் பராசர ஸ்மிருதியை கடவுள் வாக்கு என்றே நம்புகின்றவர்களுக்குக் கூட குழந்தை விவாகத் தடுப்பு மசோதாவில் பிரமாதமான கெடுதி ஒன்றும் வந்துவிடாது என்றே சொல்லுவோம். அதிகமான தண்டனை விதித்திருந்தாலும் அது பாலும் பழமும் மாத்திரம் சாப்பிட்டுக் கொண்டு ஒரு வேளை பட்டினி கிடக்கவேண்டும் என்று தான் இருக்கக் கூடும். ஆதலால் உண்மையானதும் அவசியமானதுமான சீர் திருத்தங்களை விரும்புகின்றவர்கள் மதம், சமயம், சாஸ்திரம், சாமி என்கின்ற பூச்சாண்டிகளுக்கு ஒரு சிறிதும் பயப்படக் கூடாது என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 21.10.1928
-விடுதலை,2.4.17